Pages

April 8, 2014

அவள் வருவாளா?

அவள் வருவாளா?


அண்மைய நாட்களாய்
அவள் வருவாள் வருவாள் என
ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்
அவள் நிச்சயம் வருவாள் என
அதி நம்பிக்கை கொண்டிருந்தேன்
நீண்ட நாட்களின் பின்னரான அவளின் மீள் வரவு - எனை
நிச்சயம் மகிழ்விக்கும் என நம்பினேன்

காலை எழுந்து கண் விழித்த போது
அவளின் வரவு உறுதியாய் இருந்தது
மதியம் வரையும் அவள் வரவு
மறு பரிசீலனைக்கு வாய்பின்றி
மாற்றம் ஏதுமின்றி உறுதியாய்தான் இருந்தது

இடையே என்ன நடந்ததோ தெரியலை
இடையூறாய் அவள் அண்ணன்தான் வந்து நின்றான்.

நிச்சயம் இன்னொரு நாள் அவள் வருவாள்.....


#ஈழத்துப்பித்தன்

March 20, 2014

வசந்தம் வந்தது




வண்ணக் கதிரவன் ஒளியொடு
வான் உயர்ந்த மரமெல்லாம்
வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப
வசந்தம் வந்தது
வண்ணக் கதிரவன் ஒளியொடு

பூ மகள் மேனிதனை
பூக்கள் மறைத்து நிற்க
பாரே அழகில் மிதக்குது
பகலவன் சிந்தும் புன்னகையில்

இத்தனையும் பார்க்கையிலே
மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம்
தாய்மண்ணின் பிறந்ததற்காய்
தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம்
தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில்
தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ???
.

March 18, 2014

தடம் மாறிப் போகோம்.

தடம் மாறிப் போகோம்.


தமிழனாய் பிறந்ததால் - நாம்
தடம் மாறிப் போகோம்
நல் தலைவனை
நம் வழிகாட்டியாய் கொண்டதால்
நாம் என்றும் வழி மாறி
நகரோம்
நாட்டினை பிரிந்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கின்றது.
ஆதலால்
நரை வீழ்ந்து
நடை தளர்ந்து போனாலும்- நாம்
தடம் மாறிப் போகோம்.

18.03.2014
‪#‎ஈழத்துப்பித்தன்‬

December 6, 2013

கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..

இருண்ட கண்டத்தின்
இருள் அகற்றிய கதிரவனே!
வெருண்டது வெண்ணினம் - உன்
வீர எழுச்சி கண்டு
தொலைந்தது நிறவெறி
தொடர்ந்த உன் பணியால்
கொத்தடிமைத் தனம் உடைத்து - உன்
குடி அரசாள வழி அமைத்தாய்
ஒடுக்கப்பட்ட இனங்களின்
ஒளி விளக்கானாய்
துடிக்கிறது எம் இதயம்
தூயவனே உன் சேதி கேட்டு
இரத்த உறவொன்றை
இழந்த உணர்வு
எங்கள் உதிரமெல்லாம்
பரந்து நிற்கின்றது
கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..
கண்ணீரோடு காத்திருக்கின்றோம்
கலங்கரை விளக்கினைத் தேடி
இருண்ட கண்டத்தின் நாயகனே!
இருண்ட எம் வாழ்வில் ஒளி ஏற்ற
இனி எம் தேசத்தில் வந்து பிறந்துவிடும். - எம்
தலைவனுக்கு அடுத்து நாம்
துதிக்கின்ற பேரொளியே
துயில் எழும் ஞாயிறே
தூமணியே போய்வாரும்.
ஆண்டுகள் ஆயிரமாய்க் கடந்தாலும் - என்றும்
அகிலத்தில் ஆதவனாய் நீ திகழ்வாய்.

December 4, 2013

எனக்குள் ஒருவன் இருக்கின்றான்


எனக்குள் ஒருவன் இருக்கின்றான்
அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான்
அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு
அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு

அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த
அவனியே என் காலடியில்
அடைக்கலம் போல் தோன்றும்
அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும்

அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது
அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என்
ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும்
ஆலயம் போல் அமைதியானதுண்டு.

01.06.2004

June 20, 2013

துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு


நீண்ட நாட்களின் பின்
நிலவு பூத்தது போல் இவ் இரவு
சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம்
சோகம் எல்லாம் மறைத்து நிற்க
மத்தாப்பு பூத்து
மனம் முழுக்க சிரித்து நிற்க
எத்தனையோ நாட்களாய்
ஏக்கத்தோடு உறங்காத கண்கள்
சேதி அறிந்த கணம் முதல்
சிலிர்த்து சொரிந்த கண்ணீரில்
உப்பு உறைக்கவில்லை
உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது

துன்பத்தை தந்தவனுக்கே
திருப்பிக்கொடு - என்று
சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள்
ஆடுகளத்தை அசர வைத்து
போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள்
கதை மீண்டும் கதையாகாமல்
கவனப்படுத்திய காட்சி கண்டு
உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது
உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!!

June 15, 2013

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்து போனது

மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு.

இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன்.

2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.

புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.

அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.

புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.

ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்.

March 17, 2013

மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

  • முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி
    முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம்
    தம்பியர் தூண்டி விட்ட திரியில்
    துயருற்றிருந்த - எங்கள்
    மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது
    மலரும் எங்கள் தேசம் என்ற
    மமதையில் நிற்கின்றோம்.

    அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள்
    அன்னை தமிழகம் இருக்கின்றது
    சுற்றி வரும் பகை யுடைத்து
    சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின்
    வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே
    விழி திறந்து விடுதலைக்காய்
    வழி திறந்து விட்டிருக்க
    வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம்

    கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை
    கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம்
    கலங்கிக் கிடந்த எங்கள் கண்கள்
    கல்லூரி மாணவரே உங்கள் கரங்களால் துடைக்கப்படுகின்றது - எங்கள்
    திலீபனின் வழியில் நீங்கள் தொடுத்து நிற்கும் போர்
    தீச் சுவாலையாய் தமிழகம் தாண்டி
    தமிழன் வாழும் இடமெல்லாம் பரந்துவிட்டது

    எல்லாம் இழந்தோம் என்றிருந்தோம்
    உங்களைக் கை விடோம் நாம் இருக்கின்றோம் என்று
    உணவு தவிர்த்து உடல் வருத்தி நீவீர்
    உணர்வோடு காட்டுகின்ற அக்கறையில்
    உளம் மகிழ்ந்து நிற்கின்றோம்
    வார்த்தைகள் வரவில்லை
    வலுவிழந்த இனத்திற்கு வடிகால்களாய் நீங்கள்
    வந்தீர்கள் வான தூதர்களாய்
    மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

January 1, 2013

நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2013


எண்கள் மாறும் வேளை - நம்
நெஞ்சங்களில் உள்ள
வஞ்சங்கள் தொலைந்து
எண்ணங்கள் செழுமைபெற்று
எண்ணிடும் கருமங்கள்
எண்ணம் போல் வெற்றி பெற்று
வண்ணமாய் வாழ்வு செழித்து
வரலாறு படைக்க வாழ்த்துகின்றேன்.

இணுவையூர் மயூரன்

December 7, 2012

தமிழூடாய் நீ வாழ்வாய்...

இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கன்னித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத் தொடங்கிய காலம்.

நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து 'குருத்து' என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு வாசக வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்கி வந்தது. குறிப்பாக யாழ். இணையமும் அதன் கருத்துக்களமும் பெரும் ஆதரவு நல்கியிருந்தது.

இக் காலப் பகுதியில் உலகின் பல பாகங்களிலிருந்தும் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் எங்கள் மின்னஞ்சலை தினமும் நிறைத்த வண்ணம் இருக்கும். பல வகையான ஆக்கங்கள் வித்தியாசமான படைப்புகள் என வரும். அவற்றில் சில நெஞ்சில் நிறைந்து நிற்கும்.

அப்படித்தான் 'அம்மாவின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எங்கள் மின்னஞ்சலின் வரவுப் பெட்டிக்குள் வந்து விழுந்திருந்தது. படித்ததும் நெஞ்சில் நிறைந்தது. எழுதியவர் பெயரைப் பார்த்தேன் 'ஈழநாதன்' என்று இருந்தது. யாரோ ஒரு பெரியவர் புனை பெயரில் எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். மீண்டும் சில காலங்களில் 'எதிர்ப்பு' என்ற பெயரில் சிறுகதையொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு குறியீட்டுக் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. சரி அவரைத் தொடர்பு கொள்வோம் என மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அக்குறியீட்டுக் கதையின் மூலகாரணமாக அமைந்த யாழ். நூலகம் பற்றியும் அதற்கு இணையாக நாமும் ஒரு இணைய நூலகமொன்றினை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியம் பற்றியும் குறிப்பிட்டார். அவரோடு உரையாடியதில் பல விடயங்களில் எமக்குள் ஒற்றுமையும் ஒரே இலட்சியமும் இருப்பது தெளிவாயிற்று. அவரின் இணைய நூலக உருவாக்கத்திற்கு ஆதரவு நல்குவதாக வாக்களித்தேன்.

அப்போதுதான் அவர் தனது வலைபதிவுகள் பற்றியும் குறிப்பிட்டார். அச்சு ஊடகங்களில் மட்டும் எழுதாது வலைப்பதிவுகளையும் செய்யுமாறு கோரினார். kuruthu.yarl.net எனும் பெயரில் வலைப்பதிவொன்றினை தொடங்கி எனது படைப்புக்களைப் பதியத் தொடங்கினேன். குருத்து இதழின் ஆசிரியராக இருந்து அதன் பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவு செய்ததால் வலைப்பதிவில் நேரம் செலுத்த முடியாது போனது. கனடாவிலிருந்து வலைப்பதிவை மேற் கொள்ளும் நண்பர் கவிதனின் அன்புக் கோரிக்iயால் என் ஆக்கங்களை அவரது கவிதைகள் என்ற வலைப்பதிவில் அவர் மூலம் பதிவு செய்து வந்தேன். ஈழநாதன் எனக்கும் கவிதனுக்கும் பொதுவான நண்பராக இருந்ததால் கவிதனின் தளத்தில் ஈழநாதன் தனது கருத்துக்களை பதிவிடுவார்.

