Pages

March 22, 2020

கொரோனா தந்த வாழ்வு



கடந்த பத்து நாட்கள் ஏதோ நகர்கிறது என்ற ரீதியில் வாழ்க்கை நகர்கின்றது.

காலை வேலை தபாற்துறை சார்ந்த வேலை என்பதால் கட்டாயம் செல்ல வேண்டும். அதன் பின் வீடும் சமையல், சாப்பாடும் இடைக்கிடை வாசிப்பும் தமிழ்கன் புண்ணியத்தால் புதுப்படங்களும் பிள்ளைகளுடன் குதூகலிப்புமாய்  பொழுது கழிகின்றது.

இடையில் இரு நாட்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனவு, அதுவும் காலை 9.00 மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு சென்றால் பால், முட்டை, மா, இறைச்சி வகை அத்தனையும் முடிந்திருக்கும். இன்றுவரை அப்படித்தான்.

பொதுப் போக்குவரவு ஊர்திகளில் இப்போ நாம் அழுத்தாமல் அதுவாகவே கதவை திறக்கும். அப்படியே முட்டாமல் ஏறி வடிவேலு பயணஞ் செய்ததுபோல கம்பிகளில், கைபிடிகளில் பிடிக்காமல் ஆடி அசைந்து ஒருவாறு இலக்கை எட்டி வேறு பிராந்தியங்களிலுள்ள கடைகளில் தேவையானவற்றை வாங்க முடிகின்றது. சிலவேளை கடையின் அளவுக்கேற்பதான் உள்ளே அனுமதிப்பார்கள் இலக்கம் பெற்று காத்திருந்து உள் சென்று பொருட்களை எடுத்து வந்து பணஞ் செலுத்த வந்தால் அங்கும் குறைந்தது இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு காத்திருந்துதான் பணம் செலுத்தி வரலாம்.

ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. தென்னாலி கமல் சொன்னது போல எதைப் பார்த்தாலும் பயம் யாரைப் பார்த்தாலும் பயம் யாராவது செருமினாலும் பயம் அருகே வந்தாலும் பயம் கதவு கைபிடி தொடப் பயம் இப்படி நூறு பயம்.

ஊரே சா விழுந்த வீடுபோல மயான அமைதி. நித்தம் என் பொழுதுக்கு விருந்தாகும் எங்கள் வீதி பிரான்சையும் சுவிசையும் இணைக்கும் பிரதான வீதி. எப்போதும் கல கலப்பாயிருக்கும். இப்போ தன் சோபை இழந்து கிடக்கிறது.

பத்து நாட்களுக்கு முன் பள்ளி விட்டு வீடு வந்த பிள்ளைகள் இன்னும் படி தாண்டி வெளியே செல்லவில்லை. இந்த மாதம் அவர்கள் பெரும் எதிர் பார்ப்போடு ஆறு மாதங்களாய் காத்திருந்த மாதம். வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சிறார்களுக்கு சிறகு முளைக்கும் மாதம் இது. குளிர் முடிந்து வசந்தம் வீசத் தொடங்கிவிட்டது செரி மரங்களும் மங்கோலியன் மரங்களும் மரம் தெரியாமல் பூத்துக் கிடக்கின்றன. குங்கும மலர்களும் ஈஸ்ரர் மணி மலர்களும் போட்டி போட்டு நிலபாவாடை விரித்து நிற்கின்றன. இந்த அழகை ரசிக்க காத்திருந்த எவரிடமும் இன்று அந்த மனநிலை இல்லை.

சில நூறு மீற்றர் தொலைவில் வசிக்கும் அம்மா அப்பாவை சென்று பார்க்கவும் சட்டமில்லை. பேரமக்களை பார்க்க வேண்டும் என்று நித்தம் அவர்கள் வெளிப்படுத்தும் ஆசையையும் தீர்க்க முடியவில்லை. பயத்தை தின்றவர்கள் நாம் என்று போலியாய் ஒரு முகமூடி தரித்து வலிந்து சிரிக்கிறோம்...

சிலபேர் முள்ளிவாய்க்காலுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் அது வேறு இது வேறு என்பதை உணராமல்

நம்பிக்கை இன்னமும் உள்ளதால் நகர்கிறோம்...

#இணுவையூர்_மயூரன்

October 30, 2018

கலாச்சார விருது 2018

சுவிற்சர்லாந்தின் பாசல் மாநில அரசின் இவ்வாண்டுக்கான கலாச்சார விருது  எங்கள் தாய்க் கலையகமான Radio xற்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்வு இன்று பாசல் மாநில பாராளுமன்ற பேரவையில் நடைபெற்றது.

பலநூற்றாண்டுகளைக் கடந்த தொன்மைமிகு பாராளுமன்றக்கட்டம் இன்னமும் அந்த தொன்மைகள் அழியாவண்ணம் காக்கப்படுகின்றது.

28 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் இதுவரை பேரவையை சென்று பார்க்க முயற்சித்ததில்லை. உத்தியோகபூர்வ அழைப்போடு நாம் சார்ந்த விருதுக்காக உள் நுழைந்தபோது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

இந்நிகழ்வினை பாசல் மாநில முதல்வர் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் பேரவை முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் ஊடகத்துறையினரும் நடுவர்களாகப் பங்குபற்றியோரும் கலந்துகொண்டார்கள்.

விருதினை மாநில முதல்வர் வழங்க எங்கள் வானொலியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெற்றுக்கொண்டார்.

இவ் விருதினைப் பெறுவதற்கு முக்கிய காரணியாக அரபு மற்றும் தமிழ்ச் சேவைகள் இருந்துள்ளதாக பாசல் மாநில கலாச்சார அமைச்சின் விருதுக்குழுவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உட்பட 13 மொழிச் சேவைகளும் 12 இசை இளையோர்சார் சேவைகளுமாக 25 சேவைகள் இவ் வானொலியூடாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விருதாக வழங்கப்பட்ட இருபதாயிரம் சுவிஸ் பிராங்கில் அரைப் பங்கு புதிய இணைய வடிவமைப்புக்கும் கால்ப்பங்கு 25 சேவைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதோடு மிகுதித்தொகை வானொலியின் நிகழ்வுசார் செயற்பாடுகளுக்கும் செலவளிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு விருந்தும் நடைபெற்றது.

29.10.2018

September 11, 2018

வேலூர் பொற்கோவில்

2015 தமிழ்நாடு சென்றிருந்தபோது நாட்டின் பல முக்கிய தலங்களையும் சென்று பார்வையிட்டிருந்தேன். திருநெல்வேலியை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் வழிகாட்டியாகவும் சாரதியாகவும் இருந்தார். மிகவும் கலகலப்பான மனிதர்.

ஒருநாள் கேட்டார் "அண்ணா வேலூரில் ஒரு பொற்கோவில் இருக்கு போய் பாத்திட்டு வந்திடுவமா? காலையில புறப்பட்டா சாயங்காலமே வந்திடலாம் என்று ஆசையை கூட்டினார்.

சரி என்று புறப்பட்டு வேலூருக்கு நுழைந்து இரு பக்கமும் புளியமரம் குடை பரப்பும் வீதியூடாய் சிறைச்சாலை சுற்று மதிலையும் தாண்டி சிலோன்காரங்க ஊர் என்று செல்லப்படும் அரியூர்  நோக்கி பயணித்தோம்.

சாஸ்திரி - சிறீமா ஒப்பந்த அடிப்படையில்  மலையகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் பகுதியாக இப்பகுதி உள்ளதால் இப்பகுதி சிலோன்காரங்க ஊர் என அழைக்கப்படுகின்றது.  அந்த ஊரின் மலைகோடி என்ற இடத்தில்தான் பொற்கோவில் அமைந்துள்ளது. இன்று அந்த இடம் சிறீபுரம் என அழைக்கப்படுகின்றது.

