Pages

September 15, 2025

மதிப்பளிப்பு 2025


 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் (IITA)வின் வெள்ளி விழா நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்.

த.தே. தலைவரின் தொலை நோக்குச் சிந்தனையில் பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் சுவிற்சர்லாந்தி்ல் கடந்த 2000மாம் ஆண்டு ஐரோப்பா வாழ் கலையாசிரியர்களை ஒருங்கிணைத்து பயிற்சிப்பட்டறையும் கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது. அதன் இறுதி இலக்காக “அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம்” தோற்றம் பெற்றது.


2000மாம் ஆண்டு “பூபாளம்” எனும் கலை நிகழ்வினூடாக “அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம்” மக்கள் மத்தியில் அறிமுகமானது.


இந்த அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகமானது நுண் கலை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை நடாத்தி 2012 இல் முதலாவது மதிப்பளிப்பு நிகழ்வை சூரிச் மாநிலத்தில் நடாத்தியது.


முதலாவது பட்டமளிப்பில் நடன மற்றும் வாய்ப்பாட்டுத்துறையில் தரம் ஏழு வரை தோற்றிச் சித்தியடைந்தோருக்கான “கலை வித்தகர்” என்ற பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்படார்கள்.


பின்னைய காலங்களில் நுண்கலைகளான மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்தியங்களை பயிலும் மாணவர்கள் தொகை அதிகரிக்க அத் துறைகளுக்கான தேர்வுகளும் நடைபெறத் தொடங்கின.


இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பிலே பரதம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகிய பாடங்களில் தங்கள் கற்கையை நிறைவு செய்த மாணவர்கள் “கலைமாமணி” என்ற பட்டயத்தை உரித்தாக்கியுள்ளார்கள்.


படத்தில் மிருதங்கக் கற்கையை நிறைவு செய்த ஆசிரியர் ருக்‌ஷனின் மாணவர்கள் “கலைமாமணி” விருதப் பட்டயத்தை பெற்ற மகிழ்வில்.


ருக்சனைப் பற்றி ஏற்கனவே பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ருக்‌ஷன் ஶ்ரீரங்கநாதனும் சுவிற்சர்லாந்தின் இரண்டாந்தலைமுறைக் கலைஞன். இங்கே கற்று நாடளாவியரீதியில் பல மாணவர்களை உருவாக்கி இன்று அவர்களையும் ஆசிரியர் தரத்துக்கு உயர்த்தி நிற்கும் ஒரு திறன் மிகு ஆசிரியர்.

 

ஜரோப்பாவில் அனைத்துலக தமிழ்க்கலை  நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் மிருதங்கத்தில் முதன் முதலாக பட்டயச் சான்றிதழ் பெறும் பெண்ணாக செல்வி ஹர்ஷா பாலகுமரன் விளங்குகின்றார்.


பட்டயம் பெற்ற அனைத்து கலைஞர்களைக்களும் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.


இணுவையூர் மயூரன்

15.09.2025

September 11, 2025

“காலம் எவ்வளவு மாறுதலானது”



18 ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில் எனக்கு பொறுப்பாக இருந்தவர் கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர். மிகவும் கடுமையானவள். சூழலுக்கேற்ப சரி வர நிர்வகிக்கத் தெரியாதவள். சூழலுக்கேற்ப நிர்வகிக்கத் தெரியாததால் வேலை அதிகமாகும் நேரங்களில் அதனைச் சமாளித்து வேலையாட்களைக்கொண்டு வேலை வாங்கத் தெரியாமல் சத்தமிட்டு வேலையாட்களை மனச் சோர்வடைய வைத்துவிடுவாள். அவளைப் பொறுத்தவரை வேலையாட்கள் என்றால் ஒரு வகை அடிமைகள். 

அனேகமாக அவளது நடவடிக்கை குறித்து அவளோடு அதிகம் சண்டையிடும் நபராக நான் மட்டுமே இருந்தேன். ஒரு முறை இனிமேல் உன்னோடு வேலை செய்ய முடியாது என்று சொல்லி உடனடியாகவே பணிவிடுப்பு கடிதத்தை எழுதி கையெழுத்து வைத்து கொடுத்துவிட்டேன். அதே நிறுவனத்தின் வேறு கிளையொன்றுக்கு விண்ணப்பித்து வேலைக்கு செல்ல முயன்றபோதுதான் எனது கிளையின் நிர்வாகப் பொறுப்பாளருக்கு நான் வேலையை விட்டுச் சென்றது தெரிய வந்தது. அவர் தொடர்பு கொண்டு நீ ஏன் வேலையை விட்டுப் போனாய் திரும்பவும் வா என்று அழைத்து என்னை அதே வேலைக்கு சேர்த்துக் கொண்டார். சில மாதங்களில் நிதிக் கையாடல், வேலைக்கு வராமலே வந்ததாக பதிவு செய்தமை போன்ற அவள் மீதான குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவள் உடனடியாகவே வெளியேற்றப்பட்டாள். நான் அதற்கு பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் அங்கு வேலை செய்து வேறு வேலை அமைய வெளியேறிக்கொண்டேன். 

