Pages

February 7, 2016

எதிர்பாராப் பயணம் அது எதிர்கொண்டு வந்துவிட்டேன்


முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த
முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன்
இறங்கி நின்று படமெடுக்க - என்
இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை

விசுமடு தாண்டிப் போக நான் தொழுத
வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்
வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க
விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்

ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே
அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட
ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை
ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்

வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச
மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட
வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து
வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் - தமிழ்
வரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்
எதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்
இனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது

வீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாறை
விடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த
வித்துக்களின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

#ஈழத்துப்பித்தன்
07.02.2016

(படம்: வட்டு வாக்கால் பாலம். யுத்தத்தின் இறுதி மையப்புள்ளியாகச் சொல்லப்படும் இடம். இந்த நீரேரி இறுதி நேரத்தில் உடலங்கள் நிறைந்து செந்திறத்தில் ஓடியதாம். இறங்கி நின்று பார்க்க மனத்துணிவு இல்லாத்தால் வாகனத்தினுள் இருந்து எடுத்த படம்)

February 6, 2016

இளைஞர்களின் கனவே!!!

இளைஞர்களின் கனவே!!!
****************************
விடிகாலை சூரியனின்
விழி தெறித்த மலர் இதுவோ?
செங்காந்தள் மலர் போல
சிறகடிக்கும் விரல் இதுவோ?
சொக்கத்தான் வைத்திடும்
சொர்ப்பனம்தான் இதுவோ?
குலையாத அழகொழிரும்
குமர் இதுவோ?
கலையாத கூந்தலின்
கயல் இதுவோ?
தலை காட்டி நமை ஈர்க்கும்
தளிர் இதுவோ?
நிலை இல்லா வாழ்வினில்
நிலவு இதுவோ?
மலை போல மறைத்து நிற்கும்
மயில் இதுவோ?
பட்டாடை கட்டி வந்த
பவித்திரமும் இதுவோ?
பாரினில் எனை ஈர்த்த
பாவையும் இதுவோ?

இனி வரும் நாளில்
இளைஞர்களின்
கனவு இதுவே!!!

#ஈழத்துப்பித்தன்
03.02.2016

பட உபயம்: Kailase Kanagaratnam
எழுத தூண்டியவர்: Jeyarajan Rajan

February 4, 2016

(சு)தந்திர நாள்

(சு)தந்திரநாள்
*****************
இன்று சுதந்திர நாளாம்
சொல்லவும் கேட்கவும்
எவ்வளவு இனிக்கிறது

ஒரே நாடு
ஒரே தேசம்
கேட்க கேட்க
காதினிக்கிறது.

இந்தச் சுதந்திர
ஒரே தேசத்தின்
ஒரு தாய் மக்கள்தானாம்
நாம் எல்லாம்
எவ்வளவு இதமாயிருக்கிறது

என் தாத்தன் முதுகில்
சிங்களச் சிறி
சீராய் பதிந்ததும்
என் தந்தையின் கல்வி
தரப்படுத்தலுக்குள்
தாழ்ந்து போனதும்
நான்
புலம் பெயர்ந்து
புலன் இழந்ததும்
என் பிள்ளை
இன்னோர் நாட்டின்
சுதந்திர அடிமையாய் ஆனதும்
அவன் பிள்ளை
தான் யாரென்றே தெரியாத
இனமொன்றின் வாரிசு ஆவதும்

இந்தச்
(சு)தந்திர நாட்டின்
மக்களாய் பிறந்ததால்தானாம்

சுதந்திரம்
கேட்கவே காதினிக்கிறது.

