Pages

December 11, 2011

அன்புக்குரிய மனிதன்

92களில் அவர் ஒரு முரட்டு மனிதன். முன் கோபக்காரன்;. வணக்கம் சொன்னால் உன்னை நான் வணக்கம் கேட்னானோ? என சினப்பார்  இப்படித்தான் என் முன் அறிமுகமாகின்றார் அதனால் அவரோடு நான் என்றும் பேசியதில்லை. 1998ம் ஆண்டு காலப்பகுதிகளில் பாசல் தமிழ் மன்றத்தினால் மணிமேகலைப்பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தோம். இக் கண்காட்சி 2000ம் ஆண்டு காலப்பகுதி வரை நான்கு தடவை நடாத்தப்பட்டது. நான்கு தடவைகளும் தவறாமல் கண்காட்சிக்கு சமூகமளித்து புத்தகங்களை கொள்வனவு செய்யும் முக்கிய நபர்களில் இவர் முதன்மையானவராக இருந்தார். அவரோடு சற்றுப் பேச்சுக் கொடுத்தபோது அவரது ஆழ்ந்த தொலைநோக்குக் கொண்ட சிந்தனையும் தேடலைப் பற்றியும் சற்று அறிந்து கொண்டேன்.

இச் சம்பவம் அவர் மீது எனக்கிருந்த அபிப்பிராயத்தை சற்றுப் புரட்டிப் போட்டது. அதன் பின் காண்கின்ற போது புன்முறுவல் இடையிடையே வணக்கம் இப்படி தொடர்ந்தது அவருடனான எனது நட்பு.
2002களின் செப்டம்பர் பிற்பகுதி குருத்து மாதஇதழின் முதலாவது இதழை வெளியிட்டு வைக்கின்றோம். முதல் இதழின் வரவு நாம் எதிர்பார்த்தகைக் காட்டிலும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பலர் எம்மோடு இணைந்து செயற்பட ஆர்வம்கொண்டு எம்மோடு இணைந்து கொண்டனர்.

அப்போது எமது இதழின் இணையாசிரியர் செந்தூரன் என்னோடு தொடர்பு கொண்டு சொன்னார். ஒரு அண்ணை உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னவர் என்று சரி வரேக்கை கூட்டியாங்கோ என்றுவிட்டு அடுத்த இதழின் வடிவமைப்பில் மூழ்கிப்போகின்றேன். அன்று மாலை செந்தூரன் என்னை சந்திக்க வந்தபோது கூடவே அவரும் வருகின்றார். இதழ் தொடர்பில் பல விடயங்கள் உள்ளடக்கம் பற்றியெல்லாம் பல விடயங்களை உரையாடினோம்.
குருத்தின் சிறுவர் பகுதி முதல் இதழிலே சிறுவர் தோப்பு என அறிமுகமாகி வெளிவந்திருந்தது, அதனை அரும்பு என பெயர் மாற்றம் செய்தால் அழகாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என ஆலோசனை தந்து அப் பகுதியில் புதிதாய் இணைக்கப்பட வேண்டியவிடயங்களையும் தானே தொகுத்துத் தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதோடு மட்டும் நின்றுவிடாமல் எம் சமூகத்தில் புகுந்துகிடக்கும் மூடநம்பிக்கைகளையும் அறியாமைகளையும் கண்மூடித்தனங்களையும் நக்கலாக தோலுரித்துக் காட்டும் நோக்கோடு தத்துவத்தார் எனும் பகுதியொன்றினையும் தானே எழுத முன்வந்தார். அவர் செயற்பாடுகளில் முண்டாசுக் கவிஞனை நான் காண்கின்றேன்.

அவரது வரவு எமது இரண்டாவது இதழ் பல மாற்றங்களோடும் புதுப்பொலிவோடு வெளிவந்தது. எமக்கு பல தரப்பட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் வந்து குவிந்தன. தத்துவத்தார் பகுதி பெரு வரவேற்பினைப் பெற்றது. அன்று முதல் எனக்கும் அவருக்கும் இடையேயான உறவு வலுப்படத் தொடங்கியது.

இதழ் சிறப்பான ஆக்கங்களைத்தாங்கி வெளிவரத் தொடங்கியபோது சிறுவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தேன். 2003ம் ஆண்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. 2004ம் ஆண்டு இரண்டாவது தடவையாக நாம் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தபோது, அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவருக்கு எமது சிறுவர்பகுதியின் பெயரான அரும்பு எனும் பெயரிலே விருது ஒன்றினை வழங்குவோம் என்ற ஆலோசனையை முன்வைத்தார். அதன்படி 2004ம் ஆண்டு சகானா வசந்தன் என்ற மாணவிக்கு குருத்தின் உயரிய சிறுவர் விருதான முதலாவது அரும்பு விருது வழங்கப்பட்டது. தான் மட்டும் ஒத்துழைப்பு வழங்கினால் போதாதென்று தனது மனைவியையும் எமது இதழூடாக தொடர் கதையொன்றினை எழுதவைத்து ஒத்துழைப்பினை வழங்கினார்.