பொற்கோவில் தக தக என்று மின்னியபடி ஒரு பெருவீதிக்கரையில் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சாதாரண நுழைவாயிலில் வழமையான உடற்சோதனை முடித்து உள் நுழைந்தபோதும் கோவிலை காண முடியவில்லை. நட்சத்திர வடிவிலான ஒரு பாதையே காணப்பட்டது. 1500 ஏக்கர் பரப்பளவான கோவில் வளாகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர  வடிவிலான வீதி அமைப்புடன் நடுவில் பொற்கோவில் அமைந்துள்ளது. அந்த நட்சத்திர வீதியின் முழுமையான நீளம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் அந்த வீதியை முழுமையாக நடந்து முடித்தால் பொற்கோவிலினுள் நுழைய முடியும். கூரையோடு அமையப்பட்ட நட்சத்திர வீதி சுத்தமாகப் பேணப்படுகின்றது. இயற்கை கொஞ்சும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் நட்சத்திர வீதியில் நடப்பதென்பது அப்படியொரு ரம்யமாயிருக்கும் இயற்கை இருபக்கமும் பாய் விரித்திருக்கும் இயற்கை, நீர் ஊற்றுக்களும் நறுமணம் சொரியும் மலர்களுமாய் மனம் நிறையும். வெய்யில் சுட்டெரித்து பொட்டல்காடுகளாய் கிடக்கும் வேலூரில் இப்படி ஒரு இடமா பிரமிப்பாயிருந்தது. 

இந்தப் பகுதி முன்னர் அடர்ந்த காடாகவும்  சித்தர்களும் முனிவர்களும் உலவிய தியானம் செய்த பகுதியெனவும் அந்த இடத்தில் நாராயணி அம்மனை நினைந்து சக்தி அம்மா எனப்படும், ஆலய தர்மகர்த்தா தியானமிருந்து அருள்பெற்று இந்த கோவிலை கட்டினார். இந்த கோவில் அமைவதற்கான இடத்தினை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார்.   

நட்சத்திர வடிவ வீதியின் நிறைவில் கதிரவனின்ஒளி பட்டு தெறித்து மின்னும் தங்கக்கோவிலின் நுழைவை அடைந்தோம்.  நாராயணி அம்மன் மூலவராய் தங்கவர்ணத்தில் ஒளிபரப்பும் அற்புதக்காட்சியை அருகிருந்து தரிசித்தோம். சுமார் 1500 கிலோ தங்கத்தில் தூண் சுவர்கள் உட்பட முழுமையாய் அமைந்துள்ள கோவிலின் வனப்பை கோவிலின் உட்பகுதி வரை சென்று தரிசிக்க முடியும், எவரும் சுவரைகூட தொட்டுப்பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலை சூழவும் அகழி அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. 

கோவில் தரிசனம் முடிந்து வெளியேறி வரும்போது அன்னதானசேவை இடம்பெறும் இடமுள்ளது. அறுசுவை மிகு அன்னதானம் சுத்தமான சூழலில் வழங்கப்படுகின்றது. கோவிலில் உண்டியல் எதையும் காணவில்லை. காணிக்கை செலுத்த விரும்புவோர் அதற்கென குறிக்கப்பட்ட இடங்களில் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அன்னதானத்திற்கு பொருட்களை தானம் செய்ய விரும்புவோர் அங்கேயே நியாய விலையில் வாங்கி தானமாக கொடுத்து பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

கோவில் வளாகத்தின் வெளியே 150 நோயாளர் தங்கக்கூடிய மருத்துவமனை உள்ளது. வெறும் 500 ரூபாயோடு பிரசவம் பார்க்கப்படுகின்றதாம். பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் அங்கு பிறந்ததாக பணியாளர் ஒருவர் கூறினார். மேலும் பல உதவித் திட்டங்கள் ஆலயதால் முன்னெடுக்கப்படுவதையும் அறிய முடிந்தது.

ஆலய சூழல் முழுவதும் சக்தி அம்மா எனப்படும் ஆலய தர்மகர்த்தாவின் படம் நாராயணி அம்மனைவிடவும் அதிகளவு ஒளிர்வோடு பிரகாசித்தது. அது மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது. 

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொற்கோவிலை தரிசித்த நிறைவோடு எமது வாகனம் புளியமரச் சாலையூடாய் 150 கிலோமீற்றர் தொலைவிலிருந்த சென்னை நோக்கிப் பறந்தது.

#உலாத்தல் 2015


May 20, 2018

உலாத்தலும் உறவுகளும்

ரூபனுடன் ஒரு சந்திப்பு
********************



ரூபன் 2002களிலிருந்து அறிந்த நண்பர். நான் "குருத்து" இதழின் ஆசிரியராக இருந்த சமகாலத்தில் ரூபன் நோர்வேயிலிருந்து "இளம்பரிதி" என்ற சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் கனடாவிலிருந்து வந்து அனைத்துலக இளையதலைமுறையினரை ஒருங்கிணைந்த பார்த்தீபனூடாக ரூபனும்  இளம்பரிதி இதழும் அறிமுகமாகின.

எழுத்துத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சம வயதினராய் அறிமுகமான ரூபனை 2003 யூலை மாதம் வன்னியிலுள்ள பாண்டியன் எனப்படும் தமிழீழ அரசின் விருந்தினர் விடுதியில் சந்திக்க முடிந்தது ஒரு சுவையான அனுபவம்.

ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியிருந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்கு  தெரியாது. பாண்டியன் விருந்தினர் விடுதிக்கு சென்று நுழைந்த என்னை வாசல் வந்து வாங்கோ மயூரன் என்று வரவேற்றுக் கொண்டவர் ரூபன் பின்னே நோர்வேயை சேர்ந்த குயின்ரன் அண்ணா. ஆச்சரியமாய் இருந்தது நான் கேட்பதற்குள் ரூபனே முந்திக்கொண்டு இன்று நீங்கள் வருவதாக முன்னரே அறிவித்தல் வந்தது என்று என் ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக தமிழீழ அரசின் விருந்தினர்களாக அங்கே ஒன்றாகத் தங்கியிருந்தோம் மூன்று உணவுவேளைகள் மற்றும்  இரவு வேளைகளில் அதிகம் பேச முடிந்தது. சேர்ந்திருந்து போராளிகளிடம் போரியல் அனுபவங்களை கேட்டறிந்தது தமிழீழத் திரைப்படப்பிரிவினால் ஈழத்தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு திரைப்படங்களை சேர்ந்து பார்த்ததென நிறைந்த பொழுதுகளாய் ரூபனோடு கழிந்தது.

பின்னர் பேஸ்புக் மீண்டும் ரூபனுடனான நட்பைப் புதுப்பித்தது. இம்முறை திடீர் குறுகிய கால நோர்வே பயணம் ரூபனை சந்திக்கும் காலத்தை ஏற்படுத்தித்தருமென  நான் நினைக்கவில்லை. ஆனாலும் ரூபனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் ரூபனோடு சில மணித்துளிகள் அளவளாவ முடிந்தது மகிழ்வு. நிறைய விடயங்கள் உரையாட முடிந்தது. விரைவில் ரூபனின் கவிதைத் தொகுப்பொன்றும் நூல் உருவில் வரவுள்ளதாக அறிந்தேன். வாழ்த்துகள் ரூபன்.