சுதந்திரம்
சொல்லச் சொல்ல
நா இனிக்கிறது

#ஈழத்துப்பித்தன்
04.02.2016


January 28, 2016

நிழல்களில் வாழும் நினைவுகள் 2

நிழல்களில் வாழும் நினைவுகள் 2
****************************************
ஈழத்தமிழரின் இன்னொரு அடையாளம்.
கிளுவை வேலிகள் எப்படி யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறதோ. அதே போல் பூவரசும் அத்தகைய இடத்தை ஈழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பிடித்துள்ளது.
யாழ்ப்பாண வேலிகளில் பெரும்பாண்மையாக எல்லையை நிர்ணயிக்கும் எல்லைக் கதியாலாக பூவரசே இடம் பிடிக்கும்.
வன்னி போன்ற ஏனைய பகுதிகளில் காணிகள் ஏக்கர் கணக்கில் விசாலமாக விரிந்து செல்வதால் அப்பகுதிகளின் வேலிகளில் கணிசமான பகுதியை பூவரசே நிரப்புகின்றது.
பூவரசு கிளுவை போல் அல்ல விரைவில் அகன்றுவிடும் அதனால் குறைந்த பரப்பு காணிகளை கொண்ட யாழில் அந்த இடத்தை முற்று முழுதாக நீண்டகாலத்துக்கு மெலிந்த தோற்றத்தோடு இருக்கும் கிளுவை ஆக்கிரமித்துள்ளது.
பூவரசு நிறைந்த பலன் தரும் மரமாகும்.
சிறார்களாக நாம் இருந்த காலத்தில் பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதிய காலங்கள் மறக்க முடியாதவை.
பூவரசம் இலையில் புக்கை வேண்டிச் சாப்பிட்ட காலங்கள் என பூவரசம் இலைக்கும் எமக்கும் இடையேயான பந்தம் மிக நெருக்கமானது. சரஸ்வதி பூசை நேரம் எங்கட கிணத்தடி பிள்ளையாரடியில் செல்வண்ணை சகலகலா வல்லி மாலை பாடத் தொடங்கி மண்கண்ட வெண்குடை என்று கடைசி பாட்ட பாடத் தொடங்க நாங்களெல்லாம் தொங்கிப் பாய்ந்து இலை பிடுங்கீடுவம்.
பூவரசின் தடியை வெட்டி அதன் தோலை உரித்தால் எவ்வித சிராய்ப்பும் இல்லாத வழுவழுப்பான கட்டைகள் கிடைக்கும் அவற்றை உரிய அளவில் வெட்டி கிட்டிப்புல்லு விளையாடப் பயன்படுத்துவோம்.
கூடுதலாக பூவரசின் மெல்லிய கம்புகள்தான் வாத்திமாரின் கைகளில் சுழன்றாடி எம்மை பதம்பார்ப்பதுண்டு.
பூவரச மரமே மசுக்குட்டிகளின் வாசஸ்தலமாகவும் கோழிகளின் இரவுக்கான பாதுகாப்பரணாகவும் உள்ளது.
இணுவில் போன்ற புகையிலை பயிர்ச்செய்கை அதிகமாக உள்ள பகுதிகளில் புகையிலைக்கன்றுகளை நட முன்னர் குழை தாட்டல் இடம்பெறும். அந்தக் குழைதாட்டலுக்கு. கொப்புக் கொப்பாக பூவரசங் குழைகளே தாழ்க்கப்படும். இது பசளைக்காக தாழ்க்கப்படும். இப்போதும் அப்படியெல்லாம் உள்ளதா தெரியவில்லை.
இந்திய இராணுவகாலத்தில் இப்படித்தான் குழைதாட்டலுக்கு கொப்புகளை வெட்டிவிட்டு சாற்றி வைக்கப்பட்ட கதியால்களால் என் கண்முன்னே பல அப்பாவிகள் தாக்கப்பட்டது இன்னமும் நேற்று நடந்ததுபோல் நெஞ்சில் பதிந்துகிடக்கின்றது.
முன்னைய காலங்களில் இறந்தவர்களின் இறுதிக் கிரிகைகளின் போது நெஞ்சாங் குத்தியாக பச்சை பூவரசங் குற்றிகளையே வைப்பதுண்டாம். இது எனக்கான நெஞ்சாங்குத்திக்குரியதென்று சொல்லியே ஆச்சி அப்புமார் வளர்ப்பதுமுண்டு.
இடியப்ப உரல், கொக்கத்தடி, உழவாரப்பிடி, விளக்குமாத்துத்தடி என பூவரசின் பாவனை நித்திய வாழ்வுடன் கலந்து கிடக்கின்றது.
பூவரசு பற்றி நிறைய எழுதலாம். பூவரசையும் ஈழத்தமிழரையும் பிரிக்க முடியாதென்பதால்தானோ என்னவோ ஈழத்தின் புரட்சிக்கவிஞன் புதுவை இரத்தினதுரை "பூவரசம் வேலியும் புலுணிக்குஞ்சுகளும்" எனும் அழியாக் காவியத்தை படைத்துள்ளான்.

நிழல்களில் வாழும் நினைவுகள் 1

நிழல்களில் வாழும் நினைவுகள் 1
*************************************
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று கிளுவை வேலி.

கிளுவை பல நினைவுகளை தந்து போகும். சிறார்களாக நாம் இருந்தகாலங்களில் பல் விழும்போது அந்த இடைவெளிக்கு கிளுவங் கதியால் போடுவமோ என்ற சொல்லாடலை கேட்க்காமல் எவரும் அப்பருவத்தை கடந்திருக்கும் முடியாது.

