December 29, 2020
இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் பகுதி 2
இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் 1
முதலாவது இந்தியப் பயணத்துக்கு... 1
டிசம்பர் முதலாந் திகதி 2015 அதிகாலை 11.00 மணிக்கு என் கைத்தொலைபேசி அலறியது. என்ன 11.00 மணிஅதிகாலையா் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. ம் அந்த நேரம் நான் இரவு வேலை செய்துகொண்டிருந்தேன். அதிகாலை 5.00 மணிக்குதான் வேலை முடியும். வந்து ஆறு மணிக்கு நித்திரைக்கு போனால்11.00 மணி என்பது அதிகாலைதானே? ம் தொலைபேசியை தூக்கிப் பர்த்தேன் என் வேலையிடத்திலிருந்து, தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதற்கிடையில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள்.
ஏற்கனவே ஒருவர் மருத்துவ விடுப்பில் நின்றதால் 14 நாட்கள் விடுமுறை இல்லாமல் தொடர் வேலை. இன்றுதான் 14 நாட்களுக்கு பின் விடுமுறைநாளாக அமைந்தது. அந்த விடுமுறைக்கும் ஆப்போ என்றமனச்சோர்வவோடே இணைப்பை ஏற்படுத்தினேன். வழமையான குசல விசாரிப்புக்களுக்குப் பின் பொறுப்பாளர்விடயத்துக்குள் நுழைந்தார். உனக்கு 5வாரமேலதிக விடுமுறை உள்ளது. அதனை ஜனவரிக்குள் எடுத்து முடிக்கவேண்டும். அதனை நீ விரும்பினால் இன்றிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம் என்று. நான் முன்னர் வேலை செய்யஇடத்தில் மூன்று பேர் வேலை. எப்போதும் இருவர் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். நான்கு நாள் வேலைஇரண்டுநாள் விடுமுறை என அட்டவணை சுழலும். அதனால் நாம் எமக்கு நீண்ட விடுமுறைகள் தேவைப்படின்எங்கள் பொதுவிடுமுறையில் கை வைக்காமல் ஒவ்வொருவரின் அட்டவணையை அடுத்தவர் பொறுப்பேற்றுசெய்வோம். அதனால் எனக்கு ஆண்டுதோறும் நீண்ட நாள் விடுமுறை அடிக்கடி வரும். அந்த விடுமுறைகளுக்குஉலாத்திக் கொள்வேன். அதனால் பொதுவிடுமுறை அப்படியே சேர்ந்திருந்தது.
சரி அதற்காக இன்றிலிருந்தெல்லாம் விடுமுறை எடுக்கேலாது இரண்டு வாரத்தில் எடுக்கறேன் என முடிவைசொல்லிவிட்டு இணையத்தில் விண்ணூர்திக்கான பயணச் சீட்டுக்களை பார்க்கத் தொடங்கினேன். தமிழகம்போவதற்காக திட்டமிட்டேன். அந்த வேளையில் அம்மாவும் சகோதரியும் தமிழகம் சென்றிருந்தனர். அதே நேரம்2016 நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கும் போய் வரலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்திட்டத்தோடு. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இந்தியாவுக்கான உள் நுழைவு விசா எடுக்க வேண்டும். சுவிசில்விசாக்கு கொடுத்தால் இரண்டு வாரத்துக்கு மேலாகும் பின்னர் நத்தார் காலம் நெருங்கிவிடும். பயணச்சீட்டுக்கள்அதிகவிலையாயிருக்கும் அத்நோடு கிடைப்பதும் அரிது.
சரி இலங்கை போய் அங்கே விசா எடுத்து இந்தியா போவதென திட்டமிடப்பட்டது. உடனடியாக இலங்கைக்குவிமானச் சீட்டைப் பார்த்தேன் 14ந் திகதி புறப்படும் விமானத்துக்கு 850 சுவிஸ் பிராங்குக்கு விமானச் சீட்டுஇருந்தது. உடனடியாக வங்கி மூலம் பணத்தைச் செலுத்தி உறுதிப்படுத்திவிட்டேன். பயணம் உறுதி, மற்றும்குறுகிய நாள் என்பதால் காப்புறுதி கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பேஸ்புக்கில்நுழைந்தேன். பேரதிர்ச்சியான செய்தி காத்துக்கிடந்தது....
December 6, 2020
கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்
கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்
May 20, 2018
உலாத்தலும் உறவுகளும்
********************
ரூபன் 2002களிலிருந்து அறிந்த நண்பர். நான் "குருத்து" இதழின் ஆசிரியராக இருந்த சமகாலத்தில் ரூபன் நோர்வேயிலிருந்து "இளம்பரிதி" என்ற சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் கனடாவிலிருந்து வந்து அனைத்துலக இளையதலைமுறையினரை ஒருங்கிணைந்த பார்த்தீபனூடாக ரூபனும் இளம்பரிதி இதழும் அறிமுகமாகின.
எழுத்துத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சம வயதினராய் அறிமுகமான ரூபனை 2003 யூலை மாதம் வன்னியிலுள்ள பாண்டியன் எனப்படும் தமிழீழ அரசின் விருந்தினர் விடுதியில் சந்திக்க முடிந்தது ஒரு சுவையான அனுபவம்.
ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியிருந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாது. பாண்டியன் விருந்தினர் விடுதிக்கு சென்று நுழைந்த என்னை வாசல் வந்து வாங்கோ மயூரன் என்று வரவேற்றுக் கொண்டவர் ரூபன் பின்னே நோர்வேயை சேர்ந்த குயின்ரன் அண்ணா. ஆச்சரியமாய் இருந்தது நான் கேட்பதற்குள் ரூபனே முந்திக்கொண்டு இன்று நீங்கள் வருவதாக முன்னரே அறிவித்தல் வந்தது என்று என் ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக தமிழீழ அரசின் விருந்தினர்களாக அங்கே ஒன்றாகத் தங்கியிருந்தோம் மூன்று உணவுவேளைகள் மற்றும் இரவு வேளைகளில் அதிகம் பேச முடிந்தது. சேர்ந்திருந்து போராளிகளிடம் போரியல் அனுபவங்களை கேட்டறிந்தது தமிழீழத் திரைப்படப்பிரிவினால் ஈழத்தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு திரைப்படங்களை சேர்ந்து பார்த்ததென நிறைந்த பொழுதுகளாய் ரூபனோடு கழிந்தது.
பின்னர் பேஸ்புக் மீண்டும் ரூபனுடனான நட்பைப் புதுப்பித்தது. இம்முறை திடீர் குறுகிய கால நோர்வே பயணம் ரூபனை சந்திக்கும் காலத்தை ஏற்படுத்தித்தருமென நான் நினைக்கவில்லை. ஆனாலும் ரூபனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் ரூபனோடு சில மணித்துளிகள் அளவளாவ முடிந்தது மகிழ்வு. நிறைய விடயங்கள் உரையாட முடிந்தது. விரைவில் ரூபனின் கவிதைத் தொகுப்பொன்றும் நூல் உருவில் வரவுள்ளதாக அறிந்தேன். வாழ்த்துகள் ரூபன்.
#உலாத்தலும்_உறவுகளும்
May 14, 2018
உலாத்தலும்_உறவுகளும்
************************
பேஸ்புக்கூடாய் அறிமுகமாகி எங்களோடு சரிக்கு சரி பம்பலடிக்கும் அன்பு உள்ளம். எங்களோட பம்பலடிச்சு திரியிறதாலை ஆளும் எங்களை மாதிரி ஒராள் எண்டு நினைச்சா அது தவறு ஆள் ஆளுமையான மனிதன். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றது.
பரணி அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரது நட்பு வட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அவரது இசைப்பேழை வெளியீடு மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு அவருக்கு தெரியாமல் சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து நான் ஒஸ்லோ பயணப்பட முடிவெடுத்தபோது குகன் அண்ணாதான் நினைவுக்கு வந்தார். அவரை தொடர்புகொண்டு எனது வரவு பற்றி சொன்னபோது தானே விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதாய் உறுதியளித்தார்.
அதேபோல் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இன்முகத்தோடு கவிதாக்காவின் கைவண்ணத்தில் அருமையான மதிய உணவு வடை பாயாசத்தோடு தந்து திக்குமுக்காட வைத்து விட்டார். அவரது வீட்டில் தங்குவதற்கான அத்தனை ஒழுங்குகளையும் அவர் செய்துதந்தபோதும் பரணி அண்ணாவின் உரிமைப்போரினால் அது சாத்தியப்படாது போய்விட்டது.
ஆளுமைமிகு வானொலி ஒலிபரப்பாளரான குகன் அண்ணா இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முரசம் வானொலியின் ஒலிபரப்பாளராக சேவை புரிந்துவருகின்றார் வானொலியின் இன்றைய சந்திப்பு நிகழ்வில் என்னையும் அழைத்துக் கௌரவப்படுத்தியிருந்தார்.
ஒரு வானொலி அறிவிப்பாளரான எனக்கு ஒலிபரப்புத்துறை சார்ந்து அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் கிடைத்தன. பேஸ்புக் தந்த பெயர் சொல்லும் சில நட்புக்களில் அவரும் ஒருவரானது மனநிறைவைத் தருகின்றது.
#உலாத்தலும்_உறவுகளும்
April 26, 2018
''தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பங்கு"
சட்டி சோறு
************
மலேசியாவின் கோலாலம்பூர் நகரின் மையப்பகுதி தமிழர்களின் ஆளுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.
எப்படி பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் வடபரிஸ் தொடருந்து நிலைய வாசலில் வெளியேறியதும் சோறு வாசம் கமகமக்குமோ அப்படித்தான் கோலாலம்பூர் நகரின் பிரதான தொடருந்து நிலைய வாசலை விட்டு வெளியேற தமிழ்ப்பெயர்ப்பலகைகளும் சோறு வாசமும் கண் சிமிட்டும்.
மலேசியாவில் எங்கும் கிடைக்காத சட்டி சோறு எனப்படும் சிறப்பு உணவு இந்த ஏரியாவில்தான் கிடைக்கும். அதுவும் ஒரே ஒரு கடையில்.
சுபிரமணிய பிரபா சட்டி சோறு சாப்பிடுவம் என்றபோது அந்த சட்டி சோறு என்ற சொல்லே ஒரு ஈர்ப்பையும் சாப்பிட வேணும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது.
கடையை தேடிப்பிடித்து போனபோது சோத்துப்பிரியர்களால் கடை நிரம்பிக் கிடந்தது. ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்று கடை உரிமையாளர் சொன்னபோது சிறுகுடலை பெருங்குடல் தின்று தீர்த்துவிடுமளவு பசியின் வேகம் அதிகரித்துப்போயிருந்தது.
நண்டு, கோழி, றால், ஆடு, மீன் என சட்டிச்சோறு பல வித சுவையோடு உடனுக்குடன் சமைக்கப்பட்டு அதே மண் சட்டியோடு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்த
கறிகளை உடனுக்குடன் சமைத்து அதற்குள் அரிசியையும் சேர்த்து அவியவிட சுவையான சட்டி சோறு யாழ்ப்பாண வாசத்தோடும் சுவையோடும் தயாராகியிருக்கும். அப்பிடி ஒரு சுவை.
குடிப்பதற்கு ஆவரம்பூ மற்றும் நற்சீரகம் அவித்த தண்ணீரும் தரப்பட்டது.