எமது குருத்து இதழ் யாழ். பல்கலைக் கழக சமூகத்தின் ஆதரவுடன் தாயகத்திலும் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் நான் மூழ்கிப் போனதால் ஈழநாதனுடனான தொடர்பு வலைப்பதிவோடு மட்டுமே மட்டுப்பட்டுப் போனது. சமவேளையில் யாழ் கருத்துக்களத்தில் ஈழவன் என்ற பெயரில் கருத்தாடல் செய்யும் நண்பராகவும் அறிமுகமாகினார். பல தரப்பட்ட கருத்துக்கள் சிந்திக்க தூண்டும் எண்ணங்கள் என கருத்தக்களம் களைகட்டத் தொடங்கிய காலம். நெற்பயிர் சிறப்பாக வளர்கின்றது என்றால் அங்கே களையும் அதே வேகத்தில் வளரும் என்பது இயற்கையின் நியதிதானே. கருத்துக்களமும் அப்படித்தான் ஆனது. அதனால் ஒதுங்கிக் கொண்டோம்.

நீண்ட இடைவெளியின் பின் ஈழநாதன் இணைய நூலகம் ஆரம்பிப்பதற்குரிய நேரகாலம் கூடி வந்ததும் என்னை தொடர்பு கொண்டார். அவர் அழைத்த நேரம் மிகவும் இக்கட்டான காலப்பகுதி பல தரப்பட்ட சிக்கல்கள், குருத்து இதழ் இனி வரமுடியாது என்ற நிலை, மிகவும் மனமுடைந்து போயிருந்தேன். என்னால் வேறு எத் திட்டங்களுக்குள் புதிதாய் என்னை இணைத்தக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை. ஈழநாதனுக்கு சிலரை இனங்காட்டி வைத்தேன்.

எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இனி நான், என் வாழ்வு என்று வாழ நினைக்க என் பெற்றோர் எனக்கு திருமணம் பேசி இல்லற பந்தத்தினுள் நுழைக்க ஏற்பாடு செய்தனர். முதற் பார்த்த பெண் பெயர் கேட்டதுமே பிடித்துப் போயிற்று. ஆம் தேன்மொழி என் இல்லறத் துணையென நிச்சயிக்கப்பட்டாயிற்று. தேன்மொழியின் அண்ணாவின் பெயர் ஈழநாதன் அந்த ஈழநாதன் தான் எழுத்துலகூடாய் எனக்கு அறிமுகமாகியிருந்த ஈழநாதன் என நான் நினைக்கவில்லை. எனது மனைவிக்காக நான் கவிதனின் வலைப்பதிவில் எழுதிய நினைவிருக்கிறதா?  என்ற கவிதைத் தொடர் தொடர்ச்சியாக வெளி வந்தபோது ஈழநாதனும் கருத்தெழுதிச் செல்வார். சிறிது காலங்களின் பின்தான் தெரியவந்தது எனது மனைவியின் அண்ணாதான் அந்த ஈழநாதன் என்று.

குடும்ப உறவான பின்னும் குடும்ப நலங்கள் பற்றி நாம் பேசிக் கொண்டது மிக மிகக் குறைவு. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் இலக்கியங்கள் பற்றியும் ஈழத்தவர்களின் படைப்புகள் பற்றியும்தான் மணிக்கணக்கில் பேச்சு நீளும். 2007களில் இருந்து ஈழநாதன் எழுதுவது என்பது முற்றாக இல்லாமல் போனது. இருந்தபோது புதிதாக எழுதுபவர்கள் பற்றியும் புதிதாக வருகின்ற படைப்புகள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களுடன் இருந்தார்.

ஈழத்தவர்களின் ஆக்கங்கள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அதற்கு உரிய அங்கீகாரம் கிட்ட வேண்டும். அவற்றைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவர வேண்டும். மலிந்த விலைகளில் நூல்கள் அச்சிடப்பட்டு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதுவே ஈழநாதனின் பேரவாவாக இருந்தது.

இப்படி படைப்பாளிகளையும் அவர் தம் படைப்புக்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என துடித்த ஈழநாதன் இலக்கியம், தமிழ்ச்சமூகம், அரசியல், திரையுலகம், அறிவியல் என பல தரப்பட்ட விடயங்களில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதி இணையத்தளமெங்கும் விதைத்துச் சென்றிருக்கின்றார். அவரின் ஒரு சில ஆக்கங்களேனும் அவரது ஆசைபோல அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு சில ஆக்கங்கள் அவரது நினைவு சுமந்து வெளிவருpன்ற 'அறிவுக் களஞ்சியம்' என்ற இந்த நூலில் தொகுக்கப்படுகின்றது. அவரை நாம் இழந்து தவித்த நேரத்தில் அவரது எழுத்துலக நண்பர்கள் பலரும் எழுதிய நினைவுக் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே இணைக்க முயற்சித்த போதும் அதற்கு காலம் அவகாசம் தரவில்லை. முடிந்தவரை கிடைத்தவை இணைக்கப்பட்டுள்ளது.

ஈழநாதனின் உடல் மட்டுமே எமை பிரிந்திருக்கின்றது. உணர்வுகளும் எண்ணங்களும் அவரின் எழுத்துக்கள் மூலமும் எழுப்பிச் சென்றிருக்கும் இணைய நூலகம் மூலமும் வாழ்வாங்கு வாழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இணுவையூர் மயூரன் 

அறிவுக்களஞ்சியம் ஈழநாதனின் 60வது நினைவுநாளையொட்டி (27.11.2012) அன்று வெளியிடப்பட்ட 'அறிவுக்களஞ்சியம்' எனும் சிறப்பு வெளியீட்டுக்காக எழுதப்பட்டது.

August 26, 2012

எங்கள் ஊரின் அடையாளம்

காங்கேசன் துறைவீதியில்
இணுவைப்பதியின் எல்லையை
இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால்
ஊரின் நடுவில்
உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம்.
புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு
புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம்.