நெருப்புப்பெட்டிக்குள் பொன்வண்டு வளர்த்த பருவத்தில் பொன்வண்டுக்கான உணவாக இக் கிளுவங்குருத்துக்களே இருந்துள்ளன.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு ஒன்றிய கிளுவையின் முள் விசத்தன்மை கொண்டது. இதன் முள் குத்தினால் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிளுவங் கதியால் வெட்டும் விற்பனையும் சூடு பிடிக்கும். இக்காலத்தில் எங்கையன் கதியால் கிடந்தா சொல்லுங்கோவன் என்ற சொல்லாடலை அதிகமாய்க் கேட்க முடியும்.

யாழின் அடையாளங்களில் ஒன்றான கிளுவை வேலி இப்போ வழக்கொழிந்து வருபவையின் பட்டியலில் இணைந்துள்ளது.

26.01.2016

September 17, 2015

கிணத்தடிப் பிள்ளையார்


இண்டைக்கு பிள்ளையாருக்கு பிறந்தநாளாம். நாங்களும் எங்கடை கிணத்தடிப் பிள்ளையாரைப் பற்றி நாலு வசனம் எழுதுவம்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலை இருந்து பிள்ளையார் எங்கடை பக்கத்து வீட்டுக்காரன்.

எங்கடை வீட்டுக்கு மேற்குப்பக்கத்து காணீக்கை பிள்ளையார் குடியிருக்கிறார். எங்கடை வீட்டைச் சுத்தியிருக்கிற பத்துப் பதினைஞ்சு வீடுகளுக்கான பொதுக்கிணறு அங்கைதான் இருக்கு அந்தக் கிணத்துக்கு காவலா இவர் எப்பவும் அதிலை இருப்பர்.

ஒவ்வருதரும் குளிச்சிட்டு வரேக்கை இவருக்கும் ஒரு வாளி தண்ணி அள்ளி ஊத்திட்டுத்தான் போவினம். அதாலை பிள்ளையாருக்கும் அண்டண்டு குளிக்கிறவையின்ரை தொகையைப் பொறுத்து குளிப்புத்தொகை மாறுபடும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்கடை அயலிலை உள்ள ஒவ்வொருத்தரும் குழைசாதம் காச்சி செல்வண்ணை தலமையிலை சிவபுராணம் முதல் பிள்ளையார் பாட்டுகள் எல்லாம்பாடி கூட்டுப்பிராத்தனை முடிச்சு கூடியிருந்து சாப்பிட்டு கலைவம்.

அதைவிட நவராத்திரி, திருவம்பா, பிள்ளையார்கதை, ஆவணி ஓணம், சதுர்த்தி, பொங்கல் அப்பிடி விஷேசநாள் எல்லாத்துக்கும் அந்தந்தகாலத்துக்கான பாடல்களோடை கூட்டுப்பிராத்தனையும் அவல், கடலை, மோதகம், வடையோடை களை கட்டும். சிவராத்திரிக்கு நித்திரை முழிப்பும் சித்திராக் கஞ்சியும் சிறப்பாயிருக்கும் இளையாம்பி ஆச்சி இல்லாட்டி அப்பமாச்சி எண்டு நாங்கள் செல்லமா கூப்பிடுற ஈரோஸ் தலைவர் இரத்தினசபாபதி அவர்களின் தாயாரின் தலமையில் கஞ்சி காச்சி ஊத்தப்படும். அந்தக் கஞ்சிக்காகவே எங்கடை அயலைவிட்டு போய் வேறை இடங்களிலை குடியேறினவையெல்லாம் அண்டைக்கு பிள்ளையாரை தேடிவருவினம். அப்பிடி ஒரு சுவையான கஞ்சி குடிச்சு இருவத்தைஞ்சு வருசமான பிறகும் அந்த வாசமும் ருசியும் இப்பவும் நெஞ்சுக்கை நிக்குது.

அப்பிடி ஒரு சித்திராப்பறுவநாளிலை எங்கடை அயலுக்கை உள்ள பத்துப் பதினொரு வயசுப்பெடியள் நான், சுதா,ரமேஷ் கண்ணா, நந்தன்(இப்ப கனடாவில் பிரபல தாளவாத்திய கலைஞன்) இன்னபிற எங்கடை வயசு மட்டங்கள் எல்லாம் சேந்து முடிவெடுத்தம் ஒரு கலை நிகழ்ச்சி செய்வமெண்டு (அந்த நிகழ்சிபற்றி வேறோர் பதிவில் விரிவா எழுதுறன்) அந்தக் கலைநிகழ்ச்சிதான் எனக்கு களம் தந்த முதல்மேடை.