#உலாத்தலும்_உறவுகளும்

May 14, 2018

உலாத்தலும்_உறவுகளும்

கோப்பி வித் குகன் அண்ணா
************************


பேஸ்புக்கூடாய் அறிமுகமாகி எங்களோடு சரிக்கு சரி பம்பலடிக்கும் அன்பு உள்ளம். எங்களோட பம்பலடிச்சு திரியிறதாலை ஆளும் எங்களை மாதிரி ஒராள் எண்டு நினைச்சா அது தவறு ஆள் ஆளுமையான மனிதன். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றது.

பரணி அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரது நட்பு வட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அவரது இசைப்பேழை வெளியீடு மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு அவருக்கு தெரியாமல் சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து நான் ஒஸ்லோ பயணப்பட முடிவெடுத்தபோது குகன் அண்ணாதான் நினைவுக்கு வந்தார். அவரை தொடர்புகொண்டு எனது வரவு பற்றி சொன்னபோது தானே விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதாய் உறுதியளித்தார்.

அதேபோல் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இன்முகத்தோடு கவிதாக்காவின் கைவண்ணத்தில் அருமையான மதிய உணவு வடை பாயாசத்தோடு தந்து திக்குமுக்காட வைத்து விட்டார்.  அவரது வீட்டில் தங்குவதற்கான அத்தனை ஒழுங்குகளையும் அவர் செய்துதந்தபோதும் பரணி அண்ணாவின் உரிமைப்போரினால் அது சாத்தியப்படாது போய்விட்டது.

ஆளுமைமிகு வானொலி ஒலிபரப்பாளரான குகன் அண்ணா இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முரசம் வானொலியின் ஒலிபரப்பாளராக சேவை புரிந்துவருகின்றார் வானொலியின் இன்றைய சந்திப்பு நிகழ்வில் என்னையும் அழைத்துக் கௌரவப்படுத்தியிருந்தார்.

ஒரு வானொலி அறிவிப்பாளரான எனக்கு ஒலிபரப்புத்துறை சார்ந்து அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் கிடைத்தன. பேஸ்புக் தந்த பெயர் சொல்லும் சில நட்புக்களில் அவரும் ஒருவரானது மனநிறைவைத் தருகின்றது.

#உலாத்தலும்_உறவுகளும்

April 26, 2018

''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு"


இன்று (22.04.2018)  ஊடகவியலாளர் சண் தவராஜாவின் ''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு" எனும் கட்டுரைத் தொகுப்பு சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் வெளியிடப்பட்டது.
அகரம் சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த அவரது எழுபது கட்டுரைகளில் 25 தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றிருந்தது.
சிலவற்றில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் ஊடகவியலாளராக அவரின் பட்டறிவுகளூடான பார்வையென்று பார்க்கின்றபோது காலத்துக்கு தேவையான ஒரு படைப்பாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சிறப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந் நிகழ்வு மிகச் சரியாக குறித்த நேரத்துக்கு ஆரம்பமானது. அதுமட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு பின் மண்டபம் நிறைந்து சுமார் 500ற்க்கும் மேற்பட்ட மக்களோடு ஒரு வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது குறிப்பிடத்கது. ஊடகவியலாளர் தயானந்தா மற்றும் முன்னாள் எரிமலை ஆசிரியர் கவிஞர். பாலகணேசன் அகரம் ஆசிரியர் ரவி ஆகியோரது சிறப்புரைகள் காலத்துக்கு தேவையானதாக இருந்தது.
நீண்டகாலத்தின் பின் பலதுறைகளையும் சார்ந்த நண்பர்களை சந்தித்து அளவளாவ முடிந்ததில் பெருமகிழ்வு.

சட்டி சோறு

சட்டி சோறு
************

மலேசியாவின் கோலாலம்பூர் நகரின் மையப்பகுதி தமிழர்களின் ஆளுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.

எப்படி பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் வடபரிஸ் தொடருந்து நிலைய வாசலில் வெளியேறியதும் சோறு வாசம் கமகமக்குமோ அப்படித்தான் கோலாலம்பூர் நகரின் பிரதான தொடருந்து நிலைய வாசலை விட்டு வெளியேற தமிழ்ப்பெயர்ப்பலகைகளும் சோறு வாசமும் கண் சிமிட்டும்.

மலேசியாவில் எங்கும் கிடைக்காத சட்டி சோறு எனப்படும் சிறப்பு உணவு இந்த ஏரியாவில்தான் கிடைக்கும். அதுவும் ஒரே ஒரு கடையில்.

சுபிரமணிய பிரபா சட்டி சோறு சாப்பிடுவம் என்றபோது அந்த சட்டி சோறு என்ற சொல்லே ஒரு ஈர்ப்பையும் சாப்பிட வேணும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது.

கடையை தேடிப்பிடித்து போனபோது சோத்துப்பிரியர்களால் கடை நிரம்பிக் கிடந்தது. ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்று கடை உரிமையாளர் சொன்னபோது சிறுகுடலை பெருங்குடல் தின்று தீர்த்துவிடுமளவு பசியின் வேகம் அதிகரித்துப்போயிருந்தது.

நண்டு, கோழி, றால், ஆடு, மீன் என சட்டிச்சோறு பல வித சுவையோடு உடனுக்குடன் சமைக்கப்பட்டு அதே மண் சட்டியோடு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.

கறிகளை உடனுக்குடன் சமைத்து அதற்குள் அரிசியையும் சேர்த்து அவியவிட சுவையான சட்டி சோறு யாழ்ப்பாண வாசத்தோடும் சுவையோடும் தயாராகியிருக்கும். அப்பிடி ஒரு சுவை.

குடிப்பதற்கு ஆவரம்பூ மற்றும் நற்சீரகம் அவித்த தண்ணீரும் தரப்பட்டது.

நாக்கை விட்டகலாத சுவை இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் சுவைக்க வேணும்.

உணவகத்தை அறிமுகப்டுத்தி சட்டி சோறு போட்ட சுபிக்கு நன்றி.