இலக்கியத்தால் ஏற்பட்ட நட்பு என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு அண்ணணாக என்னோடு கூட இருந்து எனது சரி, பிழைகளை நேருக்கு நேர் சுட்டிக்காட்டுவார். அவர் இது தவறு என சுட்டிக்காட்டிய சில தவறுகளை அன்று நான் திருத்திக் கொள்ளத்தவறியதால் பின்னாளில் அது குருத்து இதழின் வரவு தடைப்படும் நிலைக்குச் சென்றமை மறுக்க முடியாத உண்மை.
2004களின் நடுப்பகுதியில் குருத்து இதழை வெளியிட முடியாத அக புறச்சூழல்கள் எமக்கு ஏற்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டின் ஜனவரி வரையிலும் குருத்தின் செயற்பாடுகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மீள துயிர்க்கும் நோக்கோடு குருத்து TRX தமிழ் காற்று வானொலியின் இரண்டாவது அகவை நிறைவை முன்னிட்டான சிறப்பிதழாக வெளிவந்தது. அந்த இதழிலும் அவர் காத்திரமாகப் பணியாற்றினார். தொடர்ச்சியாக காலாண்டு சஞ்சிகையாக குருத்தினை நாம் வெளிக்கொண்டுவர நான் முடிவெடுத்தபோது என் கரம்பற்றி நின்று வலுச்சேர்த்தார். இதழ் வெளிவர அகச்சூழல் சரியாக இருந்தபோதும் புறச்சூழலில் சில முட்டுக்கட்டைகள் விழ சற்றுப் பொறுத்திருந்தேன். இதேவேளை குருத்து இதழ் ஊடக மையமாக உருப்பெற்று பல துறைகளிலும் செயற்படத் தொடங்கியது. 2010 முதல் மாணவர்களுக்கான போட்டிகள் மீள நடாத்தப்படத் தொடங்கியது. 2010இல் தனியே பேச்சுப் போட்டி மட்டுமே நடாத்தப்பட்டமையால் அரும்பு விருதினை வழங்க முடியாது போனது. 2011 முதல் பல தரப்பட்ட போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டு அரும்பு விருதுக்கான போட்டிகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. 2010ம் ஆண்டு இரண்டாவது அரும்பு விருதினை செல்வி சௌமியா சத்தியபாலா அவர்கள் பெற்றுக் கொண்டார். அந்த விருதினை அரும்பு விருதின் தந்தையே வழங்கிக் கௌரவித்தார்.

குருத்து இதழை இனி வெளியிடுவதில்லை என்ற முடிவான முடிவோடு நான் இருக்க என்னை தொடர்புகொண்டு இப்ப எனக்கு ஓய்வாக நிறைய நேரம் இருக்கிறது. 2012ம் ஆண்டு குருத்து வெளிவந்த பத்தாவது அகவை நிறைவு நாம் ஏன் 2012ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு இதழையாவது வெளியிடக்கூடாது எனக் கேட்டார். சரி வெளியிடுவோம் என அவரின் ஒத்துழைப்போடு பத்தாம் அகவை மலரின் பூர்வாங்க நடவடிக்கைகளிலே இறங்கியிருந்தேன். நாளை (11.12.2011) நாம் சந்தித்து இதழ் தொடர்பான மேலதிக விபரங்கள் பற்றி உரையாடிக் கொள்வோம். என்று என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொண்டார். அப்படி இருந்த வேளையில் இன்று (10.12.2011)என் தொலைபேசி தாங்கி வந்த சேதி என் அன்புக்குரிய அண்ணன், எமது இதழின் ஆலோசகன், அரும்பின் தந்தை, எமுத்தாளன் தத்துவத்தார் என்றும் சோழியூர் ஸ்ரீ என்றும் எங்கள் வாசக நெஞ்சங்களோடு உறவாடிய ஸ்ரீ துரைராஜ் மாரடைப்பால் மாண்டார் என்ற சேதி. விக்கித்துப்போய்  நிற்கின்றோம். அன்பு அண்ணனை ஆற்றல் மிகு ஆலோசகனை புலமை மிகு எழுத்தாளனை சமூகப் பணியாளனை இழந்து தவிக்கின்றோம். நாம். 

November 22, 2011

வாய்விட்டுக்கதறி அழவேனும் ஒரு தேசம் வேண்டும்.