விசேசநாள்களை விட ஒவ்வொருநாளும் பின்னேரம் அம்மாக்கள் கும்பிட்டுட்டு இருந்து ஊர்க்கதை பேச பிள்ளையள் சேந்திருந்து விளையாடுற இடமாயும் இந்த கிணத்தடிப் பிள்ளையாரே இருந்தார்.

எங்கடை வீட்டைச் சுத்தி பல பிரபல கோயிலுகள் இருந்தாலும் எங்கடை வீடுகளிலை நடக்கிற விசேசங்கள் எல்லாம் இவருக்கு முன்னாலைதான் குடிபூர்தலுக்கு படம் வைச்சு எடுக்கிறது காது குத்தல், சோறு தீத்தல் எல்லாம் இஞ்சைதான் நடக்கும். ஐயர் இல்லாமல் உண்டியல் இல்லாமல் எங்கடை குடும்பத்தில் உள்ள ஒருத்தனோடை உள்ள உறவுபோல எங்களுக்கும் எங்கடை கிணத்தடிப் பிள்ளையாருக்குமான உறவு எண்டைக்கும் நிலைச்சிருக்கும். இண்டைக்கும் நாங்கள் ஊர்போனா வீட்டுக்கை நுழைய முன்னம் பிள்ளையாரை பாத்திட்டு வீட்டுக்கை போறதுதான் வழக்கம்.

July 3, 2015

 பெரு மஞ்சம் ஏறி வரும் நாயகனே


அற்புதங்கள் இலங்குகின்ற இணுவையிலே
அருளாட்சி செய்கின்ற அரும்பொருளே!
பொற்பதம் தேடி வரும் அடியவரை - உன்
புன்னகையால் கட்டி வைக்கும் பேரரசே!
பெரு மஞ்சம் ஏறி வரும் நாயகனே - உன்
பெயர் சொல்லும் உலகெங்கும் தமிழினமே
வரலாறாய் வாழ்கின்ற வல்லமையே! - எம்
வாழ்விற்கு வழியான வடிவேலவனே!
ஊர் துறந்து வாழுகின்றோம்
உனை காணாது ஏங்குகின்றோம்.
பேர் அருள் புரியும் பெருமகனே!
ஊர் காணும் உன் விழாக் காண
அருள் தாரும் ஐயா!

July 3, 2014

என்ன தவறு நான் இழைத்தேன்
























குடமுழுக்கு காணுகின்ற இணுவைக் கந்தா
மனம் முழுக்க உன் நினைப்பில் தவிக்கிறேன் நான்
காட்சிகள் ஒவ்வொன்றும் கணனித் திரை முன்னே
சாட்சியாய் விரிகையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு
மஞ்சமதில் ஏறிவரும் மால் மருகா
நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கும் பேரழகா
என்ன தவறு நான் இழைத்தேன்;
எழிலோடு உருவான உன் கோவில் படி ஏறி
கும்ப நீரில் நீ குளிக்கும் கோலம்
கண்ணாரக் காணுகின்ற பேறிழந்து
கண்ணீர் மல்கி நிற்கின்றேன் நாம்.
தொலை தூரம் வாழ்வதனால்
தொலைந்ததுவே எல்லாம்
கடல் கடந்து வாழ்ந்தாலும்
கந்தா உனை மறவேன் - உங்கு
வந்து விடும் வரம் எனக்களித்தால்
வாசல் தேடி வந்து கும்ப விழா கண்டிடுவேன்.

April 8, 2014

அவள் வருவாளா?

அவள் வருவாளா?


அண்மைய நாட்களாய்
அவள் வருவாள் வருவாள் என
ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்
அவள் நிச்சயம் வருவாள் என
அதி நம்பிக்கை கொண்டிருந்தேன்
நீண்ட நாட்களின் பின்னரான அவளின் மீள் வரவு - எனை
நிச்சயம் மகிழ்விக்கும் என நம்பினேன்

காலை எழுந்து கண் விழித்த போது
அவளின் வரவு உறுதியாய் இருந்தது
மதியம் வரையும் அவள் வரவு
மறு பரிசீலனைக்கு வாய்பின்றி
மாற்றம் ஏதுமின்றி உறுதியாய்தான் இருந்தது

இடையே என்ன நடந்ததோ தெரியலை
இடையூறாய் அவள் அண்ணன்தான் வந்து நின்றான்.

நிச்சயம் இன்னொரு நாள் அவள் வருவாள்.....


