Pages

April 5, 2012

மலையை மடு விமர்சிப்பதா???


மலையை மடு விமர்சிப்பதா???
எனக்கும் உங்களுக்கும் இடையில்
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரை
பிறப்பில் இடைவெளி
ஆதலால் ஐயா... என்று அழைப்பேன்.
மற்றப்படி எனக்கும் உங்களுக்கும்
இடையே உள்ள உறவு நெருங்கிய நட்பு.
பதின்ம வயதில் நான் இருந்தபோது பழுத்த பழம் நீங்கள்
தோற்றத்தில் மட்டுமல்ல இலக்கிய, அரசியல், சமூகப் பணிகளிலும்
ஒரு விமர்சகனாய் தான் முதன் முதலாக
என் முன் அறிமுகமானீர்கள்
ஒழிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி
உரத்து உரைத்திடும் உங்கள் குணத்தால்
எம் நட்பு மலர்ந்தது

உங்கள் மகனின் நண்பனாய்
முதன் முதலாய் உங்கள் இல்லம் வந்த நான்
பின்னர் வந்த அத்தனை தடவையும் - உங்கள்
நண்பனாய்தான் வந்து சென்றேன்.
இலக்கியத்தில் ஆரம்பித்து அரசியல்வரை
மணிக்கணக்கில் அழவளாவுவோம்
சில சமயங்களில் கருத்து மோதல்கள் சீண்டல்கள் - அந்த
சீண்டல்கள்தான் என்னையும் சிந்திக்க வைத்தது
சிறப்பான சில ஆக்கங்களையேனும் படைக்க வைத்தது.
என் எழுத்துக்களுக்கு விமர்சகனாக மட்டுமல்லாமல்
வாசித்து ரசித்து ரசிகனாகவும் நீங்கள் இருந்துருக்கிறீர்கள்
ஒரு முறை நீங்கள் என்னை தொலைபேசியூடாய்
தொடர்பு கொண்டபோது
வையுங்கள் ஐயா நான் எடுக்கிறேன் என்றதும்
வாழ்த்தும் பாராட்டும்
தேடி எடுத்துச் சொன்னால்தான் பெருமை என்று
பத்திரிகையில் வந்திருந்த என் ஆக்கம் ஒன்றைப் பற்றி
பாராட்டித் தள்ளினீர்களே
தொலைதூரக் கனவுகள் உங்கள் தொடர் நவீனம்
வெளிவந்தபோது தபாலில் நூலை அனுப்பி விட்டு – என்
விமர்சனத்தை எதிர்பார்ப்பதாய் மடல் ஒன்றும் வரைந்திருந்தீர்கள்
விக்கித்துப் போனேன்.
மலையை மடு விமர்சிப்பதா???

அதை உங்களிடமே முன்மொழிந்தபோது
உங்களால் அது முடியும்
அதனால்தான் எதிர்பார்க்கிறேன் என்றீர்கள்

தவறுகள் யார் விட்டாலும் தட்டிக் கேட்கும் நீங்கள்
திறமைகள் எங்கிருந்தாலும் தட்டிக் கொடுக்கவும் தவறியதில்லை

உங்களை திறமை மிகு ஆசானாய்
ஆற்றல் மிகு படைப்பாளியாய்
உண்மை தவறாத ஊடகனாய்
மனித நேயம் மிகு மனிதனாய்
பற் பல அவதாரம் கண்டேன் உங்களில்
வாழ்வினிலே இப்படியும் ஒரு பக்கம் உண்டென்று
அநுபவரீதியாய் புரிய வைப்பதற்கா
எமை விட்டுப் பிரிந்து சென்றீர்???
 முனைவர் நாகேசு இராசலிங்கம் (சக்கரவர்த்தி)
(எழுத்தாளர், பிரபல நாடக ஆசிரியர், பிரபல பத்திரிகையாளர், தமிழக, ஈழத்து பத்திரிகைகளின் முன்னோடி)
அவர்கள் 31.03.2012 இயற்கை எய்தியபோது இரங்கல் நிகழ்வுக்காய் வடித்த இரங்கல் பா.