ஈழதேசம் மிளிர
இன் உயிர் தந்தோரே?
சாவினை அணைத்தொரு
சத்தியம் செய்தோரே?
உங்கள் துயில் கலைத்து
துயிலெழும் நாளில்
வாய் விட்டுக் கதறி அழ
வக்கத்துப்போய் நிற்கின்றோம் நாம்

மாவீரரே!
உம் பெயர் சொல்லி அழ
தொலைத்த எல்லாவற்றோடும் - எம்
தன் மானத்தையும்
தொலைத்துவிட்டு நிற்கின்றோம் நாம்.

வாய் விட்டுக் கதறி அழும்
வல்லமை தான் இழந்து
நோய் பிடித்த உடலைப் போல்
சக்தி அற்று நிற்கின்றோம் நாம்

சோதிப் பிழம்பானவரே ! உமை
சுடரேற்றி தலை வணங்க
சுதந்திரமற்று நிற்கின்றோம் நாம்.

கார்திகைப் பூ எடுத்து உம்
கல்லறைகளில் தூவியழும் நிலை இழந்து
துன்பச் சுமை சுமந்து தவிக்கின்றோம் நாம்.

நாம் கூடி வாழ இல்லை
கூடி இருந்து உமை நினைத்து
வாய்விட்டுக்கதறி அழவேனும்
ஒரு தேசம் வேண்டும்.

வாரும் ஐயா ! இந்த
கார்த்திகை நாளில் ஒரு வரம் தாருமையா.

March 14, 2011

அழகிய அந்த மூன்று நாட்களை வரவேற்க்க காதிருப்போம்





சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரம்பரியத் திருவிழாவான வசந்த விழா ஒரு பற்றி பார்வை.. ஒலியில் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கடை கருத்துக்களையும் வாக்குகளையும் மறக்காமல் பதிஞ்சு விடுங்கோ....

February 28, 2011

கண்ணெதிரே ஈழத்திரையுலகு

இது வரை என் வாழ்வில் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட பல கலைநிகழ்வுகளில் பார்வையாளனாக, பங்காளனாக ஏன் ஏற்பாட்டா -ளனாகக் கூட இருந்திருக்கிறேன். ஆனால் இன்று(26.02.2011) சுவிற்சர்லாந்தில் நடைபெற்று நிறைவடைந்திருக்கக் கூடிய ஓர் நிகழ்வு எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்வையும் தந்திருக்கின்றது.


ஆம் லிப்ட் எனப்படும் பிரான்சை தலைமையகமாய் கொண்டியங்கும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் சுவிற்சர்லாந்தின் சூரிக் மாநிலத்தில் முதற் தடவையாக குறும்பட திரையிடல் நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது.
இந் நிகழ்வில் ஈழத் திரைத் துறை சார்ந்த இயக்குனர்கள், நடிகர்கள், பின்னணியில் நின்றோர் என பல படைப்பாளிகள் கலந்து தங்கள் குறும்படங்களை திரையிட்டிருந்தனர்.

பல உருவங்களிலும் பல வகைகளிலும் ஈழத்தமிழர்களின் திரைப்பட முயற்சி காலத்துக்கு காலம் தோற்றம் பெற்று பொருளாதாரரீதியில் முடங்குப்பட்டு வந்தாலும் இன்று நடைபெற்று நிறைவடைந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வு ஈழத்தமிழர்களில் திரைப்பட சங்கத்தின் பெயருக்கேற்ப (LIFT) படைப்பாளிகளை இனங்கண்டு மேலுயர்த்தும் பணி;யை சிறப்பாகச் செய்யும் என்ற நம்பிக்கையை தந்திருக்கின்றது.

அந்த நிகழ்வு ஆரம்பித்து மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர்தான் என்னால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடிந்தது. ஆதனால் முழுமையாக அங்கே திரையிடப்பட்ட குறும்படங்களை காண்கின்ற பேறு எனக்கு கிட்டவில்லை. ஆனால் ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நான் பார்த்த குறும்படங்களை வைத்துக் கொண்டே ஏனைவை பற்றிய கருத்தையும் நாம் கணித்துக் கொள்ளலாம்.

முதலாவதாக நான் பார்த்த குறும்படம் அவதாரம் நிறுவனத்தின் தயாரிப்பில் சதா பிரணவனின் இயக்கத்தில் வெளிவந்திருந்த தினப்பயணம் - பயம் என்கின்ற குறும்படம் பார்த்த அனைவர் முகத்திலும் ஈழத் தமிழரின் திரையுலகம் என்கின்ற கனவுலகம் வெகு தொலைவிலில்லை அதன் வாயில் தாண்டி உள் நுழைந்துவிட்டோம்  என்ற நம்பிக்கை ஒளியினைக் காணமுடிந்தது,

ஆம் அந்த குறும்படம் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பிரான்சில் நடைபெறும் ஒரு சம்பவத்தை மையக்கருவாக்கொண்டு பல விடயங்களை உணர்த்தி நின்றது. சிரிக்க வைத்ததோடு தமிழரின் இன்றைய ஒரே இலக்குக்காய் பல கோணங்களில் பிரிந்துகிடக்கும் நிலையைபற்றி சிந்திக்கவும் வைத்தது.