#ஈழத்துப்பித்தன்

March 20, 2014

வசந்தம் வந்தது




வண்ணக் கதிரவன் ஒளியொடு
வான் உயர்ந்த மரமெல்லாம்
வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப
வசந்தம் வந்தது
வண்ணக் கதிரவன் ஒளியொடு

பூ மகள் மேனிதனை
பூக்கள் மறைத்து நிற்க
பாரே அழகில் மிதக்குது
பகலவன் சிந்தும் புன்னகையில்

இத்தனையும் பார்க்கையிலே
மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம்
தாய்மண்ணின் பிறந்ததற்காய்
தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம்
தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில்
தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ???
.

March 18, 2014

தடம் மாறிப் போகோம்.

தடம் மாறிப் போகோம்.


தமிழனாய் பிறந்ததால் - நாம்
தடம் மாறிப் போகோம்
நல் தலைவனை
நம் வழிகாட்டியாய் கொண்டதால்
நாம் என்றும் வழி மாறி
நகரோம்
நாட்டினை பிரிந்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கின்றது.
ஆதலால்
நரை வீழ்ந்து
நடை தளர்ந்து போனாலும்- நாம்
தடம் மாறிப் போகோம்.

18.03.2014
‪#‎ஈழத்துப்பித்தன்‬

December 6, 2013

கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..

இருண்ட கண்டத்தின்
இருள் அகற்றிய கதிரவனே!
வெருண்டது வெண்ணினம் - உன்
வீர எழுச்சி கண்டு
தொலைந்தது நிறவெறி
தொடர்ந்த உன் பணியால்
கொத்தடிமைத் தனம் உடைத்து - உன்
குடி அரசாள வழி அமைத்தாய்
ஒடுக்கப்பட்ட இனங்களின்
ஒளி விளக்கானாய்
துடிக்கிறது எம் இதயம்
தூயவனே உன் சேதி கேட்டு
இரத்த உறவொன்றை
இழந்த உணர்வு
எங்கள் உதிரமெல்லாம்
பரந்து நிற்கின்றது
கருப்புச் சூரியனே! போய் மீண்டும் வருக..
கண்ணீரோடு காத்திருக்கின்றோம்
கலங்கரை விளக்கினைத் தேடி
இருண்ட கண்டத்தின் நாயகனே!
இருண்ட எம் வாழ்வில் ஒளி ஏற்ற
இனி எம் தேசத்தில் வந்து பிறந்துவிடும். - எம்
தலைவனுக்கு அடுத்து நாம்
துதிக்கின்ற பேரொளியே
துயில் எழும் ஞாயிறே
தூமணியே போய்வாரும்.
ஆண்டுகள் ஆயிரமாய்க் கடந்தாலும் - என்றும்
அகிலத்தில் ஆதவனாய் நீ திகழ்வாய்.

December 4, 2013

எனக்குள் ஒருவன் இருக்கின்றான்


எனக்குள் ஒருவன் இருக்கின்றான்
அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான்
அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு
அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு

அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த
அவனியே என் காலடியில்
அடைக்கலம் போல் தோன்றும்
அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும்

அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது
அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என்
ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும்
ஆலயம் போல் அமைதியானதுண்டு.

01.06.2004

June 20, 2013

துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு


நீண்ட நாட்களின் பின்
நிலவு பூத்தது போல் இவ் இரவு
சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம்
சோகம் எல்லாம் மறைத்து நிற்க
மத்தாப்பு பூத்து
மனம் முழுக்க சிரித்து நிற்க
எத்தனையோ நாட்களாய்
ஏக்கத்தோடு உறங்காத கண்கள்
சேதி அறிந்த கணம் முதல்
சிலிர்த்து சொரிந்த கண்ணீரில்
உப்பு உறைக்கவில்லை
உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது

துன்பத்தை தந்தவனுக்கே
திருப்பிக்கொடு - என்று
சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள்
ஆடுகளத்தை அசர வைத்து
போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள்
கதை மீண்டும் கதையாகாமல்
கவனப்படுத்திய காட்சி கண்டு
உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது
உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!!

June 15, 2013

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்து போனது

மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு.

இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன்.

2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.

புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.

அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.

புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.

ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்.

March 17, 2013

மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

  • முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி
    முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம்
    தம்பியர் தூண்டி விட்ட திரியில்
    துயருற்றிருந்த - எங்கள்
    மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது
    மலரும் எங்கள் தேசம் என்ற
    மமதையில் நிற்கின்றோம்.

    அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள்
    அன்னை தமிழகம் இருக்கின்றது
    சுற்றி வரும் பகை யுடைத்து
    சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின்
    வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே
    விழி திறந்து விடுதலைக்காய்
    வழி திறந்து விட்டிருக்க
    வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம்

    கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை
    கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம்
    கலங்கிக் கிடந்த எங்கள் கண்கள்
    கல்லூரி மாணவரே உங்கள் கரங்களால் துடைக்கப்படுகின்றது - எங்கள்
    திலீபனின் வழியில் நீங்கள் தொடுத்து நிற்கும் போர்
    தீச் சுவாலையாய் தமிழகம் தாண்டி
    தமிழன் வாழும் இடமெல்லாம் பரந்துவிட்டது

    எல்லாம் இழந்தோம் என்றிருந்தோம்
    உங்களைக் கை விடோம் நாம் இருக்கின்றோம் என்று
    உணவு தவிர்த்து உடல் வருத்தி நீவீர்
    உணர்வோடு காட்டுகின்ற அக்கறையில்
    உளம் மகிழ்ந்து நிற்கின்றோம்
    வார்த்தைகள் வரவில்லை
    வலுவிழந்த இனத்திற்கு வடிகால்களாய் நீங்கள்
    வந்தீர்கள் வான தூதர்களாய்
    மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை...

January 1, 2013

நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2013


எண்கள் மாறும் வேளை - நம்
நெஞ்சங்களில் உள்ள
வஞ்சங்கள் தொலைந்து
எண்ணங்கள் செழுமைபெற்று
எண்ணிடும் கருமங்கள்
எண்ணம் போல் வெற்றி பெற்று
வண்ணமாய் வாழ்வு செழித்து
வரலாறு படைக்க வாழ்த்துகின்றேன்.

இணுவையூர் மயூரன்

December 7, 2012

தமிழூடாய் நீ வாழ்வாய்...

இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கன்னித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத் தொடங்கிய காலம்.

நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து 'குருத்து' என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு வாசக வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்கி வந்தது. குறிப்பாக யாழ். இணையமும் அதன் கருத்துக்களமும் பெரும் ஆதரவு நல்கியிருந்தது.

இக் காலப் பகுதியில் உலகின் பல பாகங்களிலிருந்தும் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் எங்கள் மின்னஞ்சலை தினமும் நிறைத்த வண்ணம் இருக்கும். பல வகையான ஆக்கங்கள் வித்தியாசமான படைப்புகள் என வரும். அவற்றில் சில நெஞ்சில் நிறைந்து நிற்கும்.

அப்படித்தான் 'அம்மாவின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எங்கள் மின்னஞ்சலின் வரவுப் பெட்டிக்குள் வந்து விழுந்திருந்தது. படித்ததும் நெஞ்சில் நிறைந்தது. எழுதியவர் பெயரைப் பார்த்தேன் 'ஈழநாதன்' என்று இருந்தது. யாரோ ஒரு பெரியவர் புனை பெயரில் எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். மீண்டும் சில காலங்களில் 'எதிர்ப்பு' என்ற பெயரில் சிறுகதையொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு குறியீட்டுக் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. சரி அவரைத் தொடர்பு கொள்வோம் என மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அக்குறியீட்டுக் கதையின் மூலகாரணமாக அமைந்த யாழ். நூலகம் பற்றியும் அதற்கு இணையாக நாமும் ஒரு இணைய நூலகமொன்றினை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியம் பற்றியும் குறிப்பிட்டார். அவரோடு உரையாடியதில் பல விடயங்களில் எமக்குள் ஒற்றுமையும் ஒரே இலட்சியமும் இருப்பது தெளிவாயிற்று. அவரின் இணைய நூலக உருவாக்கத்திற்கு ஆதரவு நல்குவதாக வாக்களித்தேன்.

அப்போதுதான் அவர் தனது வலைபதிவுகள் பற்றியும் குறிப்பிட்டார். அச்சு ஊடகங்களில் மட்டும் எழுதாது வலைப்பதிவுகளையும் செய்யுமாறு கோரினார். kuruthu.yarl.net எனும் பெயரில் வலைப்பதிவொன்றினை தொடங்கி எனது படைப்புக்களைப் பதியத் தொடங்கினேன். குருத்து இதழின் ஆசிரியராக இருந்து அதன் பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவு செய்ததால் வலைப்பதிவில் நேரம் செலுத்த முடியாது போனது. கனடாவிலிருந்து வலைப்பதிவை மேற் கொள்ளும் நண்பர் கவிதனின் அன்புக் கோரிக்iயால் என் ஆக்கங்களை அவரது கவிதைகள் என்ற வலைப்பதிவில் அவர் மூலம் பதிவு செய்து வந்தேன். ஈழநாதன் எனக்கும் கவிதனுக்கும் பொதுவான நண்பராக இருந்ததால் கவிதனின் தளத்தில் ஈழநாதன் தனது கருத்துக்களை பதிவிடுவார்.