சீனிப் புளியடி
பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் .

எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான்
புவி எங்கும் அறிமுகம்
குடை போல விரிந்த மரம்
குளிரோடு தந்த நிழலில்தான்
இடைவேளையில் அம்மா கட்டித் தந்த
இடியப்பமும் முட்டைப் பொரியலும்
கவளமாய் களம் இறங்கும்.

வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த
மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு
தொண்டை தண்ணி வத்த ச ப
சொல்லித் தந்தும் அங்குதான்.
கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான்
உடற்பயிற்சி வேளை முடிய
உற்சாகம் தேடி சாய்ந்து இருந்து கதை பேசுவதும் அங்குதான்
பாலசிங்கம் வாத்தியார்
தான் படித்த கதைகளையெல்லாம் - நாம்
வாய் பிளந்து கேட்டிருக்க சுவை கலந்து சொல்வதும் அங்குதான்.

எத்தனை முறை
எங்களிடம் கல்லடி பட்டிருக்கும்
அத்தனை முறையும் தந்தது
நாவினிக்கும் சீனிப் புளியதைத்தான்

போன முறை ஊர் போனபோது
எனக்கு நாலாம் வகுப்பு  படிப்பிச்ச
பரஞ்சோதி மாஸ்ரர்தான்
பள்ளியின் அதிபராய் இருந்தார்.
அந்த மர நிழலில்தான் மணிக்கணக்காய்
அமர்ந்திருந்து கதை பேசினோம்
இந்த முறை போன போது பெருத்த ஏமாற்றம்
அவரும் இல்லை அந்த மரமும் இல்லை.....


June 9, 2012

பாடுகின்றேன் பல்லாண்டு.

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுததாபனமே!
அகில வான் பரப்பில் உன் மூலம் தமிழ்
ஒலிக்கத் தொடங்கியதன் பதினைந்தாம் அகவைநாள் இன்று
பத்தொடு ஐந்தாண்டுகள் பாரினில் - உன்
பணி தொடரும் வேளை பாடுகின்றேன் பல்லாண்டு.

எடுத்த காரியம் யாவினும் வெற்றியென
என் வீட்டு வானொலி பெட்டி
தன்னம்பிக்கை தந்து - ஒரு உறவாய்
என்னோடு உறவாடத் தொடங்கி
மூவைந்து ஆண்டுகள் முன் வந்து நிற்குது இன்று

ஊடகப் பணி செய்ய உவகையுடன் வாய்ப்பளித்து
உலக வான்பரப்பில் உன்னூடாய் என் குரலும் ஒலிக்க வைத்தாய்
அந்த நன்றியின் உணர்வொடு பாடுகின்றேன் பல்லாண்டு
வாழிய நின் புகழ் வையகம் உள்ள மட்டும்.

June 5, 2012

பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு...


பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம்
பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை
எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை
பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை

வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே !
வென்று வாரும்.
சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது
சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர்
நிச்சயம் வென்றுதான் வருவீர்!!!

குண்டடிபட்ட எம் தேசக்கொடி
பந்தடிக்கும் வீரரே!
உம்மால் பாரினில் பறக்குது இன்று
காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம்
கதிரவன் உதிக்கும் திசை நோக்கி

எத்தனை ஆயிரம் வீரர்கள் குருதி தந்து காத்த கொடி
உங்கள் கைவசம் இருந்திடும் கர்வத்தோடு களம் காணுங்கள்
நிச்சயம் உம்மோடு நிழல் போல நின்றாடுவர்
வித்தாகிப் போன எங்கள் வீர மறவர்கள் - அவர்
உடன் இருந்து உரம் கொடுப்பார் - அந்த
உறுதியோடு வாகை சூடி வாரும்
வந்தும்மை வரவேற்கக் காத்திருக்கிறோம்.

May 18, 2012

சிவந்த மேயின் பதினெட்டாம் நாள்


சிவந்த மேயின் பதினெட்டாம் நாள் - எம்
சிந்தைகள் கலங்கிப் போன நாள்
முள்ளிவாய்க்காலில்
மனிதம் மரணித்த நாள்
உயிர் வலி சுமந்து
உலகம் முழுவதிலிலும் நாம் இணைந்து
உலகின் மனச்சாட்சியை
ஒட்டு மொத்தப் பலமும் கொண்டு
ஒலுப்பி எடுத்த நாள்
எங்கள் உயிர் அழுத நாள்
உணர்வுகள் தழிழராய்
ஒருங்கிணைந்த நாள்
மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைவோம்
உயிர்வலி சுமந்து உதிரம் சொரிந்த எங்கள்
உறவுகளின் உணர்வுகள் உயிர்பெற

April 5, 2012

மலையை மடு விமர்சிப்பதா???


