Pages

August 26, 2012

எங்கள் ஊரின் அடையாளம்

காங்கேசன் துறைவீதியில்
இணுவைப்பதியின் எல்லையை
இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால்
ஊரின் நடுவில்
உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம்.
புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு
புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம்.

சீனிப் புளியடி
பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் .

எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான்
புவி எங்கும் அறிமுகம்
குடை போல விரிந்த மரம்
குளிரோடு தந்த நிழலில்தான்
இடைவேளையில் அம்மா கட்டித் தந்த
இடியப்பமும் முட்டைப் பொரியலும்
கவளமாய் களம் இறங்கும்.

வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த
மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு
தொண்டை தண்ணி வத்த ச ப
சொல்லித் தந்தும் அங்குதான்.
கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான்
உடற்பயிற்சி வேளை முடிய
உற்சாகம் தேடி சாய்ந்து இருந்து கதை பேசுவதும் அங்குதான்
பாலசிங்கம் வாத்தியார்
தான் படித்த கதைகளையெல்லாம் - நாம்
வாய் பிளந்து கேட்டிருக்க சுவை கலந்து சொல்வதும் அங்குதான்.

எத்தனை முறை
எங்களிடம் கல்லடி பட்டிருக்கும்
அத்தனை முறையும் தந்தது
நாவினிக்கும் சீனிப் புளியதைத்தான்

போன முறை ஊர் போனபோது
எனக்கு நாலாம் வகுப்பு  படிப்பிச்ச
பரஞ்சோதி மாஸ்ரர்தான்
பள்ளியின் அதிபராய் இருந்தார்.
அந்த மர நிழலில்தான் மணிக்கணக்காய்
அமர்ந்திருந்து கதை பேசினோம்
இந்த முறை போன போது பெருத்த ஏமாற்றம்
அவரும் இல்லை அந்த மரமும் இல்லை.....