நாக்கை விட்டகலாத சுவை இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் சுவைக்க வேணும்.
உணவகத்தை அறிமுகப்டுத்தி சட்டி சோறு போட்ட சுபிக்கு நன்றி.
உலாத்தலும் உறவுகளும்
March 7, 2017
சுவிசில் பூமிஅதிர்வு
நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாதபோதிலும் பல பகுதிகளிலும் சிறு அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள சுவிசின் பிரபல சஞ்சிகையான பிளிக் அடுத்த பெரும் அதிர்வு எப்போ என கேள்வியை எழுப்பியுள்ளது.
சுவிற்சர்லாந்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் நில அதிர்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சுவிற்சர்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் 1356ம் ஆண்டு ஒக்டோபர் 18 ந் திகதி ஏற்பட்ட அதிர்ச்சியே அதிக அழிவுகளை ஏற்படுத்திய அழிவாகும்.
இவ் அதிர்வு பாசல் மாநிலத்தின் றைனாக் பகுதியில் 7 றிக்டர் அளவில் ஏற்பட்டு பல பகுதிகளை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு 2000 பேர் வரையில் இறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. றைனாக் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள சிலுவை இன்னமும் உள்ளது.
பாசல் நகரின் மையத்திலுள்ள முன்ஸ்ரர் தேவாலயமும் பேரழிவுக்கு உள்ளானதாகவும் எட்டு நாட்கள் வரையில் நகரின் பல பகுதிகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்ததாகவும் பதிவுகள் உள்ளன.
மீண்டும் ஒரு பேரழிவை சுவிற்சர்லாந்து எதிர்கொள்ளலாம் என நிலவியல் நிபுணர்களின் ஆய்வுகள் சொல்கின்றன.
படம் 1
சுவிற்சர்லாந்தில் பூமிஅதிர்ச்சி நடைபெற வாய்ப்புள்ள பிராந்தியங்கள்.
படம் 2
06.03.2017 இரவு பூமிஅதிர்ச்சி ஏற்பட்ட பகுதி.
படம் 3
1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி பற்றி சொல்லும் ஓவியம்.
படம் 4
1356 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோருக்காக றைனாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலுவை.
படம் 1 இல் வட பகுதியில் நான் வாழும் பாசல் மாநிலம் எச்சரிக்கைக்கு உரியபகுதியாகும்.
#ஈழத்துப்பித்தன்
June 10, 2016
வாழும் போதே கௌரவிப்போம் 2
Rajeevan Ramalingam ரஜீவன் அண்ணா றெயின் இஞ்சினிலை முதல்ப்பெட்டியா Kogulan Kandasamy கோகுலனை கொழுவிவிட கோகுலன் Robert Thiru றொபேட் அண்ணாவை கொழுவ றொபேட் அண்ணா என்னை கொழுவிவிட்டிருக்கிறார். இது யாரும் கழன்று போய்விட முடியாமல் தொடர வேண்டிய ஒரு பிணைப்பு. இதில் நான் மதிக்கும் ஒரு பல்துறைக் கலைஞனாக இருக்கும் றொபேட் அண்ணா என்னையும் ஒருவனாய் மதித்து அழைத்திருப்பது மகிழ்ச்சியே. இதில் வியப்பு என்னவென்றால் முதல் நாள் இரவு றொபேட் அண்ணா என்னை இதில் இணைத்துவிடுவதுபோல் கனவு காண்கிறேன் விடிந்து பார்த்தால் அப்படியே நடந்திருக்கின்றது.
முதலில் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த ரஜீவன் அண்ணாக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழும் போதே எமது கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் கோட்பாட்டை முடிந்த வரை பின்பற்றி வருபன் என்ற வகையில் இத் திட்டம் மன நிறைவைத் தருகின்றது. றொபேட் அண்ணா யாரையாவது பற்றி எழுதுமாறு முழுச் சுதந்திரத்தை எனக்கு வழங்கியுள்ளார். அவரது வேண்டுகோளின்படி பிரான்சிலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் ஒருவர் பற்றி தொடர்கிறேன். இணைந்திருங்கள்.
ஆம், நான் குறிப்பிடப் போகும் நபர் வேறு யாருமல்ல சாட்சாத் றொபேட் அண்ணாவேதான். இரண்டாயிரங்களின் முற்பகுதியில் புத்தொளி வீசி ரீரீஎன் தொலைக்காட்சி தோற்றம்பெறுகின்றது. பலதரப்பட்ட நிகழ்வுகளோடு உதயமான தொலைக்காட்சியில் புதிதாய் மலங்க மலங்க முழியை உருட்டியபடி ஒருவர் அறிமுகமாகிறார், குறிப்பாக செய்தி மற்றும் மனங்கவர் நிகழ்வான தாயகவலம் வேறும் பல நிகழ்வுகளில் றொபேட் அண்ணா அடிக்கடி தோன்றுவார். இதில் தாயகவலம் நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பிருந்தது. அதாவது காசியானந்தன் சொன்ன "நீ பனை மரத்தை என் தேசத்தில் காண்கிறாய் நான் பனைமரத்தில் என் தேசத்தைக் காண்கிறேன்" என்ற கூற்றுப்போல் இந் நிகழ்வும் அமைந்தது. அதாவது தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழருக்குமான தொடர்புகள் மிக இறுக்கமான காலத்தில் தாயகத்தின் காட்சிகளைத் தரிசிக்கும் பெரும் வரமாக அந் நிகழ்வு இருந்தது. அந் நிகழ்வின் தொகுப்பாளராய் இவர் இருந்ததால் மக்களால் "தாயகத்தம்பி" என அன்பாக அழைக்கப்படும் ஒருவரானார். இதை நானே பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன்.