மலையை மடு விமர்சிப்பதா???
எனக்கும் உங்களுக்கும் இடையில்
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரை
பிறப்பில் இடைவெளி
ஆதலால் ஐயா... என்று அழைப்பேன்.
மற்றப்படி எனக்கும் உங்களுக்கும்
இடையே உள்ள உறவு நெருங்கிய நட்பு.
பதின்ம வயதில் நான் இருந்தபோது பழுத்த பழம் நீங்கள்
தோற்றத்தில் மட்டுமல்ல இலக்கிய, அரசியல், சமூகப் பணிகளிலும்
ஒரு விமர்சகனாய் தான் முதன் முதலாக
என் முன் அறிமுகமானீர்கள்
ஒழிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி
உரத்து உரைத்திடும் உங்கள் குணத்தால்
எம் நட்பு மலர்ந்தது

உங்கள் மகனின் நண்பனாய்
முதன் முதலாய் உங்கள் இல்லம் வந்த நான்
பின்னர் வந்த அத்தனை தடவையும் - உங்கள்
நண்பனாய்தான் வந்து சென்றேன்.
இலக்கியத்தில் ஆரம்பித்து அரசியல்வரை
மணிக்கணக்கில் அழவளாவுவோம்
சில சமயங்களில் கருத்து மோதல்கள் சீண்டல்கள் - அந்த
சீண்டல்கள்தான் என்னையும் சிந்திக்க வைத்தது
சிறப்பான சில ஆக்கங்களையேனும் படைக்க வைத்தது.
என் எழுத்துக்களுக்கு விமர்சகனாக மட்டுமல்லாமல்
வாசித்து ரசித்து ரசிகனாகவும் நீங்கள் இருந்துருக்கிறீர்கள்
ஒரு முறை நீங்கள் என்னை தொலைபேசியூடாய்
தொடர்பு கொண்டபோது
வையுங்கள் ஐயா நான் எடுக்கிறேன் என்றதும்
வாழ்த்தும் பாராட்டும்
தேடி எடுத்துச் சொன்னால்தான் பெருமை என்று
பத்திரிகையில் வந்திருந்த என் ஆக்கம் ஒன்றைப் பற்றி
பாராட்டித் தள்ளினீர்களே
தொலைதூரக் கனவுகள் உங்கள் தொடர் நவீனம்
வெளிவந்தபோது தபாலில் நூலை அனுப்பி விட்டு – என்
விமர்சனத்தை எதிர்பார்ப்பதாய் மடல் ஒன்றும் வரைந்திருந்தீர்கள்
விக்கித்துப் போனேன்.
மலையை மடு விமர்சிப்பதா???

அதை உங்களிடமே முன்மொழிந்தபோது
உங்களால் அது முடியும்
அதனால்தான் எதிர்பார்க்கிறேன் என்றீர்கள்

தவறுகள் யார் விட்டாலும் தட்டிக் கேட்கும் நீங்கள்
திறமைகள் எங்கிருந்தாலும் தட்டிக் கொடுக்கவும் தவறியதில்லை

உங்களை திறமை மிகு ஆசானாய்
ஆற்றல் மிகு படைப்பாளியாய்
உண்மை தவறாத ஊடகனாய்
மனித நேயம் மிகு மனிதனாய்
பற் பல அவதாரம் கண்டேன் உங்களில்
வாழ்வினிலே இப்படியும் ஒரு பக்கம் உண்டென்று
அநுபவரீதியாய் புரிய வைப்பதற்கா
எமை விட்டுப் பிரிந்து சென்றீர்???
 முனைவர் நாகேசு இராசலிங்கம் (சக்கரவர்த்தி)
(எழுத்தாளர், பிரபல நாடக ஆசிரியர், பிரபல பத்திரிகையாளர், தமிழக, ஈழத்து பத்திரிகைகளின் முன்னோடி)
அவர்கள் 31.03.2012 இயற்கை எய்தியபோது இரங்கல் நிகழ்வுக்காய் வடித்த இரங்கல் பா.


March 2, 2012

ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம்.

பேதங்கள் தொலைப்போம் -
எங்களுக்காக தம்மை தந்தவர்கள்
பாதங்கள் தொழுது வேண்டுகிறோம்
எங்களுக்குள் இருக்கும்
பேதங்கள் தொலைப்போம்.

தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும்
தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய
தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற
பேதங்கள் தொலைப்போம்.

ஒன்று பட்ட ஓர் இனமாய்
ஒருங்கிணைந்து செயற்படுவோம்
உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி
ஒளி ஏத்தி வைத்த தீபமதை
சத்தியம் செய்து காத்து வைப்போம்.

அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான்
அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று
அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம்
அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம்
அடிமை வாழ்வையும் பிரிவினையையுமா
ஒரே ஒருமுறை சிந்திப்போம்
ஓரணியில் சந்திப்போம்.

December 11, 2011

அன்புக்குரிய மனிதன்

92களில் அவர் ஒரு முரட்டு மனிதன். முன் கோபக்காரன்;. வணக்கம் சொன்னால் உன்னை நான் வணக்கம் கேட்னானோ? என சினப்பார்  இப்படித்தான் என் முன் அறிமுகமாகின்றார் அதனால் அவரோடு நான் என்றும் பேசியதில்லை. 1998ம் ஆண்டு காலப்பகுதிகளில் பாசல் தமிழ் மன்றத்தினால் மணிமேகலைப்பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தோம். இக் கண்காட்சி 2000ம் ஆண்டு காலப்பகுதி வரை நான்கு தடவை நடாத்தப்பட்டது. நான்கு தடவைகளும் தவறாமல் கண்காட்சிக்கு சமூகமளித்து புத்தகங்களை கொள்வனவு செய்யும் முக்கிய நபர்களில் இவர் முதன்மையானவராக இருந்தார். அவரோடு சற்றுப் பேச்சுக் கொடுத்தபோது அவரது ஆழ்ந்த தொலைநோக்குக் கொண்ட சிந்தனையும் தேடலைப் பற்றியும் சற்று அறிந்து கொண்டேன்.