அடுத்து றமணாவின் இயக்கத்தில் செம்மலையான். போராளிகளுக்கும் இராணுவத்துக் இடையே நடைபெறுகின்ற போர்களக் காட்சியொன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம். ஆழகிய காட்சிப்பதிவும் கதை நகர்த்தலும். பிரான்சு தேசத்தின் காடொன்றில் தத்ரூபமான காட்சிப்படுத்தல் மேலைத்தேய தொழில்நுட்பத்துக்கு நிகராக குறைந்த வளங்களைக்கொண்டு எம்மாலும் முடியும் என்பதை நிரூபித்து நின்றது.   

அடுத்து மின்படிமங்களின் தயாரிப்பில் தயாளனின் இயக்கத்தில் வெளிவந்த குட்டி இதயம் இது அனைவர் இதயங்களை தொட்டுச் சென்றது. கள்ளம் கபடிமில்லாத வெள்ளைமனம் கொண்ட குழந்தைகளின் உள்ளத்தோடு நாமும் சேர்ந்து அந்த குழந்தைகளாகினோம் அந்த நிமிடங்களில்.

அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு.

இறுதியாக திரையிடப்பட்ட பாஸ்கரின் எனக்கும் உனக்கும் குறும்படம் கதையல்ல உண்மையில் நிஜம். எங்கள் தாயகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளை அழகான திரை நகர்வுடன் சொல்லியிருந்தார். அங்கு நடைபெறும் கொடுமை இங்கே எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. போரின்  வலி தாயகத் தமிழனே உனக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் எமக்கும்தான் என்பதை உனக்கும் எனக்கும் திரைப்படம் வலியோடு உணர்த்தி நின்றது.

மண்டபம் நிறையவில்லை. ஆனால் வந்தவர்கள் மனம் நிறைந்திருந்தது. ஒரு தமிழக திரைப்படக் கலைஞர் கலந்து கொள்கின்ற நிகழ்வெனில் முண்டியடித்து கலந்து கொள்ளும் எம்மவர்கள் எங்கள் மத்தியில் தோற்றம் பெறும் எங்களின் கலைஞர்களின் படைப்புகளுக்கு ஆக்கபூர்வமான ஆதரவினை வழங்க பின் நிற்பது மனதுக்கு வலியை தந்தது.

ஒரு தமிழக நடிகன் ஒரு நடிகையுடன் விடுமுறை சென்றான் என்றால் அதையே பெரிய செய்தியாக்கும் எமது ஊடகங்கள் எங்களின் கலைஞர் ஒரு படைப்பை வெளியிட்டான். ஒரு குளும்படத்தை திரையிட்டான் என்ற செய்திகளை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலை மாறும் காலம் தொலைவிலில்லை. ஈழத்தமிழர் மத்தியில் பல முழுநீளத் திரைப்படங்கள் குறுகிய காலத்துக்குள் வரும் என்கின்ற நம்பிக்கையையும் அந்த நிகழ்வு தந்திருந்தது.

February 26, 2011

விடுப்பு சுப்பரும் புலத்தில் இன அடையாளமும்

வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே? சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன்.

February 18, 2011

விடுப்புச் சுப்பரும் சாத்திரியாரும்

வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே?சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன்.


February 13, 2011

விடுப்பு சுப்பரும் காதலர் நாளும்

வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே?சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன்.

January 25, 2011

விடுப்பு சுப்பரும் பொங்கலும்

வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே?
சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன். எனக்கு பாருங்கோ பிள்ளையள் இந்தக் குளிர் ஒத்துவருகுதில்லை. அதாலை ஒரே உடம்பு நோவும் தடிமனும் காச்சலும். சரி ஒருக்கா மருந்தெடுத்துக் கொண்டு வருவம் எண்டு வந்தன். ஆஸ்பத்திரியாலை வெளியிலை வந்தால் எங்கடை பெடியள் நாலைஞ்சுபேர் உதிலை நிண்டாங்கள்; என்னைக் கண்டோன்ணை ஓடியந்து ஐயா நாங்கள் ஒரு ரேடியோ நடத்திறம் நீங்களும் வந்து அதிலை உங்கடை கருத்துகளை சொல்ல வேணும் எண்டு நிண்டாங்கள். சரி எங்கடை பொடியள்தானே அவங்கள் செய்யிற நல்ல விசியங்களுக்கு ஆதரவு குடுக்கிறது தானே எங்கடை கடமை எண்டு நினைச்சுப்போட்டு எட தம்பியவை என்னெடா நான் செய்ய வேணும் எண்டு கேட்டன். சரி ஐயா பொங்கல் வந்தது அதைப் பற்றி ஏதன் சொல்லுங்கோவன் எண்டாங்கள்.  எனக்கும் பிள்ளையள் மைக்கிலை கதைக்கிறதெண்டா வலு புழுகம் பாருங்கோ. கிடைச்ச மைக்கை ஏன் விடுவான் எண்டுபோட்டு இப்ப உங்களோடை கதைக்க வெளிக்கிடுறன். விடுப்புச் சுப்பர் கதைச்சா அது சில நேரம் விவகாரமாகிப் போயிடும்.