உலாத்தலும் உறவுகளும்

உலாத்தலும் உறவுகளும்
****************************


சிங்கப்பூர் போகத் திட்டமிட்டதும் அப்படியே மலேசியாவுக்கும் போய்வர வேண்டுமென திட்டமிட்டிருந்தோம்.
சிங்கப்பூரில் தங்குமிட ஒழுங்குகளை இணையமூடாக செய்துவிட்டு மலேசிய சுற்றுலா மற்றும் தங்குமிடம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் மலேசிய சுற்றுலா ஆபத்தானது என்ற அறிக்கை அடிக்கடி கண்சிமிட்டி பயம்காட்டியது.
மலேசியா என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் பாடகர் ராஜ ராஜ சோழன் தான். அடிக்கடி சுவிஸ் வந்து போகும் இவர் நெருங்கிய நண்பராக அன்போடு பழகும் ஒருவர், மலேசியா வாங்கோ நானே எல்லா இடமும் கூட்டிக்கொண்டு போவேன் என அடிக்கடி அழைப்பை விடுத்துப்போகும் ஒருவர். கடந்த ஆண்டு ஏற்பட்ட மாரடைப்பு அவரை காவுகொண்டிருந்தது. இந் நிலையில் அறிந்தவர் யாருமில்லாமல் மலேசியாவில் எப்படி தங்குமிடம் பற்றிய தகவல்களை அறிவதென குழம்பிப்போயிருந்தேன்.
அந்தவேளையில்தான் பேஸ்புக்கூடாக அறிமுகமான தோழி யோகி நினைவுக்கு வந்தார். ஏற்கனவே தனது மலேசிய பயண அனுபவம் பற்றி என்னோடு உரையாடிய நிவேதாக்காவும் தன் பயணவேளையில் யோகி பல வழிகளிலும் உதவியதாக குறிப்பிட்டிருந்தா. சுற்றுலா மற்றும் இலக்கியதுறைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர் யோகி.
யோகியோடு தொடர்புகொண்டு நம்பிக்கையான தங்குமிடம் பற்றிய தகவல் வேண்டுமென கேட்டிருந்தேன். உடனடியாகவே யோகியிடமிருந்து பதிலும் கிடைத்தது. தான் ஒரு சுற்றுலாப் பயணிகள் தங்குமிடத்தில்தான் பணிபுரிவதாகவும் படங்களை அனுப்புகிறேன் பிடித்திருந்தால் அங்கேயே பதிவுசெய்யலாமென்றும் கூறியிருந்தார். இரட்டிப்பு மகிழ்வாயிருந்தது. விடுதி எனக்கும் பிடித்துப் போனது. நகரின் மையத்தில் அந்த அழகானவிடுதி அமைந்ததால் அங்கிருந்து எமது சுற்றுலாவை திட்டமிடவும் இலகுவாயிருந்தது.
விடுதிக்கான கட்டணம் எதையும் இப்போ கட்டத்தேவையில்லை வரும்போதே நேரில் செலுத்திக்கொள்ளுங்கோ என்று நம்பிக்கையோடு கூறி தன்பெயரிலேயே எமக்கான அறைகளையும் பதிவுசெய்து வைத்திருந்தார்.
மலேசியாவில் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கின்றது என்ற நம்பிகையோடு பயணப்பட்டோம் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
அங்கு போன எமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விடுதிக்கான கட்டணம் கூட யோகியின் செல்வாக்கால் வழமையான கட்டணத்தையும் விட குறைவாகவே எம்மிடம் அறவிடப்பட்டது.
போக்குவரத்து பற்றிய தகவல்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய விபரம் மருத்துவதேவை என அனைத்து தேவைகளுக்கும் மின்னல்போல தகவல்களைத் திரட்டித்தந்து யோகியின் பேருதவியால் எங்களின் சுற்றுலாசார் திட்டமிடல்களும் சுலபப்பட்டன.
மலேசியாவிலும் ஒரு தங்கை இருக்கிறாள் என்ற நிறைந்த மனதோடு திரும்பினோம்.
பேஸ்புக் இப்படியான ஆத்மார்த்தமான உறவுகளை தந்தே நகர்கின்றது.

January 30, 2018

குழந்தைகளின் கல்வி

குழந்தைகள் 1
****************

இப்போ எங்கள் தாயகத்தின் கல்விமுறை ஒரு காட்சிப்படுத்தலாக  குருவி தலையில் பனங்காயை சுமக்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு குழந்தையாக முதல்நாள் பள்ளி போகும் நாளிலிருந்தே பிள்ளை தன் இயல்பைத் தொலைத்ததாக மாற்றப்படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான சூழலல்ல; தாயகம் செல்லும் காலங்களில் அங்குள்ள பெற்றோர்கள் பிள்ளைகளின் படபடப்பை திட்டமிட்ட மிகைப்படுத்தப்பட்ட கல்விமுறையை கண்டு கொதிப்புற்றிருக்கிறேன். நாம் எட்டுப்பாடக் கல்வியைக்கொண்டு சத்தியம் பண்ணிய காலத்திலேயே இயல்பைத் தொலைக்காமால்தான் இருந்தோம். ஆனால் இன்று பிள்ளையின் பள்ளி ஆரம்பநாளே கால்கோள் விழா எனும் பெரும் ஆர்ப்பாட்டத்தோடுதான் ஆரம்பிக்கின்றது. அதன் பின் கண்பாடம் கட்டிய குதிரைகள்போல் தாய்மொழியை புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் இயற்கையை மறந்த இயற்கையிலிருந்து புறந்தள்ளிய கல்விச் சூழலுக்குள் பத்து வயதாவதற்குள் புலமைப்பரிசில் பரீட்சை என்ற ஒரு தராதரத் தெரிவுக்கான ஓட்டத்தினுள் தம்மை தொலைக்கின்றார்கள். குழந்தைகளாய் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த வயதுக்கான அத்தனையையும் இழந்து நிற்கின்றார்கள். இந் நடைமுறை ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புமா என்பது கேள்விக்குறியே?

இந்தவேளையில் சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்விமுறை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஐந்து வயதில்தான் Kinder Garten மழலைப் பள்ளிக்கு போகவேண்டும். அந்த வயது கணிப்பிடும் இறுதிநாளான யூன் 30ந் திகதியாகும். யூலை 15 க்குள் பிறந்ததோர் விருப்பத்தெரிவில் ஓராண்டுக்கு முன்னரே பள்ளியில் இணைய முடியும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  ஓராண்டுக்கு முன்னரே மழலை பள்ளியில் சேர்த்துவிடலாம்.

 ஆனால் மூன்று வயதிலிருந்து Spiel Gruppe என்று சொல்லப்படும் இருநாட்கள் விளையாட்டு குழுவுக்கு செல்ல வேண்டும். இது முன்னர் கட்டாயமில்லை. வெளிநாட்டு மாணவர்கள் மொழிப் பரீட்சியத்தை முன்னரே பெற்றுக்கொள்வதற்காய்
இப்போ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சந்திப்பிற்கு செல்லும் வெளிநாட்டு பெற்றோருக்கு ஒரு விடயம் கண்டிப்பாக சொல்லப்படும் நீங்கள் உங்கள் வீட்டில் பிள்ளையுடன் தாய்மொழியில் பேசுங்கள். பிள்ளைக்கு பிராந்திய மொழியை கற்பிக்காதீர்கள். அவர்கள் வாழும் சூழலிலிருந்து அந்த மொழியை கற்றுக்கொள்வார்கள்.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஆறு வயதுக்கு பின்னர்தான் பிள்ளைகளுக்கு எழுதப்பழக்க வேண்டும். அதுவரை வாழும் சூழலுக்கேற்ப அவர்களின் எண்ண ஓட்டத்துக்கு அமைவாக கல்விமுறை அமைந்திருக்கும்.

குறிப்பாக விளையாட்டு குழுவில் பலதரப்பட்ட உள்ளக வெளிப்புற விளையாட்டுகளும் வர்ணங்களும் தாள்களும் இருக்கும். ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி இரண்டு முதல் மூன்று மணி வரை நடைபெறும் இக் குழுவில் இவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஒன்பது மணிக்கு இவர்கள் உள் நுழைந்ததும் வர்ணம் தீட்ட விரும்புவோர் வர்ணம் தீட்டலாம் கடை விளையாட்டு விளையாட விரும்புவோர் தாமகவே இணைந்து கடை விளையாட்டையோ சமையல் விளையாட்டையோ அல்லது அங்குள்ள அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடலாம். அல்லது குட்டித் தூக்கம்போட விரும்புவோர் அதையும் செய்து கொள்ளலாம். காலநிலை எப்படி இருந்தாலும் அதற்கான உடைகளோடு அவர்கள் கொஞ்சநேரம் வெளிப்புறத்திலும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த காலம் நிறைவடைந்து மழலைப் பாடசாலை ஆரம்பமாகும். இது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். சாதாரணமாக 5. வயதிலிருந்து 7 வயது வரை, இது காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். கொஞ்சம் களைப்பாவோ எழும்ப பஞ்சியாவோ இருந்தால் 8.30 வரையும் செல்லலாம். இங்கும் விளையாட்டு குழுவில் இருக்கும் நடைமுறைதான். ஆனால் இங்கு இவை திட்டமிட்டு பகுக்கப்படும். வர்ணம் தீட்டவோ படம் கீறவோ ஒரு குறிப்பிட்ட நேரமும் விளையாட்டுக்கு என ஒரு நேரமும் பாடல் பாடவென ஒரு நேரமும் பகுக்கப்படும். இது ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையில் நடைபெறும். காலநிலைக்கேற்ப இயற்கையை பற்றிய அறிதலை நேரில் அழைத்துச் சென்று கற்பிதல் இல்லாது அவர்கள் கண்வழி உள்வாங்க வைத்து சிந்தனையை தூண்டுவார்கள். இந்த மழலைப் பாடசாலை காலத்திலிருந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியான கோப்பொன்று ஆசிரியரால் தயாரிக்கப்படும் அது தொடர்ச்சியாக மேல் வகுப்பு செல்லும் வரை அம் மாணவர் பற்றிய தரவுகளோடு ஆசிரியர்களூடாக கைமாறும். இவர்களின் நடவடிக்கை ஈடுபாடுகளைகளை வைத்து அவர்கள் பற்றிய கணிப்பீட்டு வரைபை மழலைப் பாடசாலை கணிப்பிட்டு எழுதும். அதன் அடிப்படையில் ஏனைய வகுப்புக்களுக்கு செல்லும்போது  அம் மாணவருக்கான கற்பித்தல் நடைபெறும்.