இச் சம்பவம் அவர் மீது எனக்கிருந்த அபிப்பிராயத்தை சற்றுப் புரட்டிப் போட்டது. அதன் பின் காண்கின்ற போது புன்முறுவல் இடையிடையே வணக்கம் இப்படி தொடர்ந்தது அவருடனான எனது நட்பு.
2002களின் செப்டம்பர் பிற்பகுதி குருத்து மாதஇதழின் முதலாவது இதழை வெளியிட்டு வைக்கின்றோம். முதல் இதழின் வரவு நாம் எதிர்பார்த்தகைக் காட்டிலும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பலர் எம்மோடு இணைந்து செயற்பட ஆர்வம்கொண்டு எம்மோடு இணைந்து கொண்டனர்.

அப்போது எமது இதழின் இணையாசிரியர் செந்தூரன் என்னோடு தொடர்பு கொண்டு சொன்னார். ஒரு அண்ணை உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னவர் என்று சரி வரேக்கை கூட்டியாங்கோ என்றுவிட்டு அடுத்த இதழின் வடிவமைப்பில் மூழ்கிப்போகின்றேன். அன்று மாலை செந்தூரன் என்னை சந்திக்க வந்தபோது கூடவே அவரும் வருகின்றார். இதழ் தொடர்பில் பல விடயங்கள் உள்ளடக்கம் பற்றியெல்லாம் பல விடயங்களை உரையாடினோம்.
குருத்தின் சிறுவர் பகுதி முதல் இதழிலே சிறுவர் தோப்பு என அறிமுகமாகி வெளிவந்திருந்தது, அதனை அரும்பு என பெயர் மாற்றம் செய்தால் அழகாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என ஆலோசனை தந்து அப் பகுதியில் புதிதாய் இணைக்கப்பட வேண்டியவிடயங்களையும் தானே தொகுத்துத் தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதோடு மட்டும் நின்றுவிடாமல் எம் சமூகத்தில் புகுந்துகிடக்கும் மூடநம்பிக்கைகளையும் அறியாமைகளையும் கண்மூடித்தனங்களையும் நக்கலாக தோலுரித்துக் காட்டும் நோக்கோடு தத்துவத்தார் எனும் பகுதியொன்றினையும் தானே எழுத முன்வந்தார். அவர் செயற்பாடுகளில் முண்டாசுக் கவிஞனை நான் காண்கின்றேன்.

அவரது வரவு எமது இரண்டாவது இதழ் பல மாற்றங்களோடும் புதுப்பொலிவோடு வெளிவந்தது. எமக்கு பல தரப்பட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் வந்து குவிந்தன. தத்துவத்தார் பகுதி பெரு வரவேற்பினைப் பெற்றது. அன்று முதல் எனக்கும் அவருக்கும் இடையேயான உறவு வலுப்படத் தொடங்கியது.

இதழ் சிறப்பான ஆக்கங்களைத்தாங்கி வெளிவரத் தொடங்கியபோது சிறுவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தேன். 2003ம் ஆண்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. 2004ம் ஆண்டு இரண்டாவது தடவையாக நாம் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தபோது, அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவருக்கு எமது சிறுவர்பகுதியின் பெயரான அரும்பு எனும் பெயரிலே விருது ஒன்றினை வழங்குவோம் என்ற ஆலோசனையை முன்வைத்தார். அதன்படி 2004ம் ஆண்டு சகானா வசந்தன் என்ற மாணவிக்கு குருத்தின் உயரிய சிறுவர் விருதான முதலாவது அரும்பு விருது வழங்கப்பட்டது. தான் மட்டும் ஒத்துழைப்பு வழங்கினால் போதாதென்று தனது மனைவியையும் எமது இதழூடாக தொடர் கதையொன்றினை எழுதவைத்து ஒத்துழைப்பினை வழங்கினார்.

இலக்கியத்தால் ஏற்பட்ட நட்பு என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு அண்ணணாக என்னோடு கூட இருந்து எனது சரி, பிழைகளை நேருக்கு நேர் சுட்டிக்காட்டுவார். அவர் இது தவறு என சுட்டிக்காட்டிய சில தவறுகளை அன்று நான் திருத்திக் கொள்ளத்தவறியதால் பின்னாளில் அது குருத்து இதழின் வரவு தடைப்படும் நிலைக்குச் சென்றமை மறுக்க முடியாத உண்மை.
2004களின் நடுப்பகுதியில் குருத்து இதழை வெளியிட முடியாத அக புறச்சூழல்கள் எமக்கு ஏற்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டின் ஜனவரி வரையிலும் குருத்தின் செயற்பாடுகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மீள துயிர்க்கும் நோக்கோடு குருத்து TRX தமிழ் காற்று வானொலியின் இரண்டாவது அகவை நிறைவை முன்னிட்டான சிறப்பிதழாக வெளிவந்தது. அந்த இதழிலும் அவர் காத்திரமாகப் பணியாற்றினார். தொடர்ச்சியாக காலாண்டு சஞ்சிகையாக குருத்தினை நாம் வெளிக்கொண்டுவர நான் முடிவெடுத்தபோது என் கரம்பற்றி நின்று வலுச்சேர்த்தார். இதழ் வெளிவர அகச்சூழல் சரியாக இருந்தபோதும் புறச்சூழலில் சில முட்டுக்கட்டைகள் விழ சற்றுப் பொறுத்திருந்தேன். இதேவேளை குருத்து இதழ் ஊடக மையமாக உருப்பெற்று பல துறைகளிலும் செயற்படத் தொடங்கியது. 2010 முதல் மாணவர்களுக்கான போட்டிகள் மீள நடாத்தப்படத் தொடங்கியது. 2010இல் தனியே பேச்சுப் போட்டி மட்டுமே நடாத்தப்பட்டமையால் அரும்பு விருதினை வழங்க முடியாது போனது. 2011 முதல் பல தரப்பட்ட போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டு அரும்பு விருதுக்கான போட்டிகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. 2010ம் ஆண்டு இரண்டாவது அரும்பு விருதினை செல்வி சௌமியா சத்தியபாலா அவர்கள் பெற்றுக் கொண்டார். அந்த விருதினை அரும்பு விருதின் தந்தையே வழங்கிக் கௌரவித்தார்.