அதைவிட்டுட்டு பிள்ளையள் விசியத்துக்கு வருவம். எல்லாருக்கும் முதலிலை என்ரை பொங்கல் வாழ்த்துக்கள். என்ன மாதிரி பிள்ளையள் பொங்கல் எல்லாம் எப்பிடிப் போச்சுது. நல்லாத்தான் கொண்டாடி இருப்பியள் எண்டு நினைக்கிறன்.


பொங்கல் எண்டோன்ணைதான் எனக்கு ஒரு விசியம் ஞாபகத்துக்கு வருகுது. அண்டைக்கு இப்பிடித்தான் பொங்கலண்டு என்ரை பேத்தி வந்து என்னைக் கேட்டாள் ஏன் பொங்கல் கொண்டாடுறது எண்டு நான் சொன்னன் சூரியனுக்கு நன்றி செலுத்துறதுக்குதான் பிள்ளை கொண்டாடுறது எண்டு. பின்னை அவள் கேட்டாள் அப்பிடியெண்டா என்னத்துக்கு தாத்தா எங்கடை அம்மா படத்தட்டிலை இருக்கிற பிள்ளையாருக்கும் லக்சுமிக்கும் முருகனுக்கும் பொங்கிப் படைச்சவா எண்டு. எனக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை பிள்ளையள் உங்களிலை ஆருக்கன் பதில் தெரிஞ்சா எழுதியனுப்புங்கோவன்.

இப்பிடித்தான் அண்டைக்கு பொங்கலுக்கு முதல்நாள் என்ரை மோள் சொன்னாள் உதிலை தமிழ்க் கடையிலை போய் பொங்கல் சாமான் எல்லாம் வாங்கியாங்கோ எண்டு அங்கை போனன் பொங்கல் புதிரோ புதினமோ எண்டு ஒரு பொட்டீக்கை ஒரு சட்டி அதுக்கை எல்லாம் பொட்டலம் பொட்டலாமா கொஞ்சம் கொஞ்சமா கட்டி நல்ல சுகமான வேலை பாருங்கோ பொங்கல் சாமான் தேவையெண்டா தேடி மினைக்கெடாமல் அந்தப் பெட்டியிலை ஒண்டை தூக்கியர வேண்டியதுதான்.  
  
ஊரிலை பாருங்கோ பொங்கலெண்டு சொன்னா அது பெரிய கொண்டாட்டம் பாருங்கோ. ஒரு கிழமைக்கு முன்னமே ஊரே அல்லோலை கல்லோலைப் பட்டுப்போகும். பொங்குறத்துக்கு மண்வெட்டி புது அடுப்புச் செய்து பாத்துப் பாத்து தட்டித் தட்டி பாணை வேண்டி. சுன்னாகச் சந்தைக்கோ மருதனாமடச் சந்தைக்கோபோய் நல்ல பிலாப்பழமாப் பாத்தெடுத்து பளையில இருந்து வியாபாரிமார் கொண்டாற தேங்காய் பாத்து தட்டி நல்ல முடி பாத்து வேண்டியந்து மஞ்சள் இஞ்சி இலை தேடி எடுத்து மாவிட்டபுரத்து கொழுந்து வெத்திலை தெரிஞ்செடுத்து வெடி கொழுத்தி பொங்குற திசை பாத்து பொங்கலை கொண்டாடிப்போட்டு இஞ்சை வந்து காஸ் அடுப்பிலையும் கறண்ட் அடுப்பிலையும் நாலு சுவத்துக்குள்ளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறம்.

ஏதோ பிள்ளையள் இஞ்சினை இப்பிடி இந்தளவுக்கெண்டாலும் பொங்கலைக் கொண்டாடுறது மகிழ்ச்சி பாருங்கோ. இந்த நடமுறையளும் இஞ்சினை இல்லையெண்டா இன்னும் கொஞ்சக்காலத்திலை சூரிய வடிவிலை ஐசிங்கிலை கேக் செய்து கத்தியாலை வெட்டி கரண்டியாலை சாப்பிட்டுத்தான் எங்கடை வருங்காலச் சந்ததி பொங்கல் கொண்டாடுங்கள். சரி பிள்ளையள் அப்ப பிறகென்ன இனி அடிக்கடி சந்திப்பம்தானே அப்ப கனங்க விடுப்புகளை கலந்து பேசுவம். சரி பிள்ளையள் அப்ப நான் வரப்போறன்.  
    