சமகாலத்தில் ஐபிசி தமிழ் வானொலியும் ரீரிஎன் தமிழ் ஒளியும் சகோதர நிறுவனங்களாக இணைந்த சேவையில் இருந்தன. இவ் இரண்டு ஊடகங்களையும் இணைத்து சுவிசில் இயங்கிய கலையகத்தில் இரு ஊடகங்களிலும் நானும் பணி புரிந்திருந்ததால் றொபேட் அண்ணாவை பல தடவைகள் சந்திக்க முடிந்தாலும் நெருங்கிப் பழக்க கிடைத்த வாய்ப்புகள் மிக குறைவே.
2005 இல் மகிந்த அரசுடனான முதலாங்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்ற காலப்பகுதியில் றொபேட் அண்ணா ரீரிஎன்னுக்காகவும் நான் ஐபிசி தமிழுக்காகவும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். அந்தக் காலப்பகுதியில்தான் றொபேட் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தான் இருக்கும் சூழலை எந் நேரமும் மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பதில் வல்லவர். அந்த மூன்று நாட்கள் அதிக பொழுதை அவருடன் கழிக்க முடிந்தபோதுதான் ரீவியில் முழி உருட்டும் றொபேட் என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளனுக்கும் றொபேட் என்ற கலையுணர்வுமிக்க கலைஞனுக்கும் இடையே நிறைய விடயங்கள் உள்ளமை புலப்பட்டது.
கால ஓட்டத்தில் ரீரிஎன் என்ற சாம்ராஜ்ஜியம் சரிய நானும் தற்போது பணியாற்றும் வானொலியின் பொறுப்புக்களுள் நுழைய றொபேட் அண்ணாவுடனான தொடர்புகள் அற்றுப்போனது. மீண்டும் 2011இல் சுவிசில் நடைபெற்ற "LIFT" நிறுவனத்தின் முதலாவது குறும்பட திரையிடல் நிகழ்வுக்குப் போனபோது றொபேட் அண்ணாவை மீண்டும் கண்டு அழவழாவ முடிந்தது. அன்றைய நாளில்தான் அவரது இயக்குனர் என்ற அவதாரம் பற்றியும் அறிய முடிந்தது. அந்தத் திரையிடல் நிகழ்வில் இவரது இயக்கத்தில் வெளிவந்த "குருவிச்சை" என்ற குறும்படமும் திரையிடப்பட்டது. மிகச் சிறந்த இயக்குனராக மிளிர்ந்தார். அந்த குறும்படம் பற்றிய கருத்தை முதலில் பதிவாக்கிய பெருமை என்னைச் சாரும்.
அக் குறும்படம் பற்றி அன்று பின்வருமாறு பதிவு செய்தேன்.
"அடுத்து குருவிச்சை இது அகரம் தயாரிப்பில் றொபேட்டின் இயக்கத்தில் வெளியான குறும்படம் இன்று எம்மவர் மத்தியில் மட்டுமல்ல உலகின் அனைத்து தரப்பினராலும் உபயோகப்படுத்தும் முகப்புத்தகம் பற்றிய ஒரு குறும்படம் அழகான ஒளிப்பதிவுடன் கதை அழகாக நகர்த்தப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் நகர்விலும் ஒளிப்பதிவிலும் அதி அக்றை காட்டிய இயக்குனர் ஒலிப்பதிவை கவனிக்கத் தவறிவிட்டார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதால் அந்தக் குறையை பெரிது படுத்தாமல் பார்த்தால் அற்புதமான படைப்பு."
அந்த விழா பற்றிய பதிவின் பின்னர் றொபேட் அண்ணாவுடனான முகப்புத்தக நட்புக் கிடைத்தது. அவரைப் பற்றியும் அவரது தனித் திறன்கள் பற்றியும் பல விடயங்களை அறிய முடிந்தது. ஓவியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசைக்கலைஞர் என பல்துறை சார்ந்த திறன்களையும் கொண்டவராகவும் அன்பான தந்தை, துணைவன், குடும்பத் தலைவன் என்ற அவதாரங்களைக் கொண்டவராகவும் காணமுடிந்தது.
ஈழநாதம், ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியர் பீடத்தில் பணிபுரிந்ததோடு பல புனைபெயர்களில் பல ஆக்கங்களையும் எழுதித்தள்ளியிருக்கிறார். மனோரஞ்சிதன் என்ற புனைபெயரில் இவர் எழுதிய 'நாதவலை' என்ற சிறுகதையொன்றை அண்மையில் வாசிக்கமுடிந்தது. இத்தகைய பல்துறை ஆளுமை மிகு கலைஞனிடம் நான் அறிந்த வரை குறையை தேடித் தேடிப் பார்க்கிறேன் எதுவும் கிடைக்கவில்லை. இத்தனை ஆளுமை கொண்ட ஒருவர் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் இருப்பதே அவரது + & - . அவரது அடையாளமான குழந்தைத்தனமான கல கல என்ற சிரிப்பு களங்கமில்லாமல் தொடரவேண்டும் எனக் கேட்டு நிறைவுக்குள் வருகிறேன்.
நான் அவர் பற்றி சொல்லாமல் விட்டவை பல அதையெல்லாம் கருத்தெழுதும் உறவுகள் நிவர்த்தி செய்வார்கள். பிரான்சிலிருந்து பிரித்தானியா போய் மீண்டும் பிரான்ஸ் வந்து சுவிசில் நிற்கும் இந்த தொடர்வண்டியை அடுத்த பெட்டி கொழுவ பல்லாயிரம் மைல்கள் தாண்டி எங்கள் தாயகம் நோக்கித் திருப்புகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இன்னொரு பல்துறைக் கலைஞன். எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்படும் ஒரு கலைஞனான MaThi Sutha மதிசுதாவை அழைக்கிறேன். என்னைப்பற்றி எழுதித் தொடர...
April 27, 2016
ஆருக்குச் சொல்லி அழ.....