இந்த வாரம் நான் தற்போது வேலை செய்யுமிடத்தில் சில திடீர் மாற்றங்களால் அதிகூடிய வேலை. அதனால் வெளியே இருந்து தற்காலிகப் பணியாளர்களை வழங்கும் நிறுவனம் ஒன்றினூடாக சில பணியாளர்கள் இன்று வேலைக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கான இன்றைய வேலைகள் அடங்கிய கோப்பினை வழங்கி விளக்கமளிக்கச் சென்றிருந்தேன். புதிதாய் வந்தவர்களில் ஒருத்தி அவள். 

விளக்கமளித்து வேலையை ஒப்படைத்துவிட்டு புறப்படும்போது வந்து கையைப் பற்றிச் சொன்னாள் “ காலம் எவ்வளவு மாறுதலானது “ என்று. சிரித்து விட்டு வந்தேன். கிடைத்த சிறு ஓய்வில் அந்தச் சம்பவத்தை எழுதிக்கொண்டு பேஸ்புக்கில் நுழைந்தால் “இலங்கையின் முன்னாள் குடியரசுத்தலைவர்” தனது அரச இல்லத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் செய்திகள் படங்களோடு உண்மைதான் “காலம் எவ்வளவு மாறுதலானது”

September 7, 2025

பெண் தெய்வங்கள், அடக்குமுறை, மற்றும் நினைவின் அரசியல்


தமிழகக் கிராமங்களில் நிலைத்திருக்கும் பெண் தெய்வங்களின் வரலாற்று வேர்கள் பெரும்பாலும் அநீதியுடன் தொடங்குகின்றன. அதிகாரவர்க்கத்தினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள், மறைக்கப்பட்ட உடல்களாக பூமிக்குள் புதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவு அடக்கப்படவில்லை. அந்த வன்முறையின் குரல், காலப்போக்கில் கிராம மக்களின் காவல் தெய்வங்களாக மாறியது.

இந்தக் கதைகளின் மையத்தில் இரண்டு பெரிய அடுக்குகள் இருக்கின்றன:

அநீதி அனுபவித்த பெண், மரணத்திலும் நீதியை துரத்திக் கொண்டே இருக்கிறாள்.

அந்த அநீதியை நினைவில் வைத்துக்கொள்ளும் சமூக மனசாட்சி, அவளை தெய்வமாக உயர்த்துகிறது.

இவ்வாறு பெண் தெய்வங்கள் மக்கள் நம்பிக்கையின் மையத்தில் நிற்பதோடு, மறைக்கப்பட்ட வரலாற்றின் அரசியல் குரலாகவும் செயற்படுகின்றன.

இதே அடுக்கில் எங்களுடைய காலத்திலும், ஈழத்தில் செம்மணியில் நடந்த கிருசாந்தியின் கொடூரமான இனப்படுகொலை இடம்பெறுகிறது. அவளது புதைக்கப்பட்ட உடல், இன்று ஒரு இனப்படுகொலையின் முதல் சாட்சியாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 

கிருசாந்தியின் மரணம் தனிப்பட்ட வலியாக இல்லாமல், ஆயிரக்கணக்கான மறைக்கப்பட்ட உயிர்களின் நீதிக் கதவைக் குத்தும் சின்னமாக மாறியுள்ளது.

பெண் தெய்வங்களின் கதைகளிலிருந்து கிருசாந்தியின் நினைவு வரை,  இவை அனைத்தும் ஒரு தொடர்ச்சியைச் சொல்கின்றன.

அநீதி மறைக்கப்படாது, மரணம் கூட உண்மையை அழிக்காது. நினைவு தெய்வமாகி, நீதிக்கான போராட்டமாக உயிர்வாழும்.

#இணுவையூர்_மயூரன்

07.09.2025


படங்கள்: பிரபாகரன் டிலக்சன்