பிள்ளையள் இஞ்சை உரை நடை ஒலிச் சித்திரத்தின்ரை ஒலிவடிவத்தையும் கேக்கலாம்.கேட்டுட்டு உங்கடை கருத்துகளையும் பதிஞ்சு விடுங்கோ.



January 13, 2011

எனது அன்புக்குரிய ஆசான்

1991ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு சுழலும் கால ஓட்டத்துக்கு ஏற்ப நானும் அழைத்து வரப்பட்டேன். அப்போ எனக்கு 11 வயது. புலம்பெயர்ந்து இங்கு வந்ததும் எனக்கும் என் தாய்த் தமிழுக்கும் இடையேயான உறவு இனி இல்லை. என் தமிழைப் படிக்கின்ற பேறு எனக்கு இல்லை. அப்படியான ஒரு நிலை. அந்த வேளையில்தான் நான் சுவிற்சர்லாந்தில் குடிபுகுந்து மூன்று மாத காலத்தில்  பாசல் மாநிலத்தில் முதலாவது தமிழ்ப் பாடசாலை ஆரம்பமாகின்றது. முதல் நாள் வகுப்பில் கல்வி கற்க வந்த முப்பது மாணவர்களுடன் நானும் ஒருவனாய் அமர்கின்றேன். 
நீங்கள் ஊரிலை எத்தினையாம் வகுப்பு வரைக்கும் படிச்சனீங்கள் என அன்பான குரல் ஒன்று என்னை வினவுகிறது. ஆண்டு 6 வரைக்கும் படிச்சனான் என்று நான் சொல்ல இனி நீங்கள் என்னட்டைதான் தமிழ் படிக்கப் போறீங்கள் என்று அந்த அன்பான அமைதியான குரல் எனக்கு சொல்லிவிட்டு பாடம் நடத்தத்  தொடங்கியது.

அன்று முதல் அந்த அன்பான குரலுக்குரியவர் என் ஆசானாய் மட்டும் இருந்து தாய்மொழியை மட்டும கற்பிப்பதோடு நின்றுவிடாது என் தனிப்பட்ட வாழ்விலும் நான் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு என்னை செதுக்குகின்ற சிற்பியாயும் திகழ்ந்தார்.
அன்போடு ஒரு நண்பனைப் போல அருகிருந்து அறிவுயை  கூறிடுவார். பதின்ம வயதில் இளையோர் பாதைமாறிப் போவது இயல்பு அந்த வயதில் என்னை தமிழ் மீது பற்றுக்கொள்ள வைத்து என்னை சிறந்த இளவலாய் என்னையொத்தவர் மத்தியில் சீர்தூக்கி வைத்த ஒரு சிறந்த பண்பாளன். அது மட்டுமன்றி அந்த பாடசாலைக்கு நிர்வாகமொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்காத காலத்தில் அந்த பள்ளியின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் தன்னோடு இணைந்து நிர்வகிக்கின்ற பெரும் நிர்வாகப் பணியையும் பதின்ம வயதிலேயே எனக்கு தந்து என்னுள்ளே நிர்வாகத் திறனினையும் வளர்த்தெடுத்தார் அந்த அன்புக்குரியவர். பின்னை நாளில் என்னால் பலவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குரிய ஆளுமையை என்னுள் வளரத்தெடுத்தவர் அந்த அன்புக்குரியவர்.

தமிழ் மொழியில் எழுத்துப் பிழைகளை நான் விடுவது மிகவும் அரிது. ஒரு நாள் தமிழ் இலக்கணம் படிக்கின்ற வேளையில் திணைகளைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தோம் அப்போது உயர்திணை என்பதை உயர்தினை என எழுதிவிட்டேன். அதை கவனித்த எனது ஆசான் 100 தடவைகள் உயர்திணை என சரியாக எழுதுமாறு தண்டனை வழங்கி விட்டார். பின்னர் தனிப்பட்டரீதியில் என்னை அழைத்து இனிவரும் காலங்களில் தமிழ்மொழியில் எழுத்துப் பிழை  விடக்கூடாது அதற்காகத்தான் அந்தத் தண்டனையை வழங்கினேன் எனக் கூறினார்.