April 11, 2016
சத்திய சோதனை
மிகச் சிறு வயது முதல் நான் வாசிக்க விரும்பிய நூல் சத்திய சோதனை.
சிறு வயது முதல் எங்கள் ஊரின் அண்ணா கோப்பி அல்லது மில்க்வைற்றினதோ கலண்டரில் சரியாக நினைவில்லை, அதில்தான் முதன் முதலாக காந்தியின் படத்தைப் பார்த்து மனதுக்குள் பதிந்தார் காந்தி. அதே காந்தி பள்ளிக் காலத்தில் வில்லனானார் கட்டுரைப் போட்டிகளுக்காய் அவர் பற்றிய விபரங்களை மனனம் செய்ய வேண்டி வந்த போது.
அதுக்கு பின் தியாகி. திலீபன் உண்ணா நோன்பிருந்த போது "காந்தியத்தின் சிகாமே உனது இரத்த வேள்விக்கு நன்றி" அப்படியென எழுதப்பட்ட பிரசுரங்களினூடாகவும் காந்தி கூட ஆட்டுப்பால் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்தார் திலீபா நீ நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கிறாயே என்ற கோசங்களூடாகவும் காந்தி மீண்டும் அறிமுகமானார்.
இந்தியா எம் தேசம் மீது தொடுத்த போரின் வலியையும் வடுக்களையும் நினைவு தெரிய ஆரம்பித்த அந்த வயதிலேயே கண்ணால் காண நேர்ந்ததாலும் ராஜீவின் பேருக்குப் பின்னால் காந்தியிருந்ததால் இவையெல்லாம் கூட்டுக் களவாணியள் என்ற கருத்தியல் மனதில் ஆழமாய் வேரூன்றிப் போய்விட்டது.
அதன் பின் இந்திய விடுதலைப் போர் சுபாஸ் சந்திரபோஸ் பற்றி அறிந்தபோது விடுதலைக்காய் நாமும் போராடும் இனமானதால் சுபாஸ் சந்திரபோஸ் மீது இனம்புரியாத பிடிப்பு ஏற்பட்டுப்போனது.
இருந்தபோதும் காந்தியின் சத்திய சோதனையை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை அதற்கு எனது சுவிற்சர்லாந்திலான கல்விக்காலத்தில் பிரபலங்களின் சுயசரிதைகள் எனும் பாடமூடாக உலகில் உண்மையை மறைக்காமல் தனது சுயசரிதையை எழுதியவர் காந்தி என்ற கூடுதல் தகவல் கிடைத்ததாலும் அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிவதில் ஆர்வம்கொண்ட தமிழருக்கே உரிய தனித்துவமும் காரணமாகிப் போனது.
பல தடவைகள் எனது புத்தகக் கொள்வனவுகளின் போதும் சத்திய சோதனை நூலை பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது அது எனக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது. அனைத்துப் புத்தகசாலைகளிலும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்ற ஒரே பதிலே கிடைத்தது.
சரி கிடைக்கும் போது வாசிப்போம் என விட்டாச்சு. கடந்த தமிழகப் பயணத்தின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற புத்தக்க்கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கிடந்த போதும் சத்திய சோதனை சோதனையாகவே இருந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இறுதிக்கட்டக் கொள்வனவுக்காக தி.நகர் போயிருந்தேன். அங்கேயுள்ள ஒரு இசைப்பேழை விற்பனை நிலையத்தில் ஒலித்துக்கொண்டிருந்த மகாநதி சோபனாவின் குரல் உள்ளே இழுத்தது.
சில இசைப்பேழைகளை கொள்வனவு செய்துகொண்டு நிமிர்ந்தபோது மகாத்மா காந்தி பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார். எட்டித் தூக்கிய போது மகிழ்வும் ஒரு வித ஏமாற்றமும் மிஞ்சியது. நீண்ட பல காலமாக தேடிய நூல் எதேட்சையாக கிடைத்த போதும் அதுவும் முதல் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் வடுச் சுமந்து நின்றது. ஆம் நூல் சற்று தண்ணீரில் நனைந்திருந்தது ஆனாலும் உருக்குலையவில்லை. வேறு பிரதி உள்ளதா எனக் கேட்ட போது இப் பதிப்பு விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும் இதுவே இறுதி நூல் எனும் பதிலை கிடைத்தது. விலையை விசாரித்தேன் வெறும் நாற்பது ரூபாய் சரி என்று வாங்கி வந்தாச்சு. பயண வழியில் காந்தியும் கூட வருவார் என எண்ணியிருந்தேன். ஆனால் அதுவும் திசை மாறியது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் அந்த நூல் இருந்த கைபையை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டியதாய்ப் போய்விட்டது. மீண்டும் சத்திய சோதனை சோதனை ஆனது.
இப்படி இடையூறுகளுக்கு உள்ளாக்கி கண்கட்டி வித்தை காட்டிய சத்திய சோதனை ஒருவாறு பொதியூடாக கரம் வந்து சேர்ந்தடைந்துள்ளது.
காந்தி உண்மை சொல்லித்தான் இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு பிரித்து மேயத் தொடங்குகிறேன்....
January 28, 2016
நிழல்களில் வாழும் நினைவுகள் 2
****************************************
ஈழத்தமிழரின் இன்னொரு அடையாளம்.
பூவரசம் இலையில் புக்கை வேண்டிச் சாப்பிட்ட காலங்கள் என பூவரசம் இலைக்கும் எமக்கும் இடையேயான பந்தம் மிக நெருக்கமானது. சரஸ்வதி பூசை நேரம் எங்கட கிணத்தடி பிள்ளையாரடியில் செல்வண்ணை சகலகலா வல்லி மாலை பாடத் தொடங்கி மண்கண்ட வெண்குடை என்று கடைசி பாட்ட பாடத் தொடங்க நாங்களெல்லாம் தொங்கிப் பாய்ந்து இலை பிடுங்கீடுவம்.
