Pages

April 26, 2018

''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு"


இன்று (22.04.2018)  ஊடகவியலாளர் சண் தவராஜாவின் ''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு" எனும் கட்டுரைத் தொகுப்பு சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் வெளியிடப்பட்டது.
அகரம் சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த அவரது எழுபது கட்டுரைகளில் 25 தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றிருந்தது.
சிலவற்றில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் ஊடகவியலாளராக அவரின் பட்டறிவுகளூடான பார்வையென்று பார்க்கின்றபோது காலத்துக்கு தேவையான ஒரு படைப்பாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சிறப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந் நிகழ்வு மிகச் சரியாக குறித்த நேரத்துக்கு ஆரம்பமானது. அதுமட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு பின் மண்டபம் நிறைந்து சுமார் 500ற்க்கும் மேற்பட்ட மக்களோடு ஒரு வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது குறிப்பிடத்கது. ஊடகவியலாளர் தயானந்தா மற்றும் முன்னாள் எரிமலை ஆசிரியர் கவிஞர். பாலகணேசன் அகரம் ஆசிரியர் ரவி ஆகியோரது சிறப்புரைகள் காலத்துக்கு தேவையானதாக இருந்தது.
நீண்டகாலத்தின் பின் பலதுறைகளையும் சார்ந்த நண்பர்களை சந்தித்து அளவளாவ முடிந்ததில் பெருமகிழ்வு.

சட்டி சோறு

சட்டி சோறு
************

மலேசியாவின் கோலாலம்பூர் நகரின் மையப்பகுதி தமிழர்களின் ஆளுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.

எப்படி பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் வடபரிஸ் தொடருந்து நிலைய வாசலில் வெளியேறியதும் சோறு வாசம் கமகமக்குமோ அப்படித்தான் கோலாலம்பூர் நகரின் பிரதான தொடருந்து நிலைய வாசலை விட்டு வெளியேற தமிழ்ப்பெயர்ப்பலகைகளும் சோறு வாசமும் கண் சிமிட்டும்.

மலேசியாவில் எங்கும் கிடைக்காத சட்டி சோறு எனப்படும் சிறப்பு உணவு இந்த ஏரியாவில்தான் கிடைக்கும். அதுவும் ஒரே ஒரு கடையில்.

சுபிரமணிய பிரபா சட்டி சோறு சாப்பிடுவம் என்றபோது அந்த சட்டி சோறு என்ற சொல்லே ஒரு ஈர்ப்பையும் சாப்பிட வேணும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது.

கடையை தேடிப்பிடித்து போனபோது சோத்துப்பிரியர்களால் கடை நிரம்பிக் கிடந்தது. ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்று கடை உரிமையாளர் சொன்னபோது சிறுகுடலை பெருங்குடல் தின்று தீர்த்துவிடுமளவு பசியின் வேகம் அதிகரித்துப்போயிருந்தது.

நண்டு, கோழி, றால், ஆடு, மீன் என சட்டிச்சோறு பல வித சுவையோடு உடனுக்குடன் சமைக்கப்பட்டு அதே மண் சட்டியோடு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.

கறிகளை உடனுக்குடன் சமைத்து அதற்குள் அரிசியையும் சேர்த்து அவியவிட சுவையான சட்டி சோறு யாழ்ப்பாண வாசத்தோடும் சுவையோடும் தயாராகியிருக்கும். அப்பிடி ஒரு சுவை.

குடிப்பதற்கு ஆவரம்பூ மற்றும் நற்சீரகம் அவித்த தண்ணீரும் தரப்பட்டது.

நாக்கை விட்டகலாத சுவை இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் சுவைக்க வேணும்.

உணவகத்தை அறிமுகப்டுத்தி சட்டி சோறு போட்ட சுபிக்கு நன்றி.



