Pages

March 7, 2017

சுவிசில் பூமிஅதிர்வு


நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாதபோதிலும் பல பகுதிகளிலும் சிறு அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள சுவிசின் பிரபல சஞ்சிகையான பிளிக் அடுத்த பெரும் அதிர்வு எப்போ என கேள்வியை எழுப்பியுள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் நில அதிர்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுவிற்சர்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் 1356ம் ஆண்டு ஒக்டோபர் 18 ந் திகதி ஏற்பட்ட அதிர்ச்சியே அதிக அழிவுகளை ஏற்படுத்திய அழிவாகும்.

இவ் அதிர்வு பாசல் மாநிலத்தின் றைனாக் பகுதியில் 7 றிக்டர் அளவில் ஏற்பட்டு பல பகுதிகளை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு 2000 பேர் வரையில் இறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. றைனாக் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள சிலுவை இன்னமும் உள்ளது.

பாசல் நகரின் மையத்திலுள்ள முன்ஸ்ரர் தேவாலயமும் பேரழிவுக்கு உள்ளானதாகவும் எட்டு நாட்கள் வரையில் நகரின் பல பகுதிகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்ததாகவும் பதிவுகள் உள்ளன.

மீண்டும் ஒரு பேரழிவை சுவிற்சர்லாந்து எதிர்கொள்ளலாம் என நிலவியல் நிபுணர்களின் ஆய்வுகள் சொல்கின்றன.

படம் 1

சுவிற்சர்லாந்தில் பூமிஅதிர்ச்சி நடைபெற வாய்ப்புள்ள பிராந்தியங்கள்.

படம் 2

06.03.2017 இரவு பூமிஅதிர்ச்சி ஏற்பட்ட பகுதி.

படம் 3

1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி பற்றி சொல்லும் ஓவியம்.

படம் 4

1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோருக்காக றைனாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலுவை.

படம் 1 இல் வட பகுதியில் நான் வாழும் பாசல் மாநிலம் எச்சரிக்கைக்கு உரியபகுதியாகும்.

#ஈழத்துப்பித்தன்