நிழல்களில் வாழும் நினைவுகள் 1
*************************************
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று கிளுவை வேலி.
கிளுவை பல நினைவுகளை தந்து போகும். சிறார்களாக நாம் இருந்தகாலங்களில் பல் விழும்போது அந்த இடைவெளிக்கு கிளுவங் கதியால் போடுவமோ என்ற சொல்லாடலை கேட்க்காமல் எவரும் அப்பருவத்தை கடந்திருக்கும் முடியாது.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு ஒன்றிய கிளுவையின் முள் விசத்தன்மை கொண்டது. இதன் முள் குத்தினால் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிளுவங் கதியால் வெட்டும் விற்பனையும் சூடு பிடிக்கும். இக்காலத்தில் எங்கையன் கதியால் கிடந்தா சொல்லுங்கோவன் என்ற சொல்லாடலை அதிகமாய்க் கேட்க முடியும்.
யாழின் அடையாளங்களில் ஒன்றான கிளுவை வேலி இப்போ வழக்கொழிந்து வருபவையின் பட்டியலில் இணைந்துள்ளது.
26.01.2016
September 17, 2015
கிணத்தடிப் பிள்ளையார்
இண்டைக்கு பிள்ளையாருக்கு பிறந்தநாளாம். நாங்களும் எங்கடை கிணத்தடிப் பிள்ளையாரைப் பற்றி நாலு வசனம் எழுதுவம்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலை இருந்து பிள்ளையார் எங்கடை பக்கத்து வீட்டுக்காரன்.
எங்கடை வீட்டுக்கு மேற்குப்பக்கத்து காணீக்கை பிள்ளையார் குடியிருக்கிறார். எங்கடை வீட்டைச் சுத்தியிருக்கிற பத்துப் பதினைஞ்சு வீடுகளுக்கான பொதுக்கிணறு அங்கைதான் இருக்கு அந்தக் கிணத்துக்கு காவலா இவர் எப்பவும் அதிலை இருப்பர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்கடை அயலிலை உள்ள ஒவ்வொருத்தரும் குழைசாதம் காச்சி செல்வண்ணை தலமையிலை சிவபுராணம் முதல் பிள்ளையார் பாட்டுகள் எல்லாம்பாடி கூட்டுப்பிராத்தனை முடிச்சு கூடியிருந்து சாப்பிட்டு கலைவம்.
அதைவிட நவராத்திரி, திருவம்பா, பிள்ளையார்கதை, ஆவணி ஓணம், சதுர்த்தி, பொங்கல் அப்பிடி விஷேசநாள் எல்லாத்துக்கும் அந்தந்தகாலத்துக்கான பாடல்களோடை கூட்டுப்பிராத்தனையும் அவல், கடலை, மோதகம், வடையோடை களை கட்டும். சிவராத்திரிக்கு நித்திரை முழிப்பும் சித்திராக் கஞ்சியும் சிறப்பாயிருக்கும் இளையாம்பி ஆச்சி இல்லாட்டி அப்பமாச்சி எண்டு நாங்கள் செல்லமா கூப்பிடுற ஈரோஸ் தலைவர் இரத்தினசபாபதி அவர்களின் தாயாரின் தலமையில் கஞ்சி காச்சி ஊத்தப்படும். அந்தக் கஞ்சிக்காகவே எங்கடை அயலைவிட்டு போய் வேறை இடங்களிலை குடியேறினவையெல்லாம் அண்டைக்கு பிள்ளையாரை தேடிவருவினம். அப்பிடி ஒரு சுவையான கஞ்சி குடிச்சு இருவத்தைஞ்சு வருசமான பிறகும் அந்த வாசமும் ருசியும் இப்பவும் நெஞ்சுக்கை நிக்குது.
அப்பிடி ஒரு சித்திராப்பறுவநாளிலை எங்கடை அயலுக்கை உள்ள பத்துப் பதினொரு வயசுப்பெடியள் நான், சுதா,ரமேஷ் கண்ணா, நந்தன்(இப்ப கனடாவில் பிரபல தாளவாத்திய கலைஞன்) இன்னபிற எங்கடை வயசு மட்டங்கள் எல்லாம் சேந்து முடிவெடுத்தம் ஒரு கலை நிகழ்ச்சி செய்வமெண்டு (அந்த நிகழ்சிபற்றி வேறோர் பதிவில் விரிவா எழுதுறன்) அந்தக் கலைநிகழ்ச்சிதான் எனக்கு களம் தந்த முதல்மேடை.
விசேசநாள்களை விட ஒவ்வொருநாளும் பின்னேரம் அம்மாக்கள் கும்பிட்டுட்டு இருந்து ஊர்க்கதை பேச பிள்ளையள் சேந்திருந்து விளையாடுற இடமாயும் இந்த கிணத்தடிப் பிள்ளையாரே இருந்தார்.
எங்கடை வீட்டைச் சுத்தி பல பிரபல கோயிலுகள் இருந்தாலும் எங்கடை வீடுகளிலை நடக்கிற விசேசங்கள் எல்லாம் இவருக்கு முன்னாலைதான் குடிபூர்தலுக்கு படம் வைச்சு எடுக்கிறது காது குத்தல், சோறு தீத்தல் எல்லாம் இஞ்சைதான் நடக்கும். ஐயர் இல்லாமல் உண்டியல் இல்லாமல் எங்கடை குடும்பத்தில் உள்ள ஒருத்தனோடை உள்ள உறவுபோல எங்களுக்கும் எங்கடை கிணத்தடிப் பிள்ளையாருக்குமான உறவு எண்டைக்கும் நிலைச்சிருக்கும். இண்டைக்கும் நாங்கள் ஊர்போனா வீட்டுக்கை நுழைய முன்னம் பிள்ளையாரை பாத்திட்டு வீட்டுக்கை போறதுதான் வழக்கம்.