எங்கள் பாடசாலையால் நடாத்தப்படும் வாணி விழா மிகவும் முக்கியமானது. ஏனெனில் பாசல் மாநிலத்தில் சிறுவர்களின் நிகழ்வுகளை உள்ளடக்கி நடைபெற ஆரம்பி;த்த முதலாவது நிகழ்வு இதுவாகும். வாணி விழா காலம் நெருங்க நெருங்க எங்கள் மனங்கள் விழாக் கோலம் பூணும். ஓவ்வொரு ஆண்டும் எங்களோடு கலந்தாலோசித்த பின்னர்தான் நிகழ்வுகளுக்கான எற்பாடுகளை செய்வார். நிகழ்வுகள் எங்களால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருப்பார். ஒரு முறை எங்கள் பள்ளியில் நாடகம் ஒன்றை நாமே எழுதி நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அந்த நேரத்தில் எங்கள் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் நாடகம் ஒன்றை எழுதியிருந்தார். நானும் ஒரு நாடகத்தை எழுதியிருந்தேன் தவறுகள் என்ற பெயரில் அந்த நாடகத்தை பார்த்த எனது ஆசான் என்னை அழைத்து பாராட்டி  எனது நாடகத்தையே தெரிவு செய்து தானும் அந்த நாடகத்தில் சில திருத்தங்களைச் செய்து எம்மை நடிக்க வைத்து எம்மை கௌரவப்படுத்தினார். ஒரு பதினாறு வயது இளைஞன்தானே இவனுக்கு நான் ஏன் மதிப்புக் கொடுப்பான் என்று எண்ணாமல் எங்களுக்குள் இருந்த திறமைகளை இனங்கண்டு தட்டிக்கொடுத்து வெளிக்கொணர்வதில் அந்த அன்புக்குரியவர் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை.
  
அப்படி எனக்கு தமிழ்மொழி மீது பற்றுதலை ஏற்படுத்திய எனது அன்புக்குரிய ஆசான் தனது சுயவிருப்பில் பாடசாலை நிர்வாகத்திலிருந்து வெளியேறிக் கொண்டார்.

பின்னர் அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு குறைந்து போயிற்று. எங்காவது அவரை காண்கின்ற போதினில் தாய்ப்பசுவைக் கண்ட கன்று போல் என் மனம் மகிழந்து .துள்ளும் பதிலுக்கு அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் அவரின் நிரந்தர அடையாளமான உதடு விரியாத புன்னகையும் அன்பான பேச்சும். என்றும் அவர் அதிர்ந்து பேசி நான் அறிந்;ததில்லை.
கடந்த பல மாதங்களாக என் அன்புக்கினிய ஆசானை நான்  காணவில்லை. கடந்த சில நாட்களாக ஏதோ இனம்புரியாமல் என் ஆழ் மனம் என் ஆசானை தேடியது. தற்போது நான் பணியாற்றம் வானொலியினால் நடாத்தப்படுகின்ற ஆண்டு விழாவின் வேலைத் திட்டங்களை என் தலையில் சுமந்திருப்பதால் நிகழ்வு முடிவடைந்ததும் என் ஆசானை சந்திக்க வேண்டும் என்ற பேரவாவோடு உறங்கப் போயிருந்தேன.; மறுநாள் காலை என்றும் போல் புலரவில்லை. என்னை துயிலெழுப்பிய தொலைபேசி அழைப்பு எனக்காய் காவி வந்த சேதி என் அன்புக்கினிய என் ஆசான் நல்லதம்பி தயாபரன் தன் 45ம் வயதில் மாரடைப்பால் மாண்ட சேதி. உண்மையில் விக்கித்துப் போனேன்.

மனித வாழ்வில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது நித்தமும் நிகழ்கின்றது. எம்மோடு  நெருங்கிய பழகிய பலரது மரணம் உடன் எமக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் பின்னர் இயற்கையின் நியதியென்று எம்மை நாமே தேற்றிக் கொள்ளும் மனத் தைரியத்தை எமக்கு வழங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்துவிடும்.

ஆனால் சிலரது மரணமோ எம் ஆழ் மனம் வரை நுழைந்து இயற்கையின் நியதியென்பதையும் ஏற்றுக் கொள்ளாது எமக்குள் இனம் புரியாத சோர்வை தாக்கிக் கொள்ள முடியாத வலியை தந்து விடுவதுண்டு.

அப்படி என்னைப் பாதித்த மரணத்தின் கதைதான் இன்றைய பதிவு.

January 4, 2011

வாழும் போதே கௌரவிப்போம்.

நூலகவியலாளர் என்.செல்வராஜா பல தடவை என்னோடு உரையாடிய போதிலும் எமது குருத்து இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதிலும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விடயம் வாழும் போதே கௌரவிப்போம். அது தான் இன்றைய என் பதிவின் தலைப்பும் உள்ளடக்கமும்.

மகாகவி பாரதியின் இறப்பின்போது வெறும் பதின்நான்கு பேர்தான் அவனது இறுதி ஊர்வலத்தில். ஆனால் இன்று மகாகவி இன்று வாழ்ந்திருந்தானானால் அவன் காலடியில் இந்த வையகம்.