எமது குருத்து இதழ் யாழ். பல்கலைக் கழக சமூகத்தின் ஆதரவுடன் தாயகத்திலும் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் நான் மூழ்கிப் போனதால் ஈழநாதனுடனான தொடர்பு வலைப்பதிவோடு மட்டுமே மட்டுப்பட்டுப் போனது. சமவேளையில் யாழ் கருத்துக்களத்தில் ஈழவன் என்ற பெயரில் கருத்தாடல் செய்யும் நண்பராகவும் அறிமுகமாகினார். பல தரப்பட்ட கருத்துக்கள் சிந்திக்க தூண்டும் எண்ணங்கள் என கருத்தக்களம் களைகட்டத் தொடங்கிய காலம். நெற்பயிர் சிறப்பாக வளர்கின்றது என்றால் அங்கே களையும் அதே வேகத்தில் வளரும் என்பது இயற்கையின் நியதிதானே. கருத்துக்களமும் அப்படித்தான் ஆனது. அதனால் ஒதுங்கிக் கொண்டோம்.

நீண்ட இடைவெளியின் பின் ஈழநாதன் இணைய நூலகம் ஆரம்பிப்பதற்குரிய நேரகாலம் கூடி வந்ததும் என்னை தொடர்பு கொண்டார். அவர் அழைத்த நேரம் மிகவும் இக்கட்டான காலப்பகுதி பல தரப்பட்ட சிக்கல்கள், குருத்து இதழ் இனி வரமுடியாது என்ற நிலை, மிகவும் மனமுடைந்து போயிருந்தேன். என்னால் வேறு எத் திட்டங்களுக்குள் புதிதாய் என்னை இணைத்தக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை. ஈழநாதனுக்கு சிலரை இனங்காட்டி வைத்தேன்.

எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இனி நான், என் வாழ்வு என்று வாழ நினைக்க என் பெற்றோர் எனக்கு திருமணம் பேசி இல்லற பந்தத்தினுள் நுழைக்க ஏற்பாடு செய்தனர். முதற் பார்த்த பெண் பெயர் கேட்டதுமே பிடித்துப் போயிற்று. ஆம் தேன்மொழி என் இல்லறத் துணையென நிச்சயிக்கப்பட்டாயிற்று. தேன்மொழியின் அண்ணாவின் பெயர் ஈழநாதன் அந்த ஈழநாதன் தான் எழுத்துலகூடாய் எனக்கு அறிமுகமாகியிருந்த ஈழநாதன் என நான் நினைக்கவில்லை. எனது மனைவிக்காக நான் கவிதனின் வலைப்பதிவில் எழுதிய நினைவிருக்கிறதா?  என்ற கவிதைத் தொடர் தொடர்ச்சியாக வெளி வந்தபோது ஈழநாதனும் கருத்தெழுதிச் செல்வார். சிறிது காலங்களின் பின்தான் தெரியவந்தது எனது மனைவியின் அண்ணாதான் அந்த ஈழநாதன் என்று.

குடும்ப உறவான பின்னும் குடும்ப நலங்கள் பற்றி நாம் பேசிக் கொண்டது மிக மிகக் குறைவு. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் இலக்கியங்கள் பற்றியும் ஈழத்தவர்களின் படைப்புகள் பற்றியும்தான் மணிக்கணக்கில் பேச்சு நீளும். 2007களில் இருந்து ஈழநாதன் எழுதுவது என்பது முற்றாக இல்லாமல் போனது. இருந்தபோது புதிதாக எழுதுபவர்கள் பற்றியும் புதிதாக வருகின்ற படைப்புகள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களுடன் இருந்தார்.

ஈழத்தவர்களின் ஆக்கங்கள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அதற்கு உரிய அங்கீகாரம் கிட்ட வேண்டும். அவற்றைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவர வேண்டும். மலிந்த விலைகளில் நூல்கள் அச்சிடப்பட்டு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதுவே ஈழநாதனின் பேரவாவாக இருந்தது.

