Pages

March 2, 2012

ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம்.

பேதங்கள் தொலைப்போம் -
எங்களுக்காக தம்மை தந்தவர்கள்
பாதங்கள் தொழுது வேண்டுகிறோம்
எங்களுக்குள் இருக்கும்
பேதங்கள் தொலைப்போம்.

தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும்
தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய
தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற
பேதங்கள் தொலைப்போம்.

ஒன்று பட்ட ஓர் இனமாய்
ஒருங்கிணைந்து செயற்படுவோம்
உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி
ஒளி ஏத்தி வைத்த தீபமதை
சத்தியம் செய்து காத்து வைப்போம்.

அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான்
அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று
அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம்
அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம்
அடிமை வாழ்வையும் பிரிவினையையுமா
ஒரே ஒருமுறை சிந்திப்போம்
ஓரணியில் சந்திப்போம்.