ஏழுவயதில் முதலாம் வகுப்புக்கு  முதலாம் வகுப்புக்கு செல்ல முன்னர் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் ஒன்று நடைபெறும். இது மிக முக்கியமான ஒன்றுகூடலாகும்...

தொடரும்....

#இணுவையூர்_மயூரன்

#குழந்தைகளும்_கல்வியும்

நீண்டகாலமாக எழுத நினைத்த இத் தொடரை எழுத ஊக்கியாய் இருந்த சங்கீர்த்தனனுக்கு நன்றி.

September 11, 2017

போர்க்கால நினைவுகள்

ஆண்டு ஐந்து தமிழ்ப்புத்தகத்தில்

"அம்மா நான் விளையாடப் போறேன்
அன்புடன் பட்சணம் தந்தனுப்பென்னை
சும்மா நான் உக்கார மாட்டேன்
நல்ல தோழர் அழைக்கின்றார்
நாழிகை ஆச்சு

பூப்பறித்தாடலாம் பூரதம் கட்டலாம்.....

இப்படித் தொடங்கும் பாடலொன்று பாடமாக இருந்தது. இதன் முழுமைவடிவத்தை கூகிள் ஆண்டவரிடம் நேர்த்தி வைச்சு தேடினேன் கிடைக்கவில்லை நினைவில் இருந்ததை எழுதியுள்ளேன் மிகு நினைவுள்ளவர்கள் தொடர்ந்து எழுதவும்.

அந்தகால கட்டம் போர் எம்மை தின்றுகொண்டிருந்த காலம். அதனால் விளையாட்டுகள் எம் அன்றாடச் செயற்பாடுகள் சிந்தனை அத்தனையிலும் போரும் அதன் தாக்கமும் பரவிக்கிடந்தது.

கள்ளன் பொலிஸ் விளையாட்டு ஆமி புலி என்றானது. கிறிக்கட் பற் வெட்ட பயன்படுத்திய தென்னம்மட்டைகளிள் AK 47 உருவானது. பப்பாக்குழனின் உதவியோடு மிசின் கண் உருவானது. எங்கள் ஊரின் புகையிலை குடில்கள் பாதுகாப்பு அரண்களாகவும் புகையிலை கிடங்குகள் பதுங்குகுழிகளாகவும் ஆகின. கோட்டையை பிடித்தல். பலாலியை பிடித்தல் என விளையாட்டின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும். கொப்பேகடுவாவும் கிட்டுவும் விளையாட்டு வீரர்களின் பெயராகும். விளையாட்டுக்கூட போர்க்கால சிந்தனையை கொண்டிருந்த காலம்.

பாடல்கள் கூட மாற்றியமைக்கப்பட்டு போர்க்கால எண்ணங்களோடு பாடப்பட்ட காலம். அந்தக்காலப் பகுதிகளில் மேற் கூறிய பாடலும் எம்மால் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படது.

"அம்மா நான் போராடப் போறன்
கையில் ஆம்சொடு கிறினெட்டும் தந்தனுப்பென்னை
சும்மா நான் உக்காரமாட்டேன்
நாலு ஆமியை சுடுகின்ற நேரம் இதுவெல்லோ...."

#போர்க்கால_நினைவுகள்

September 4, 2017

சாதீ

அழிக்கப்பட வேண்டிய விடயம்
ஆவணப்படுத்தப்படுகின்றது
ஒழிக்கப்பட வேண்டிய விடயம்
ஊதி பெருசாக்கப்படுகின்றது
தேவை இதுதான் என்று திடமாய்
தீர்மானமாய் திணிக்கப்படுகின்றது
கண்களின் முன்னே திரையிடப்பட்டு
காட்சிகள் நகர்த்தப்படுகிறன
திரைக்கு பின்னே என்ன
தெரிந்தும் தெரிய விரும்பாதவராய்
முதுகுப் புண்ணை சொறிந்து
சொறிந்து சிற்றின்பம் காண்கிறோம்
அரிப்பு அகலப்படும்
அது அடுத்த சந்ததியையும்
காவுகொள்ளும்
அறியாத மூடர்களா நாம்
எவனோ ஆட்டுவிக்கின்றான்
ஆடிக்கொண்டிருக்கின்றோம்
முடிவு எதுவென்று
முழுதாய் தெரிந்த பின்னும்
அற்ப சுகங்களுக்காய்
புசத்திக் கொள்கின்றோம்
தெளிவு பெறாத வரை
தீர்வு இல்லை.

May 10, 2017

சிந்தையிலை வந்து போகுது


பண்ணை கடல் வெளி
வண்ண விளக்குகளால்
மின்னி மினுங்குதாம்
அள்ளி வந்து அதை
திரைகளில் நிரப்பி
துள்ளி மகிழுது
எம் தமிழ் தும்பிகள்
பட்டி தொட்டி எங்கும்
படோபாகார அலங்காரங்களாம்
பகிடியும் பம்பலுமாய்
பொழுதுகள் கழிவதாய்
புழுகித் தள்ளுகிறான்
பள்ளித் தோழன் ஒருவன்
அவித்த கிழங்கும்
அரைச்ச சம்பலும்
ஆமி தந்தவன்
அமிர்தமாய் இனித்ததாம்
சொல்லிப் போகிறான்
பிள்ளை பருவத்தோழன்
ஆமத்துறுக்கள் கைகளில்
கட்டிடும் நூல் பெரும்
பாதுகாப்பு கவசமாம்
வைரவர் கோயில் பூசாரியின் மகன்
வியந்து சொல்கிறான்
வெள்ளிக் கிழமை தோறும்
சிங்களப் பெட்டையள்
சுற்றுலா வந்து
சுழட்டியடித்து போகிறாளவையாம்
ஆரியகுள சந்தி
அல்லோல கல்லோல பட்டு போகுதாம்
பாவி எனக்கு மட்டும்
கொள்ளி வைக்க ஆள் இன்றி
கொன்று குவித்து
சீன அமிலம் தின்று தீர்த்தும்
சிவந்து கிடக்கும் மண் ஏனோ
சிந்தையிலை வந்து போகுது...

