காலையில் கண் விழித்தபோது வந்த செய்தி கேட்டு மனம் கனத்துப்போனது!
சில ஆண்டுகளுக்கு முன் தன் ஒரே ஒரு மகளை பறிகொடுத்து கடந்த ஆண்டு மனைவியை பறிகொடுத்து வாழ்வின் பெருந்துயரை சுமந்துகொண்டிருந்த அவர் இன்று இவ்வுலக வாழ்வை நீர்த்தார்.
டென்சி சிறி இவரது நிழற்படக்கலையகம் எங்கள் வீட்டில் இருந்து நடை தூரத்தில் காங்கேசன்துறைவீதியில் இருந்தது. அந்தக் கடை பின் பகுதியில் படமெடுப்பதற்கான ஒழுங்குபடுத்தல்களுடன் முன் பகுதி அழகுசாதன பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விற்கும் கடையாகவும் இருந்தது. நாங்கள் கந்தசாமி கோயிலடியில் இருந்த தனியார் கல்வி நிலையமான “Everest“ போறதுக்கு வீதியை கடந்து இவரது நிழற்படக் கடைக்கு அருகாக உள்ள ஒழுங்கையால்தான் போவம்.
எங்கள் வீட்டிலும் சில நிகழ்வுகளை இவர்தான் படம் பிடித்து தந்தார். அந்தப் படங்களில் மூலையில் “Inivil Denshi“ என்ற அவரது முத்திரை புடைப்பான எழுத்துகளில் பதிவாகி இருக்கும்.
அப்போ எல்லாம் படங்கள் படச்சுருள் (Filmroll) மூலம் எடுக்கும் முறை இருந்து. அந்த படச்சுருள்கள் கறுப்பு நிற உருளை சாம்பல் நிற மூடியுடன் கூடிய பெட்டியில் அடைத்துதான் வரும். அதை சேகரிப்பது எங்களுக்கெல்லாம் பிடிக்கும். அதை எங்களுக்காக எடுத்து வைப்பார் நாங்கள் எவரெஸ்ற் போகும்போது வாங்கி வருவோம். அந்த உருளைக்குள் புளியம்பழம் உப்பு மிளகாய்த்தூள் போட்டு பிரசாந்தி பாடசாலைக்கு கொண்டு வருவாள்.
நான் புலம்பெயர்ந்த பிறகு அவரும் கொழும்புவாசியாகிப் போனார். பேஸ்புக் ஆரம்பமான காலம் அவரது தொடர்பு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது.
இணுவிலை சமூக வலைத்தளங்களில் உலவ வைத்தவர்களுள் ஒருவர். கடந்த ஆண்டுகளில் “எங்கள் இணுவில்” என்ற வாட்சப் குழுமத்தை உருவாக்கி உலகு வாழ் இணுவையூர் மக்களை எல்லாம் இணைத்தார்.
அவருடன் கதைக்கும்போது அறிந்தேன் நிறைய பொதுவிடயங்களை செய்ய ஆர்வமாக இருந்தார். பலதை செய்துகொண்டும் இருந்தார்.
நம்பமுடியவில்லை
ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர் ஆன்மா கந்தனுள் இளைப்பாறட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
15.02.2026

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.