June 15, 2013
ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்து போனது
2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.
புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.
அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.
புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.
ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்.
December 11, 2011
அன்புக்குரிய மனிதன்
இச் சம்பவம் அவர் மீது எனக்கிருந்த அபிப்பிராயத்தை சற்றுப் புரட்டிப் போட்டது. அதன் பின் காண்கின்ற போது புன்முறுவல் இடையிடையே வணக்கம் இப்படி தொடர்ந்தது அவருடனான எனது நட்பு.
2002களின் செப்டம்பர் பிற்பகுதி குருத்து மாதஇதழின் முதலாவது இதழை வெளியிட்டு வைக்கின்றோம். முதல் இதழின் வரவு நாம் எதிர்பார்த்தகைக் காட்டிலும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பலர் எம்மோடு இணைந்து செயற்பட ஆர்வம்கொண்டு எம்மோடு இணைந்து கொண்டனர்.
அப்போது எமது இதழின் இணையாசிரியர் செந்தூரன் என்னோடு தொடர்பு கொண்டு சொன்னார். ஒரு அண்ணை உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னவர் என்று சரி வரேக்கை கூட்டியாங்கோ என்றுவிட்டு அடுத்த இதழின் வடிவமைப்பில் மூழ்கிப்போகின்றேன். அன்று மாலை செந்தூரன் என்னை சந்திக்க வந்தபோது கூடவே அவரும் வருகின்றார். இதழ் தொடர்பில் பல விடயங்கள் உள்ளடக்கம் பற்றியெல்லாம் பல விடயங்களை உரையாடினோம்.
குருத்தின் சிறுவர் பகுதி முதல் இதழிலே சிறுவர் தோப்பு என அறிமுகமாகி வெளிவந்திருந்தது, அதனை அரும்பு என பெயர் மாற்றம் செய்தால் அழகாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என ஆலோசனை தந்து அப் பகுதியில் புதிதாய் இணைக்கப்பட வேண்டியவிடயங்களையும் தானே தொகுத்துத் தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதோடு மட்டும் நின்றுவிடாமல் எம் சமூகத்தில் புகுந்துகிடக்கும் மூடநம்பிக்கைகளையும் அறியாமைகளையும் கண்மூடித்தனங்களையும் நக்கலாக தோலுரித்துக் காட்டும் நோக்கோடு தத்துவத்தார் எனும் பகுதியொன்றினையும் தானே எழுத முன்வந்தார். அவர் செயற்பாடுகளில் முண்டாசுக் கவிஞனை நான் காண்கின்றேன்.
அவரது வரவு எமது இரண்டாவது இதழ் பல மாற்றங்களோடும் புதுப்பொலிவோடு வெளிவந்தது. எமக்கு பல தரப்பட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் வந்து குவிந்தன. தத்துவத்தார் பகுதி பெரு வரவேற்பினைப் பெற்றது. அன்று முதல் எனக்கும் அவருக்கும் இடையேயான உறவு வலுப்படத் தொடங்கியது.
இதழ் சிறப்பான ஆக்கங்களைத்தாங்கி வெளிவரத் தொடங்கியபோது சிறுவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தேன். 2003ம் ஆண்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. 2004ம் ஆண்டு இரண்டாவது தடவையாக நாம் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்தபோது, அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவருக்கு எமது சிறுவர்பகுதியின் பெயரான அரும்பு எனும் பெயரிலே விருது ஒன்றினை வழங்குவோம் என்ற ஆலோசனையை முன்வைத்தார். அதன்படி 2004ம் ஆண்டு சகானா வசந்தன் என்ற மாணவிக்கு குருத்தின் உயரிய சிறுவர் விருதான முதலாவது அரும்பு விருது வழங்கப்பட்டது. தான் மட்டும் ஒத்துழைப்பு வழங்கினால் போதாதென்று தனது மனைவியையும் எமது இதழூடாக தொடர் கதையொன்றினை எழுதவைத்து ஒத்துழைப்பினை வழங்கினார்.
இலக்கியத்தால் ஏற்பட்ட நட்பு என்பதற்கும் அப்பாற்பட்டு ஒரு அண்ணணாக என்னோடு கூட இருந்து எனது சரி, பிழைகளை நேருக்கு நேர் சுட்டிக்காட்டுவார். அவர் இது தவறு என சுட்டிக்காட்டிய சில தவறுகளை அன்று நான் திருத்திக் கொள்ளத்தவறியதால் பின்னாளில் அது குருத்து இதழின் வரவு தடைப்படும் நிலைக்குச் சென்றமை மறுக்க முடியாத உண்மை.
குருத்து இதழை இனி வெளியிடுவதில்லை என்ற முடிவான முடிவோடு நான் இருக்க என்னை தொடர்புகொண்டு இப்ப எனக்கு ஓய்வாக நிறைய நேரம் இருக்கிறது. 2012ம் ஆண்டு குருத்து வெளிவந்த பத்தாவது அகவை நிறைவு நாம் ஏன் 2012ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு இதழையாவது வெளியிடக்கூடாது எனக் கேட்டார். சரி வெளியிடுவோம் என அவரின் ஒத்துழைப்போடு பத்தாம் அகவை மலரின் பூர்வாங்க நடவடிக்கைகளிலே இறங்கியிருந்தேன். நாளை (11.12.2011) நாம் சந்தித்து இதழ் தொடர்பான மேலதிக விபரங்கள் பற்றி உரையாடிக் கொள்வோம். என்று என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொண்டார். அப்படி இருந்த வேளையில் இன்று (10.12.2011)என் தொலைபேசி தாங்கி வந்த சேதி என் அன்புக்குரிய அண்ணன், எமது இதழின் ஆலோசகன், அரும்பின் தந்தை, எமுத்தாளன் தத்துவத்தார் என்றும் சோழியூர் ஸ்ரீ என்றும் எங்கள் வாசக நெஞ்சங்களோடு உறவாடிய ஸ்ரீ துரைராஜ் மாரடைப்பால் மாண்டார் என்ற சேதி. விக்கித்துப்போய் நிற்கின்றோம். அன்பு அண்ணனை ஆற்றல் மிகு ஆலோசகனை புலமை மிகு எழுத்தாளனை சமூகப் பணியாளனை இழந்து தவிக்கின்றோம். நாம்.