உலாத்தலும் உறவுகளும்

உலாத்தலும் உறவுகளும்
****************************


சிங்கப்பூர் போகத் திட்டமிட்டதும் அப்படியே மலேசியாவுக்கும் போய்வர வேண்டுமென திட்டமிட்டிருந்தோம்.
சிங்கப்பூரில் தங்குமிட ஒழுங்குகளை இணையமூடாக செய்துவிட்டு மலேசிய சுற்றுலா மற்றும் தங்குமிடம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் மலேசிய சுற்றுலா ஆபத்தானது என்ற அறிக்கை அடிக்கடி கண்சிமிட்டி பயம்காட்டியது.
மலேசியா என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் பாடகர் ராஜ ராஜ சோழன் தான். அடிக்கடி சுவிஸ் வந்து போகும் இவர் நெருங்கிய நண்பராக அன்போடு பழகும் ஒருவர், மலேசியா வாங்கோ நானே எல்லா இடமும் கூட்டிக்கொண்டு போவேன் என அடிக்கடி அழைப்பை விடுத்துப்போகும் ஒருவர். கடந்த ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு அவரை காவுகொண்டிருந்தது. இந் நிலையில் அறிந்தவர் யாருமில்லாமல் மலேசியாவில் எப்படி தங்குமிடம் பற்றிய தகவல்களை அறிவதென குழம்பிப்போயிருந்தேன்.
அந்தவேளையில்தான் பேஸ்புக்கூடாக அறிமுகமான தோழி யோகி நினைவுக்கு வந்தார். ஏற்கனவே தனது மலேசிய பயண அனுபவம் பற்றி என்னோடு உரையாடிய நிவேதாக்காவும் தன் பயணவேளையில் யோகி பல வழிகளிலும் உதவியதாக குறிப்பிட்டிருந்தா. சுற்றுலா மற்றும் இலக்கியதுறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர் யோகி.
யோகியோடு தொடர்புகொண்டு நம்பிக்கையான தங்குமிடம் பற்றிய தகவல் வேண்டுமென கேட்டிருந்தேன். உடனடியாகவே யோகியிடமிருந்து பதிலும் கிடைத்தது. தான் ஒரு சுற்றுலாப் பயணிகள் தங்குமிடத்தில்தான் பணிபுரிவதாகவும் படங்களை அனுப்புகிறேன் பிடித்திருந்தால் அங்கேயே பதிவுசெய்யலாமென்றும் கூறியிருந்தார். இரட்டிப்பு மகிழ்வாயிருந்தது. விடுதி எனக்கும் பிடித்துப் போனது. நகரின் மையத்தில் அந்த அழகானவிடுதி அமைந்ததால் அங்கிருந்து எமது சுற்றுலாவை திட்டமிடவும் இலகுவாயிருந்தது.
விடுதிக்கான கட்டணம் எதையும் இப்போ கட்டத்தேவையில்லை வரும்போதே நேரில் செலுத்திக்கொள்ளுங்கோ என்று நம்பிக்கையோடு கூறி தன்பெயரிலேயே எமக்கான அறைகளையும் பதிவுசெய்து வைத்திருந்தார்.
மலேசியாவில் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கின்றது என்ற நம்பிகையோடு பயணப்பட்டோம் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
அங்கு போன எமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விடுதிக்கான கட்டணம் கூட யோகியின் செல்வாக்கால் வழமையான கட்டணத்தையும் விட குறைவாகவே எம்மிடம் அறவிடப்பட்டது.
போக்குவரத்து பற்றிய தகவல்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய விபரம் மருத்துவதேவை என அனைத்து தேவைகளுக்கும் மின்னல்போல தகவல்களைத் திரட்டித்தந்து யோகியின் பேருதவியால் எங்களின் சுற்றுலாசார் திட்டமிடல்களும் சுலபப்பட்டன.
மலேசியாவிலும் ஒரு தங்கை இருக்கிறாள் என்ற நிறைந்த மனதோடு திரும்பினோம்.
பேஸ்புக் இப்படியான ஆத்மார்த்தமான உறவுகளை தந்தே நகர்கின்றது.