Pages

January 30, 2018

குழந்தைகளின் கல்வி

குழந்தைகள் 1
****************

இப்போ எங்கள் தாயகத்தின் கல்விமுறை ஒரு காட்சிப்படுத்தலாக  குருவி தலையில் பனங்காயை சுமக்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு குழந்தையாக முதல்நாள் பள்ளி போகும் நாளிலிருந்தே பிள்ளை தன் இயல்பைத் தொலைத்ததாக மாற்றப்படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான சூழலல்ல; தாயகம் செல்லும் காலங்களில் அங்குள்ள பெற்றோர்கள் பிள்ளைகளின் படபடப்பை திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட கல்விமுறையை கண்டு கொதிப்புற்றிருக்கிறேன். நாம் எட்டுப்பாடக் கல்வியைக்கொண்டு சத்தியம் பண்ணிய காலத்திலேயே இயல்பைத் தொலைக்காமால்தான் இருந்தோம். ஆனால் இன்று பிள்ளையின் பள்ளி ஆரம்பநாளே கால்கோள் விழா எனும் பெரும் ஆர்ப்பாட்டத்தோடுதான் ஆரம்பிக்கின்றது. அதன் பின் கண்பாடம் கட்டிய குதிரைகள்போல் தாய்மொழியை புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் இயற்கையை மறந்த இயற்கையிலிருந்து புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் பத்து வயதாவதற்குள் புலமைப்பரிசில் பரீட்சை என்ற ஒரு தராதரத் தெரிவுக்கான ஓட்டத்தினுள் தம்மை தொலைக்கின்றார்கள். குழந்தைகளாய் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த வயதுக்கான அத்தனையையும் இழந்து நிற்கின்றார்கள். இந் நடைமுறை ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புமா என்பது கேள்விக்குறியே?

இந்தவேளையில் சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்விமுறை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஐந்து வயதில்தான் Kinder Garten மழலைப் பள்ளிக்கு போகவேண்டும். அந்த வயது கணிப்பிடும் இறுதிநாளான யூன் 30ந் திகதியாகும். யூலை 15 க்குள் பிறந்ததோர் விருப்பத்தெரிவில் ஓராண்டுக்கு முன்னரே பள்ளியில் இணைய முடியும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  ஓராண்டுக்கு முன்னரே மழலை பள்ளியில் சேர்த்துவிடலாம்.

 ஆனால் மூன்று வயதிலிருந்து Spiel Gruppe என்று சொல்லப்படும் இருநாட்கள் விளையாட்டு குழுவுக்கு செல்ல வேண்டும். இது முன்னர் கட்டாயமில்லை. வெளிநாட்டு மாணவர்கள் மொழிப் பரீட்சியத்தை முன்னரே பெற்றுக்கொள்வதற்காய்
இப்போ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சந்திப்பிற்கு செல்லும் வெளிநாட்டு பெற்றோருக்கு ஒரு விடயம் கண்டிப்பாக சொல்லப்படும் நீங்கள் உங்கள் வீட்டில் பிள்ளையுடன் தாய்மொழியில் பேசுங்கள். பிள்ளைக்கு பிராந்திய மொழியை கற்பிக்காதீர்கள். அவர்கள் வாழும் சூழலிலிருந்து அந்த மொழியை கற்றுக்கொள்வார்கள்.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஆறு வயதுக்கு பின்னர்தான் பிள்ளைகளுக்கு எழுதப்பழக்க வேண்டும். அதுவரை வாழும் சூழலுக்கேற்ப அவர்களின் எண்ண ஓட்டத்துக்கு அமைவாக கல்விமுறை அமைந்திருக்கும்.

குறிப்பாக விளையாட்டு குழுவில் பலதரப்பட்ட உள்ளக வெளிப்புற விளையாட்டுகளும் வர்ணங்களும் தாள்களும் இருக்கும். ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி இரண்டு முதல் மூன்று மணி வரை நடைபெறும் இக் குழுவில் இவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஒன்பது மணிக்கு இவர்கள் உள் நுழைந்ததும் வர்ணம் தீட்ட விரும்புவோர் வர்ணம் தீட்டலாம் கடை விளையாட்டு விளையாட விரும்புவோர் தாமகவே இணைந்து கடை விளையாட்டையோ சமையல் விளையாட்டையோ அல்லது அங்குள்ள அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடலாம். அல்லது குட்டித் தூக்கம்போட விரும்புவோர் அதையும் செய்து கொள்ளலாம். காலநிலை எப்படி இருந்தாலும் அதற்கான உடைகளோடு அவர்கள் கொஞ்சநேரம் வெளிப்புறத்திலும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த காலம் நிறைவடைந்து மழலைப் பாடசாலை ஆரம்பமாகும். இது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். சாதாரணமாக 5. வயதிலிருந்து 7 வயது வரை, இது காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். கொஞ்சம் களைப்பாவோ எழும்ப பஞ்சியாவோ இருந்தால் 8.30 வரையும் செல்லலாம். இங்கும் விளையாட்டு குழுவில் இருக்கும் நடைமுறைதான். ஆனால் இங்கு இவை திட்டமிட்டு பகுக்கப்படும். வர்ணம் தீட்டவோ படம் கீறவோ ஒரு குறிப்பிட்ட நேரமும் விளையாட்டுக்கு என ஒரு நேரமும் பாடல் பாடவென ஒரு நேரமும் பகுக்கப்படும். இது ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையில் நடைபெறும். காலநிலைக்கேற்ப இயற்கையை பற்றிய அறிதலை நேரில் அழைத்துச் சென்று கற்பிதல் இல்லாது அவர்கள் கண்வழி உள்வாங்க வைத்து சிந்தனையை தூண்டுவார்கள். இந்த மழலைப் பாடசாலை காலத்திலிருந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியான கோப்பொன்று ஆசிரியரால் தயாரிக்கப்படும் அது தொடர்ச்சியாக மேல் வகுப்பு செல்லும் வரை அம் மாணவர் பற்றிய தரவுகளோடு ஆசிரியர்களூடாக கைமாறும். இவர்களின் நடவடிக்கை ஈடுபாடுகளைகளை வைத்து அவர்கள் பற்றிய கணிப்பீட்டு வரைபை மழலைப் பாடசாலை கணிப்பிட்டு எழுதும். அதன் அடிப்படையில் ஏனைய வகுப்புக்களுக்கு செல்லும்போது  அம் மாணவருக்கான கற்பித்தல் நடைபெறும்.

ஏழுவயதில் முதலாம் வகுப்புக்கு  முதலாம் வகுப்புக்கு செல்ல முன்னர் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் ஒன்று நடைபெறும். இது மிக முக்கியமான ஒன்றுகூடலாகும்...

தொடரும்....

#இணுவையூர்_மயூரன்

#குழந்தைகளும்_கல்வியும்

நீண்டகாலமாக எழுத நினைத்த இத் தொடரை எழுத ஊக்கியாய் இருந்த சங்கீர்த்தனனுக்கு நன்றி.