வாழும் போது ஒருவன் செய்த இழி செயலுக்காய் தூற்றுகிறோமோ அதைவிட ஒருவன் செய்யும் நல்ல விடயங்களை சீர் தூக்கிப் பார்த்து அவனுக்குரிய கௌரவத்தை அவன் வாழும் காலத்திலேயே அவனுக்கு கொடுக்க வேண்டும். ஏன்ற நூலகவியலாளரின் கருத்தோடு என்றும் எனக்கு ஒத்த கருத்துண்டு.

அதனால்தான் எத்தனையோ பாரிய வேலைப்; பழுக்களுக்கு மத்தியில் இந்தப் பதிவை எழுதுகிறேன். $

அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கக் கூடிய ஓர் இசைப்பேழை சூரியோதயம். இது ஒரு ஈழத்தமிழ் மற்றும் தமிழக கலைஞர்களின் கூட்டு வெளியீடு.

இதில் வெயிவந்திருக்கும் பாடல்களை ஜோதி அவர்கள் எழுதி தமிழக பின்னணிப்பாடகர்கள் திரு. ஏச். ஆனந்தநாராயணன், திருமதி ராதா பத்ரி ஆகியோர் பாடியுள்ளார்கள். வேங்கடசுப்பிரமணியன் என்பவர் இசையமைத்துள்ளார். சுவிஸ் அன்னை வெளியீட்டகத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த இசைப்பேழையில் வெளிவந்த பாடல்களை யாத்த கவிஞர்  ஏற்கனவே இரண்டு இசைபேழைகளை வெளியிட்டிருக்கின்றார். அவை இரண்;டும் பக்திரசம் சொட்டும்  பாடல்களை உள்ளடக்கியவையாக இருந்திருக்கின்றன. இந்த இசைப்பேழையோ அவற்றிலிருந்து சற்று வேறுபட்டு தமிழை துதிப்பனவாக தமிழுக்காய் தம் உயிர் தந்தவர்களை நினைப்பவையாக அமைந்துள்ளன.

குறிப்பாக இந்த இசைப் பேழையின் அனைத்துப் பாடல்களும் அனைவரையும் ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தாலும் எனது கண்ணோட்டத்தில் சில பாடல்களை கோடிட்டுக்காட்ட முடியும்.
குறிப்பாக இரண்டாவது பாடலான வந்தனங்கள் சொல்லி எனத் தொடங்கும் பாடல் என் மனதில் மட்டும் அல்ல பலரது மனங்களிலும் நீண்ட காலமாக இருந்து வந்த ஓர் இடைவெளிளை நிரப்பியிருக்கின்றது. அதாவது எம்மவர்களின் கலை நிகழ்வுகள் பலவற்றிலும் சம்பந்தமில்லாத பாடல்களே வரவேற்புப்பாடலாக ஒலிபரப்பாகியிருக்கின்றன. அந்தக் குறையை தீர்க்கும் முகமாக தேன்தமிழ் வரிகளில் இனிய தமிழிசையூட்டலுடன் அந்தப்பாடல் உருவாகியிருக்கின்றது. இனி நடைபெறும் தமிழர் நிகழ்வுகளில் அந்தப் பாடலே வரவேற்புப்பாடலாகவோ அல்லது வரவேற்பு நடத்துக்குரிய பாடலாகவோ இருக்கக்கூடியதென முன்மொழிகிறேன்.

அதே போல் ஆறாவது பாடல் நான் ஒரு பொம்மை என்கின்ற பாடல் மெல்லிய இளையோடிய சோகத்தோடு ஈழத்தமிழரின் வாழ்வியலை ஜந்து நிமிடத்துக்குள் அளந்திருக்கிறார். இந்தப் பாடல் குறளுக்கு ஒப்பானது.
புத்தாவது பாடல் இது வடிவேலனை காணாமல் தேடும் பக்தர்களின் குரலாய்  ஈழத்தமிழரின் இன்றைய எதிர்பார்ப்பை மனோநிலையை பிரதி பலிக்கின்ற பாடல்.

பதினொராவது மற்றும் பதின்நான்காவது பாடல் எங்களின் குழந்தைகளுக்கான பாடல் இலகு தமிழில் இனிய இசையில் குழந்தைகளுக்கு ஏற்றால்போல் அமைக்கப்ட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் கவரவேண்டும் என்ற கவிஞரின் எண்ணம் நிறைவேறியுள்ளது.

கவிஞரின் பிறந்த மண்ணின் இயல்பான சிறப்பு அவரின் கவிவரிகளில் இழையோடியுள்ளது. ஆம் செந்தமிழ் செழித்தோங்கும் இணுவை மண்ணின் உலகம் போற்றும் உத்தமக் கவிஞன் வித்துவான் வீரமணி ஐயரின் அயல்வீட்டவர் என்பதை இவரின் வரிகள் உணர்த்திநிற்கின்றன.