#ஈழத்துப்பித்தன்
10.05.2017

March 7, 2017

சுவிசில் பூமிஅதிர்வு


நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாதபோதிலும் பல பகுதிகளிலும் சிறு அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள சுவிசின் பிரபல சஞ்சிகையான பிளிக் அடுத்த பெரும் அதிர்வு எப்போ என கேள்வியை எழுப்பியுள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் நில அதிர்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுவிற்சர்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் 1356ம் ஆண்டு ஒக்டோபர் 18 ந் திகதி ஏற்பட்ட அதிர்ச்சியே அதிக அழிவுகளை ஏற்படுத்திய அழிவாகும்.

இவ் அதிர்வு பாசல் மாநிலத்தின் றைனாக் பகுதியில் 7 றிக்டர் அளவில் ஏற்பட்டு பல பகுதிகளை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு 2000 பேர் வரையில் இறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. றைனாக் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள சிலுவை இன்னமும் உள்ளது.

பாசல் நகரின் மையத்திலுள்ள முன்ஸ்ரர் தேவாலயமும் பேரழிவுக்கு உள்ளானதாகவும் எட்டு நாட்கள் வரையில் நகரின் பல பகுதிகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்ததாகவும் பதிவுகள் உள்ளன.

மீண்டும் ஒரு பேரழிவை சுவிற்சர்லாந்து எதிர்கொள்ளலாம் என நிலவியல் நிபுணர்களின் ஆய்வுகள் சொல்கின்றன.

படம் 1

சுவிற்சர்லாந்தில் பூமிஅதிர்ச்சி நடைபெற வாய்ப்புள்ள பிராந்தியங்கள்.

படம் 2

06.03.2017 இரவு பூமிஅதிர்ச்சி ஏற்பட்ட பகுதி.

படம் 3

1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி பற்றி சொல்லும் ஓவியம்.

படம் 4

1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோருக்காக றைனாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலுவை.

படம் 1 இல் வட பகுதியில் நான் வாழும் பாசல் மாநிலம் எச்சரிக்கைக்கு உரியபகுதியாகும்.

#ஈழத்துப்பித்தன்

February 26, 2017

எங்கள் தேசக்குயில்



இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கு பிறகு எங்கள் ஊர்கள் மீண்டும் புதுப்பொலிவுபெற்று கொண்டாட்டமும் கும்மாளமுமாய் ஆனது.  பின்னேரம் அஞ்சு மணிக்கு முன்னமே முடிங்கிக் கிடந்த எங்கள் ஊர்களின் கோவில்களில் இரவுத் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கின.

சிவகாமி அம்மனின் சின்னத்தம்பிப்புலவர் அரங்கும் காரைக்கால் சிவனின் முன் வீதியும் இரவுத் திருவிழாக்களில் களை கட்டும். அருணா கோஷ்டி வருகுதெண்டா எல்லார் மனங்களும் புழுகத்தில் துள்ளும்  எஸ்பிபி மனோ இவையையெல்லாம் நாங்கள் அறியமுன்னமே நாங்கள் அறிஞ்ச பாடகன் சாந்தன்.  அந்தப்பாடல் எனக்கு சரியா நினைவில்லை ஆனா அந்தப்பாட்டை சாந்தனும் சுகுமாரும் சேர்ந்து பாடியிருந்தவை எண்டது மட்டும் நல்ல நினைவு. சிவகாமி அம்மன் கோயில் சின்னத்தம்பி புலவர் அரங்கின் வலப்பக்கமா இருக்கும் நிழல்மரவள்ளிப் பக்கமா சாந்தன் கையை காட்டிபாடி முடிக்க சுகுமார் பாடுவார் இப்பிடித்தான் அந்தக்காட்சி அந்த வயசிலை என்ரை மனசிலை பதிஞ்சது. தன் கணீர் காந்தக் குரலால் எங்கள் இதயங்களிலெல்லாம் குடியேறுகின்றான்.

இந்தமண் பாடலை சாந்தன் பாடமுன் புலிகளால் தமிழகக்கலைஞர்கள் மூலம் வெளியிடப்பட்ட பாடல்தொகுப்புகளில் வெளிவந்த பாடல்களில் தீயினில் எரியாத தீபங்களே போன்ற பாடல்களை அரங்கிலே  பாட அம்மனின் வீதிகள் அழுதுறையும்.

அதன் பின்னைய காலங்களில் இந்த மண் எங்களின் சொந்தமண், எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம் போன்ற பாடல்கள் எங்கள் தேசியகீதமாய் வாய்களில் முணுமுணுக்கத் தொடங்கின.

1991 தாயகத்தை பிரிந்து சுவிஸ் வந்த பின்னும் அந்தப் பாடல்கள் என் தாயகத்துக்கும் எனக்குமான பாலமாய் மனவெளியெல்லாம் வியாபித்தேயிருந்தது. இங்கு வந்தபோது அந்தப்பாடல்களை கேட்கவேண்ட்மென மனம் ஏங்கினாலும் அது எனக்கு கிடைக்கவில்லை. அப்போ எங்கள் மாநிலத்தின் இயக்கப் பொறுப்பாளரா இருந்த தினேஷ் அண்ணாட்டை என்ரை விருப்பத்தை சொல்ல அவர் அந்த இசைப் பேழைகளை கொண்டு வந்துதந்தார். உண்மையில் என்ரை வாழ்கையில் அதியுச்ச மகிழ்ச்சியில் திழைத்த நாட்களில் அந்த ஒன்று. தொடரும் நாட்களின் இரவு பகல் பள்ளியின் இடைவேளை நேரங்களில் எல்லாம் பாடகர் சாந்தன் என்னோட உறவாடத்தொடங்கினார். பல்லாண்டு காலம் திரையிசைப்பாடல்களை காட்டிலும் தாயகப்பாடலுக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாக இருந்தது.

ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோது வந்த இசைப்பேழையில் இடம்பெற்றபாடல்களில் சாந்தனின் குரலில் வந்த பாடல்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்து எங்கள் திருமண ஒளிப்பதிவுப் பிரதிகளிலும் இடம்பிடித்தன.

2003 சமாதானகாலத்தில் சுவிற்சர்லாந்துக்கு தமிழீழ இசைக்குழு வந்தபோது மிக மகிழ்வாயிருந்தது. முதன்நாள் நிகழ்வுகள் சுவிசின் பிறிபேர்க் நகரில் நடைபெற்றது எனக்கு நுழைவாயில் பகுதியில் பணி தரப்பட்டதால் இசை நிகழ்வை அனுபவித்து ரசிக்க முடியாது போனது. பின் நடந்த இரு நிகழ்வில் நான் எவ்வித பணியையும் ஏற்காது முழுமையான நிகழ்வையும் பார்த்து லயிக்க முடிந்தது. நேர்காணலும் செய்ய முடிந்தது.

அதன் பின்னையகாலம் பாலா அண்ணா மற்றும் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கான இரங்கல் பாடல்கள் எங்கள் விழிகளையும் மனங்களையும் கசிய வைத்தது.