குருத்து இதழை இனி வெளியிடுவதில்லை என்ற முடிவான முடிவோடு நான் இருக்க என்னை தொடர்புகொண்டு இப்ப எனக்கு ஓய்வாக நிறைய நேரம் இருக்கிறது. 2012ம் ஆண்டு குருத்து வெளிவந்த பத்தாவது அகவை நிறைவு நாம் ஏன் 2012ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு இதழையாவது வெளியிடக்கூடாது எனக் கேட்டார். சரி வெளியிடுவோம் என அவரின் ஒத்துழைப்போடு பத்தாம் அகவை மலரின் பூர்வாங்க நடவடிக்கைகளிலே இறங்கியிருந்தேன். நாளை (11.12.2011) நாம் சந்தித்து இதழ் தொடர்பான மேலதிக விபரங்கள் பற்றி உரையாடிக் கொள்வோம். என்று என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொண்டார். அப்படி இருந்த வேளையில் இன்று (10.12.2011)என் தொலைபேசி தாங்கி வந்த சேதி என் அன்புக்குரிய அண்ணன், எமது இதழின் ஆலோசகன், அரும்பின் தந்தை, எமுத்தாளன் தத்துவத்தார் என்றும் சோழியூர் ஸ்ரீ என்றும் எங்கள் வாசக நெஞ்சங்களோடு உறவாடிய ஸ்ரீ துரைராஜ் மாரடைப்பால் மாண்டார் என்ற சேதி. விக்கித்துப்போய்  நிற்கின்றோம். அன்பு அண்ணனை ஆற்றல் மிகு ஆலோசகனை புலமை மிகு எழுத்தாளனை சமூகப் பணியாளனை இழந்து தவிக்கின்றோம். நாம். 

November 22, 2011

வாய்விட்டுக்கதறி அழவேனும் ஒரு தேசம் வேண்டும்.

ஈழதேசம் மிளிர
இன் உயிர் தந்தோரே?
சாவினை அணைத்தொரு
சத்தியம் செய்தோரே?
உங்கள் துயில் கலைத்து
துயிலெழும் நாளில்
வாய் விட்டுக் கதறி அழ
வக்கத்துப்போய் நிற்கின்றோம் நாம்

மாவீரரே!
உம் பெயர் சொல்லி அழ
தொலைத்த எல்லாவற்றோடும் - எம்
தன் மானத்தையும்
தொலைத்துவிட்டு நிற்கின்றோம் நாம்.

வாய் விட்டுக் கதறி அழும்
வல்லமை தான் இழந்து
நோய் பிடித்த உடலைப் போல்
சக்தி அற்று நிற்கின்றோம் நாம்

சோதிப் பிழம்பானவரே ! உமை
சுடரேற்றி தலை வணங்க
சுதந்திரமற்று நிற்கின்றோம் நாம்.

கார்திகைப் பூ எடுத்து உம்
கல்லறைகளில் தூவியழும் நிலை இழந்து
துன்பச் சுமை சுமந்து தவிக்கின்றோம் நாம்.

நாம் கூடி வாழ இல்லை
கூடி இருந்து உமை நினைத்து
வாய்விட்டுக்கதறி அழவேனும்
ஒரு தேசம் வேண்டும்.

வாரும் ஐயா ! இந்த
கார்த்திகை நாளில் ஒரு வரம் தாருமையா.

March 14, 2011

அழகிய அந்த மூன்று நாட்களை வரவேற்க்க காதிருப்போம்





சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரம்பரியத் திருவிழாவான வசந்த விழா ஒரு பற்றி பார்வை.. ஒலியில் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கடை கருத்துக்களையும் வாக்குகளையும் மறக்காமல் பதிஞ்சு விடுங்கோ....

February 28, 2011

கண்ணெதிரே ஈழத்திரையுலகு

இது வரை என் வாழ்வில் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட பல கலைநிகழ்வுகளில் பார்வையாளனாக, பங்காளனாக ஏன் ஏற்பாட்டா -ளனாகக் கூட இருந்திருக்கிறேன். ஆனால் இன்று(26.02.2011) சுவிற்சர்லாந்தில் நடைபெற்று நிறைவடைந்திருக்கக் கூடிய ஓர் நிகழ்வு எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்வையும் தந்திருக்கின்றது.


ஆம் லிப்ட் எனப்படும் பிரான்சை தலைமையகமாய் கொண்டியங்கும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் சுவிற்சர்லாந்தின் சூரிக் மாநிலத்தில் முதற் தடவையாக குறும்பட திரையிடல் நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது.
இந் நிகழ்வில் ஈழத் திரைத் துறை சார்ந்த இயக்குனர்கள், நடிகர்கள், பின்னணியில் நின்றோர் என பல படைப்பாளிகள் கலந்து தங்கள் குறும்படங்களை திரையிட்டிருந்தனர்.