இப்படி படைப்பாளிகளையும் அவர் தம் படைப்புக்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என துடித்த ஈழநாதன் இலக்கியம், தமிழ்ச்சமூகம், அரசியல், திரையுலகம், அறிவியல் என பல தரப்பட்ட விடயங்களில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதி இணையத்தளமெங்கும் விதைத்துச் சென்றிருக்கின்றார். அவரின் ஒரு சில ஆக்கங்களேனும் அவரது ஆசைபோல அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு சில ஆக்கங்கள் அவரது நினைவு சுமந்து வெளிவருpன்ற 'அறிவுக் களஞ்சியம்' என்ற இந்த நூலில் தொகுக்கப்படுகின்றது. அவரை நாம் இழந்து தவித்த நேரத்தில் அவரது எழுத்துலக நண்பர்கள் பலரும் எழுதிய நினைவுக் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே இணைக்க முயற்சித்த போதும் அதற்கு காலம் அவகாசம் தரவில்லை. முடிந்தவரை கிடைத்தவை இணைக்கப்பட்டுள்ளது.

ஈழநாதனின் உடல் மட்டுமே எமை பிரிந்திருக்கின்றது. உணர்வுகளும் எண்ணங்களும் அவரின் எழுத்துக்கள் மூலமும் எழுப்பிச் சென்றிருக்கும் இணைய நூலகம் மூலமும் வாழ்வாங்கு வாழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இணுவையூர் மயூரன் 

அறிவுக்களஞ்சியம் ஈழநாதனின் 60வது நினைவுநாளையொட்டி (27.11.2012) அன்று வெளியிடப்பட்ட 'அறிவுக்களஞ்சியம்' எனும் சிறப்பு வெளியீட்டுக்காக எழுதப்பட்டது.

August 26, 2012

எங்கள் ஊரின் அடையாளம்

காங்கேசன் துறைவீதியில்
இணுவைப்பதியின் எல்லையை
இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால்
ஊரின் நடுவில்
உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம்.
புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு
புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம்.

சீனிப் புளியடி
பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் .

எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான்
புவி எங்கும் அறிமுகம்
குடை போல விரிந்த மரம்
குளிரோடு தந்த நிழலில்தான்
இடைவேளையில் அம்மா கட்டித் தந்த
இடியப்பமும் முட்டைப் பொரியலும்
கவளமாய் களம் இறங்கும்.

வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த
மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு
தொண்டை தண்ணி வத்த ச ப
சொல்லித் தந்தும் அங்குதான்.
கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான்
உடற்பயிற்சி வேளை முடிய
உற்சாகம் தேடி சாய்ந்து இருந்து கதை பேசுவதும் அங்குதான்
பாலசிங்கம் வாத்தியார்
தான் படித்த கதைகளையெல்லாம் - நாம்
வாய் பிளந்து கேட்டிருக்க சுவை கலந்து சொல்வதும் அங்குதான்.

எத்தனை முறை
எங்களிடம் கல்லடி பட்டிருக்கும்
அத்தனை முறையும் தந்தது
நாவினிக்கும் சீனிப் புளியதைத்தான்

போன முறை ஊர் போனபோது
எனக்கு நாலாம் வகுப்பு  படிப்பிச்ச
பரஞ்சோதி மாஸ்ரர்தான்
பள்ளியின் அதிபராய் இருந்தார்.
அந்த மர நிழலில்தான் மணிக்கணக்காய்
அமர்ந்திருந்து கதை பேசினோம்
இந்த முறை போன போது பெருத்த ஏமாற்றம்
அவரும் இல்லை அந்த மரமும் இல்லை.....


June 9, 2012

பாடுகின்றேன் பல்லாண்டு.

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுததாபனமே!
அகில வான் பரப்பில் உன் மூலம் தமிழ்
ஒலிக்கத் தொடங்கியதன் பதினைந்தாம் அகவைநாள் இன்று
பத்தொடு ஐந்தாண்டுகள் பாரினில் - உன்
பணி தொடரும் வேளை பாடுகின்றேன் பல்லாண்டு.

எடுத்த காரியம் யாவினும் வெற்றியென
என் வீட்டு வானொலி பெட்டி
தன்னம்பிக்கை தந்து - ஒரு உறவாய்
என்னோடு உறவாடத் தொடங்கி
மூவைந்து ஆண்டுகள் முன் வந்து நிற்குது இன்று

ஊடகப் பணி செய்ய உவகையுடன் வாய்ப்பளித்து
உலக வான்பரப்பில் உன்னூடாய் என் குரலும் ஒலிக்க வைத்தாய்
அந்த நன்றியின் உணர்வொடு பாடுகின்றேன் பல்லாண்டு
வாழிய நின் புகழ் வையகம் உள்ள மட்டும்.