2009 இறுதி யுத்தம். 2010 பிற்பகுதியில் ஒருநாள் சாந்தன் குடும்பத்துடன் விடுதலையானார் என்ற செய்தி வந்தது. இரு பிள்ளைகளை மாவீரராய் கொடுத்து பலநூறு பாடல்களை பாடி விடுதலைக்கு நீர்பாய்ச்சிய ஒரு கலைஞன் பலராலும் துரோகியாய் பார்க்கப்பட்டான். அதன் பின் வெற்றிலைக்காய் பாடியபோது இன்னும் விமர்சனத்துக்கு உள்ளானான். அவனின் அன்றைய சூழல் அவனிடத்தில் யார் இருந்தாலும் அதுதான் நிலை. மீண்டும் ஒரு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பாடலூடாய் சாந்தனின் கணீர் குரல் மனதை நிறைத்தது. தொடர்ந்து பல ஆலயங்களின் இசைத்தொகுப்புக்களிலும் சாந்தனின் குரலில் பாடல்கள் வரத்தொடங்கின எங்கள் ஊர் சிவகாமி மீதிலும் சில பாடல்களை பாடினார். விரைவில் எனது வரியில் வரவுள்ள இசைப்பேழையில் ஒரு பாடலை சாந்தன் அண்ணா மூலம் பாடவைக்க விரும்பியபோது இசையமைப்பாளர் உமா சதீஸ் சாந்தன் அவர்களோடு கதைத்தபோது அவரும் உடன்பட்டிருந்தார் முன்பைப்போல வீரியமாக பாடமுடியாது மெல்லிசையாக வடிவமைக்குமாறும் கேட்டிருந்தார். அதற்கான ஏற்பாட்டை செய்தபோதுதான் கடந்தமாதமளவில் அறிந்துகொண்டோம் இனி அவரால் தற்போதைக்கு பாடமுடியாதென அது எனது துர்திஸ்டமே. ஆனால் இவ்வளவு விரைவாக இனி எப்போதும் பாடமுடியாத நிலையை அடைவார் என எவரும் எதிர்பார்காகவில்லை.

அவரது பேரிழப்பின் வலி சுமந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்னாரின் பிரிவுத்துயரிலிருந்து மீண்டெழும் வரத்தை காலமும் இயற்கையும் தந்தருளட்டும்.

February 8, 2017

பாதைகள் மாறாது

பாதைகள் வளைந்தாலும்
இலக்கில் மாற்றமில்லை
தேவைகள் ஆயிரம்
திடம் தனை குலைத்தாலும்
ஆவி அடங்கும் வரை
அவள் நினைப்பே

தீயிட்டு எரித்து
சிறு சாம்பல் துகளாய்
சிதறிப் பறக்கையிலும்
சீமாட்டி உன் நினைப்பே
சிந்தை எங்கும்
சீராக நிறைந்திருக்கும்

பக்கம் வந்து
பாசத்தோடு ஆசை தீர
அள்ளி முத்தமிட்டு
அழுது தீர்த்துவிட
பத்திரம் இல்லாததால்
பரி தவித்து நிற்கின்றேன் நான்.

#ஈழத்துப்பித்தன்
08.02.2017

படம்: யாழ் - கொழும்பு பயணத்தடம், டிசம்பர் 2015

கானா பிரபா அண்ணா யாழ் பயணத்தடத்தின் படம் போட்டு கடுப்பேத்தியதன் விளைவு. Kana Praba :)

February 7, 2017

வரலாற்றில் இன்றையநாள்
**********************



நாகரீக உச்சம் தொட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலிலும் உலகில் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகள் பட்டியலிலும் நடுநிலைகொள்கைபேண் நாடுகள் பட்டியலிலும் முதன்மைத் தெரிவாய் உள்ள நாடு சுவிற்சர்லாந்து.

ஐரோப்பிய வரலாற்றில் பெண்களுக்கான வாக்குரிமையை இறுதியாக வழங்கிய நாடுகள் வரிசையில் போர்த்துகல் மற்றும் சுவிற்சர்லாந்து பதிவாகியுள்ளன.

 பெண்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் விடாமுயற்சியும் இன்று 46 ஆண்டுகளுக்கு முன் இதேநாளாளில் (07.02.1971) பெண்களுக்கான வாக்குரிமை பெற்றுக்கொடுத்த நாள்.

சுவிற்சர்லாந்து பெண்களுக்கான வாக்குரிமையை அளிப்பதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் முதலாவது பெண்பிரதமரை ஆட்சிக்கட்டில் இருத்தி அழகுபார்த்த தேசம் இலங்கைத்தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

November 26, 2016

தமிழ் இன அரணே போற்றி!!!

காப்பு


சீர் மேவும் ஈழ திருநாட்டு மன்னவன்

பார் வாழும் தமிழர் இல்லத்து பகலவன்

கார் இருளகற்றும் கரிகாலன் மீதினிலே

ஈழத்துப்பித்தன் இவன் போற்றி பாடி புகழ்பரப்ப 

விதைத்த புலி மறவர் மீதினிலே காப்பதாமே....


தமிழ் இன அரணே போற்றி!

   தாய்த் தமிழ் தளிரே போற்றி!

வாய்த்த நம் வளமே போற்றி!

   வரலாற்றின் பேர் ஒளியே போற்றி!

வல்வை இன் செல்வா போற்றி!

   வளம் மிகு வளவா போற்றி!

ஈடிலா அரும் பொருளே போற்றி!

   ஈகைக்கு மறுசொல்லே போற்றிபோற்றி!


தமிழ்க் குடி காத்தோய் போற்றி!

  தன் குடி ஈந்தோய் போற்றி!

கடல்தனை ஆண்டோய் போற்றி!

  காற்றிலும் பறந்தோய் போற்றி!

மாதர் தம் மடமையை உடைத்தோய் போற்றி!

    மாசில்லா மன்னவா போற்றி!

தேற்றுவார் இல்லா இனத்தின் தேவனே போற்றி!

  தேசியத்தலைவனெனும் பெரோளியே போற்றிபோற்றி!


மாறில்லா கொள்கை கொண்டோய் போற்றி!

  மனிதத்தின் மான்புறு வடிவே போற்றி!

செந்தளிர்கள் காத்தோய் போற்றி!

   செஞ்சோலை தனை அமைத்தோய் போற்றி!

செங்கொடி கண்ட செல்வனே போற்றி!

   அன்பு இல்லம் கண்டோய் போற்றி!

அனாதை என்ற சொல்லை அழித்தோய் போற்றி!

    எத்திக்கும் புகழ் கொண்ட எந்தையே போற்றிபோற்றி!

   

முப்படை கண்ட தமிழா போற்றி!

   மூவுலகிலும் காணாத புண்ணியா போற்றி!

இந்தியப் படைகளை எதிர்த்தோய் போற்றி!

   இரும்பின் திடம் கொண்டோய் போற்றி!

கரும்பினை ஒத்த குணத்தோய்போற்றி!

   கார் இருள் அகற்றிய கதிரே போற்றி!

   நெருங்கும் பகையை நீர்த்தாய் போற்றி!

நேரிய பார்வை கொண்ட மன்னவா போற்றி!போற்றி!


நெருப்பினை ஒத்த விழியோய் போற்றி!

  நிலவினை ஒத்த முகத்தோய் போற்றி!

 நீறு பூத்த நெருப்போய் போற்றி!

காவல் துறை கண்டோய் போற்றி!

   ஏவல் துறைகளை அழித்தோய் போற்றி!

நிழல் அரசு கண்டோய் போற்றி!

  நீதியை நிலை நாட்டினாய் போற்றி!

நின்மதி தந்த நித்திலா போற்றிபோற்றி!


கல்விக் கழகம் கண்டோய் போற்றி!

  கண்ணெனத் தமிழை காத்தோய் போற்றி!

கலைகளை வளர்த்த காவியா போற்றி!

 விலைபேச முடியா வீரியா போற்றி!

அலைதனை ஆண்ட அண்ணனே போற்றி!

 நிலை தவறாத நீதியனே போற்றி!

குலையாத அரசின் கோவே போற்றி!

தலையான எங்கள் தலைவா போற்றிபோற்றி!