பல உருவங்களிலும் பல வகைகளிலும் ஈழத்தமிழர்களின் திரைப்பட முயற்சி காலத்துக்கு காலம் தோற்றம் பெற்று பொருளாதாரரீதியில் முடங்குப்பட்டு வந்தாலும் இன்று நடைபெற்று நிறைவடைந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வு ஈழத்தமிழர்களில் திரைப்பட சங்கத்தின் பெயருக்கேற்ப (LIFT) படைப்பாளிகளை இனங்கண்டு மேலுயர்த்தும் பணி;யை சிறப்பாகச் செய்யும் என்ற நம்பிக்கையை தந்திருக்கின்றது.

அந்த நிகழ்வு ஆரம்பித்து மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர்தான் என்னால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடிந்தது. ஆதனால் முழுமையாக அங்கே திரையிடப்பட்ட குறும்படங்களை காண்கின்ற பேறு எனக்கு கிட்டவில்லை. ஆனால் ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நான் பார்த்த குறும்படங்களை வைத்துக் கொண்டே ஏனைவை பற்றிய கருத்தையும் நாம் கணித்துக் கொள்ளலாம்.

முதலாவதாக நான் பார்த்த குறும்படம் அவதாரம் நிறுவனத்தின் தயாரிப்பில் சதா பிரணவனின் இயக்கத்தில் வெளிவந்திருந்த தினப்பயணம் - பயம் என்கின்ற குறும்படம் பார்த்த அனைவர் முகத்திலும் ஈழத் தமிழரின் திரையுலகம் என்கின்ற கனவுலகம் வெகு தொலைவிலில்லை அதன் வாயில் தாண்டி உள் நுழைந்துவிட்டோம்  என்ற நம்பிக்கை ஒளியினைக் காணமுடிந்தது,

ஆம் அந்த குறும்படம் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பிரான்சில் நடைபெறும் ஒரு சம்பவத்தை மையக்கருவாக்கொண்டு பல விடயங்களை உணர்த்தி நின்றது. சிரிக்க வைத்ததோடு தமிழரின் இன்றைய ஒரே இலக்குக்காய் பல கோணங்களில் பிரிந்துகிடக்கும் நிலையைபற்றி சிந்திக்கவும் வைத்தது.

அடுத்து றமணாவின் இயக்கத்தில் செம்மலையான். போராளிகளுக்கும் இராணுவத்துக் இடையே நடைபெறுகின்ற போர்களக் காட்சியொன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம். ஆழகிய காட்சிப்பதிவும் கதை நகர்த்தலும். பிரான்சு தேசத்தின் காடொன்றில் தத்ரூபமான காட்சிப்படுத்தல் மேலைத்தேய தொழில்நுட்பத்துக்கு நிகராக குறைந்த வளங்களைக்கொண்டு எம்மாலும் முடியும் என்பதை நிரூபித்து நின்றது.   

அடுத்து மின்படிமங்களின் தயாரிப்பில் தயாளனின் இயக்கத்தில் வெளிவந்த குட்டி இதயம் இது அனைவர் இதயங்களை தொட்டுச் சென்றது. கள்ளம் கபடிமில்லாத வெள்ளைமனம் கொண்ட குழந்தைகளின் உள்ளத்தோடு நாமும் சேர்ந்து அந்த குழந்தைகளாகினோம் அந்த நிமிடங்களில்.

அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு.

இறுதியாக திரையிடப்பட்ட பாஸ்கரின் எனக்கும் உனக்கும் குறும்படம் கதையல்ல உண்மையில் நிஜம். எங்கள் தாயகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளை அழகான திரை நகர்வுடன் சொல்லியிருந்தார். அங்கு நடைபெறும் கொடுமை இங்கே எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. போரின்  வலி தாயகத் தமிழனே உனக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் எமக்கும்தான் என்பதை உனக்கும் எனக்கும் திரைப்படம் வலியோடு உணர்த்தி நின்றது.

மண்டபம் நிறையவில்லை. ஆனால் வந்தவர்கள் மனம் நிறைந்திருந்தது. ஒரு தமிழக திரைப்படக் கலைஞர் கலந்து கொள்கின்ற நிகழ்வெனில் முண்டியடித்து கலந்து கொள்ளும் எம்மவர்கள் எங்கள் மத்தியில் தோற்றம் பெறும் எங்களின் கலைஞர்களின் படைப்புகளுக்கு ஆக்கபூர்வமான ஆதரவினை வழங்க பின் நிற்பது மனதுக்கு வலியை தந்தது.

ஒரு தமிழக நடிகன் ஒரு நடிகையுடன் விடுமுறை சென்றான் என்றால் அதையே பெரிய செய்தியாக்கும் எமது ஊடகங்கள் எங்களின் கலைஞர் ஒரு படைப்பை வெளியிட்டான். ஒரு குளும்படத்தை திரையிட்டான் என்ற செய்திகளை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலை மாறும் காலம் தொலைவிலில்லை. ஈழத்தமிழர் மத்தியில் பல முழுநீளத் திரைப்படங்கள் குறுகிய காலத்துக்குள் வரும் என்கின்ற நம்பிக்கையையும் அந்த நிகழ்வு தந்திருந்தது.