 

வேலுப்பிள்ளையின் மைந்தனே போற்றி

  வீரச்சேனையின் அதிபதியே போற்றி

வித்தகனே தத்துவனே வீரனே போற்றி

 விடுதலைப் புலி அமைத்த வீரியமே போற்றி

பார்வதி அம்மா தம் பாலகா போற்றி

 பாரில் தமிழர் தம் பகலவா போற்றி

பாசம் கொண்ட தலைவா போற்றி போற்றி


உலகம் வியக்கும் உன்னதமே போற்றி

 ஊராண்ட தமிழின மாண்பே போற்றி

தீரனேதேசக் காவலனே போற்றி

 தீச்சுவாலையை முறியடித்தோய் போற்றி

தீந்தமிழை அரசாள வைத்தோய் போற்றி

 துயிலும் இல்லங்கள் அமைத்தோய் போற்றி

தொலை நோக்கம் கொண்டோய் போற்றி

  தூய தமிழ் தன் காவலா போற்றி போற்றி 


சூரியத் தேவனே சுந்தரா போற்றி!

  சூழ்ந்த தொல்லைகள் சுட்டெரித்தோய் போற்றி!

கானகம் ஆண்ட காவலனே போற்றி!

  இணுவை மண்ணில் பிறந்தோய் போற்றி!

இன்னல்கள் யாவும் களைந்தோய் போற்றி!

   புங்கை மண்ணில் மணந்தோய் போற்றி!

புத்தொளி எமக்கு பாய்ச்சினோய் போற்றி!

   மலரும் ஈழத்தின் மான்பே போற்றிபோற்றி!


 மீன்மகள் தேசத்தின் சூரியா போற்றி!

   தேன்மலர் காட்டின் தெய்வமே போற்றி!

முல்லை மண்ணை மீட்டோய் போற்றி!

  மூத்த குடிக்காய் இல்லம் அமைத்தோய் போற்றி!

ஓயாமல் சுழன்ற அலையே போற்றி!

   நெருப்பாற்றில் நீந்திக் கடந்தோய் போற்றி

ஒருதாய் மக்களாய் எமை இணைத்தோய் போற்றிபோற்றி!

  

காத்திகை மைந்தனே கதிரோனே போற்றி!

  காலம் தந்த காவியனே கரிகாலனே போற்றி!

நீல வான எல்லை தனை அளந்தோய் போற்றி!

  நித்திலம் முழுதும் புகழ் பெற்றோய் போற்றி!

எம் தமிழ் குலத்தின் கொழுந்தே போற்றி.!

  ஏற்றம் கண்ட மாபெரும் மன்னவா போற்றி!

காற்றென பகை சாடி காத்தோய் போற்றி!

 ஊற்றென எழும் எங்கள் உணர்வே போற்றி போற்றி!


கரிகால வளவனே காவியனே போற்றி!

   வழிகாட்டி வலுச் சேர்க்கும் வல்லவா போற்றி!

புறநானூற்றுப் போர்ப் புலியே போற்றி!

   அகம் யாவும் நிறைந்த ஐயனே போற்றி!

அகிலத் தமிழரை ஆண்டவா போற்றி!

   பெருமையில்லாப் பேரரசே போற்றி!

பிரபாகரன் என்னும் பெருநிதியே போற்றி!

   ஈழத்தின் தலைவா போற்றிபோற்றி!



#ஈழத்துப்பித்தன்

26.11.2015 - 2016


#HBDtamiltiger

#HBD_tamiltiger

#பிரபாகரன்

தமிழ் இன அரணே போற்றி!!!

தமிழ் இன அரணே போற்றி!
   தாய்த் தமிழ் தளிரே போற்றி!
வாய்த்த நம் வளமே போற்றி!
   வரலாற்றின் பேர் ஒளியே போற்றி!
வல்வை இன் செல்வா போற்றி!
   வளம் மிகு வளவா போற்றி!
ஈடிலா அரும் பொருளே போற்றி!
   ஈகைக்கு மறுசொல்லே போற்றி!

தமிழ்க் குடி காத்தோய் போற்றி!
  தன் குடி ஈந்தோய் போற்றி!
கடல்தனை ஆண்டோய் போற்றி!
  காற்றிலும் பறந்தோய் போற்றி!
மாதர் தம் மடமையை உடைத்தோய் போற்றி!
    மாசில்லா மன்னவா போற்றி!
தேற்றுவார் இல்லா இனத்தின் தெய்வமே போற்றி!
  தேசியத்தலைவனெனும் பெரோளியே போற்றி!

மாறில்லா கொள்கை கொண்டோய் போற்றி!
  மனிதத்தின் மான்புறு வடிவே போற்றி!
செந்தளிர்கள் காத்தோய் போற்றி!
   செஞ்சோலை தனை அமைத்தோய் போற்றி!
செங்கொடி கண்ட செல்வனே போற்றி!
   அன்பு இல்லம் கண்டோய் போற்றி!
அனாதை என்ற சொல்லை அழித்தோய் போற்றி!
எத்திக்கும் புகழ் கொண்ட எந்தையே போற்றி!
   
முப்படை கண்ட தமிழா போற்றி!
   மூவுலகிலும் காணாத புண்ணியா போற்றி!
இந்தியப் படைகளை எதிர்த்தோய் போற்றி!
   இரும்பின் திடம் கொண்டோய் போற்றி!
கரும்பினை ஒத்த குணத்தோய்போற்றி!
   கார் இருள் அகற்றிய கதிரே போற்றி!
   நெருங்கும் பகையை நீர்த்தாய் போற்றி!
நெருப்பினை ஒத்த விழியோய் போற்றி!
  
நிலவினை ஒத்த முகத்தோய் போற்றி!
  நீறு பூத்த நெருப்போய் போற்றி!
காவல் துறை கண்டோய் போற்றி!
   ஏவல் துறைகளை அழித்தோய் போற்றி!
நிழல் அரசு கண்டோய் போற்றி!
  நீதியை நிலை நாட்டினாய் போற்றி!
கல்விக் கழகம் கண்டோய் போற்றி!
  கண்ணெனத் தமிழை காத்தோய் போற்றி!

சூரியத் தேவனே சுந்தரா போற்றி!
  சூழ்ந்த தொல்லைகள் சுட்டெரித்தோய் போற்றி!
கானகம் ஆண்ட காவலனே போற்றி!
  இணுவை மண்ணில் பிறந்தோய் போற்றி!
இன்னல்கள் யாவும் களைந்தோய் போற்றி!
   புங்கை மண்ணில் மணந்தோய் போற்றி!
புத்தொளி எமக்கு பாய்ச்சினோய் போற்றி!
   மலரும் ஈழத்தின் மான்பே போற்றி!

 மீன்மகள் தேச சூரியா போற்றி!
   தேன்மலர் காட்டின் தெய்வமே போற்றி!
முல்லை மண்ணை மீட்டோய் போற்றி!
  மூத்த குடிக்காய் இல்லம் அமைத்தோய் போற்றி!
ஓயாமல் சுழன்ற அலையே போற்றி!
   நெருப்பாற்றில் நீந்திக் கடந்தோய் போற்றி
ஒருதாய் மக்களாய் எமை இணைத்தோய் போற்றி!
   காத்திகை மைந்தனே கதிரோனே போற்றி!

கரிகால வளவனே காவியனே போற்றி!
   வழிகாட்டி வலுச் சேர்க்கும் வல்லவா போற்றி!
புறநானூற்றுப் போர்ப் புலியே போற்றி!
   அகம் யாவும் நிறைந்த ஐயனே போற்றி!
அகிலத் தமிழரை ஆண்டவா போற்றி!
   பெருமையில்லாப் பேரரசே போற்றி!
பிரபாகரன் என்னும் பெருநிதியே போற்றி!
   ஈழத்தின் தலைவா போற்றி! போற்றி!

#ஈழத்துப்பித்தன்
26.11.2015 - 2016

#HBDtamiltiger
#HBD_tamiltiger
#பிரபாகரன்