March 14, 2011
அழகிய அந்த மூன்று நாட்களை வரவேற்க்க காதிருப்போம்
சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரம்பரியத் திருவிழாவான வசந்த விழா ஒரு பற்றி பார்வை.. ஒலியில் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கடை கருத்துக்களையும் வாக்குகளையும் மறக்காமல் பதிஞ்சு விடுங்கோ....
January 13, 2011
எனது அன்புக்குரிய ஆசான்
நீங்கள் ஊரிலை எத்தினையாம் வகுப்பு வரைக்கும் படிச்சனீங்கள் என அன்பான குரல் ஒன்று என்னை வினவுகிறது. ஆண்டு 6 வரைக்கும் படிச்சனான் என்று நான் சொல்ல இனி நீங்கள் என்னட்டைதான் தமிழ் படிக்கப் போறீங்கள் என்று அந்த அன்பான அமைதியான குரல் எனக்கு சொல்லிவிட்டு பாடம் நடத்தத் தொடங்கியது.
அன்று முதல் அந்த அன்பான குரலுக்குரியவர் என் ஆசானாய் மட்டும் இருந்து தாய்மொழியை மட்டும கற்பிப்பதோடு நின்றுவிடாது என் தனிப்பட்ட வாழ்விலும் நான் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு என்னை செதுக்குகின்ற சிற்பியாயும் திகழ்ந்தார்.
அன்போடு ஒரு நண்பனைப் போல அருகிருந்து அறிவுயை கூறிடுவார். பதின்ம வயதில் இளையோர் பாதைமாறிப் போவது இயல்பு அந்த வயதில் என்னை தமிழ் மீது பற்றுக்கொள்ள வைத்து என்னை சிறந்த இளவலாய் என்னையொத்தவர் மத்தியில் சீர்தூக்கி வைத்த ஒரு சிறந்த பண்பாளன். அது மட்டுமன்றி அந்த பாடசாலைக்கு நிர்வாகமொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்காத காலத்தில் அந்த பள்ளியின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் தன்னோடு இணைந்து நிர்வகிக்கின்ற பெரும் நிர்வாகப் பணியையும் பதின்ம வயதிலேயே எனக்கு தந்து என்னுள்ளே நிர்வாகத் திறனினையும் வளர்த்தெடுத்தார் அந்த அன்புக்குரியவர். பின்னை நாளில் என்னால் பலவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குரிய ஆளுமையை என்னுள் வளரத்தெடுத்தவர் அந்த அன்புக்குரியவர்.
தமிழ் மொழியில் எழுத்துப் பிழைகளை நான் விடுவது மிகவும் அரிது. ஒரு நாள் தமிழ் இலக்கணம் படிக்கின்ற வேளையில் திணைகளைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தோம் அப்போது உயர்திணை என்பதை உயர்தினை என எழுதிவிட்டேன். அதை கவனித்த எனது ஆசான் 100 தடவைகள் உயர்திணை என சரியாக எழுதுமாறு தண்டனை வழங்கி விட்டார். பின்னர் தனிப்பட்டரீதியில் என்னை அழைத்து இனிவரும் காலங்களில் தமிழ்மொழியில் எழுத்துப் பிழை விடக்கூடாது அதற்காகத்தான் அந்தத் தண்டனையை வழங்கினேன் எனக் கூறினார்.
எங்கள் பாடசாலையால் நடாத்தப்படும் வாணி விழா மிகவும் முக்கியமானது. ஏனெனில் பாசல் மாநிலத்தில் சிறுவர்களின் நிகழ்வுகளை உள்ளடக்கி நடைபெற ஆரம்பி;த்த முதலாவது நிகழ்வு இதுவாகும். வாணி விழா காலம் நெருங்க நெருங்க எங்கள் மனங்கள் விழாக் கோலம் பூணும். ஓவ்வொரு ஆண்டும் எங்களோடு கலந்தாலோசித்த பின்னர்தான் நிகழ்வுகளுக்கான எற்பாடுகளை செய்வார். நிகழ்வுகள் எங்களால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருப்பார். ஒரு முறை எங்கள் பள்ளியில் நாடகம் ஒன்றை நாமே எழுதி நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அந்த நேரத்தில் எங்கள் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் நாடகம் ஒன்றை எழுதியிருந்தார். நானும் ஒரு நாடகத்தை எழுதியிருந்தேன் தவறுகள் என்ற பெயரில் அந்த நாடகத்தை பார்த்த எனது ஆசான் என்னை அழைத்து பாராட்டி எனது நாடகத்தையே தெரிவு செய்து தானும் அந்த நாடகத்தில் சில திருத்தங்களைச் செய்து எம்மை நடிக்க வைத்து எம்மை கௌரவப்படுத்தினார். ஒரு பதினாறு வயது இளைஞன்தானே இவனுக்கு நான் ஏன் மதிப்புக் கொடுப்பான் என்று எண்ணாமல் எங்களுக்குள் இருந்த திறமைகளை இனங்கண்டு தட்டிக்கொடுத்து வெளிக்கொணர்வதில் அந்த அன்புக்குரியவர் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை.
அப்படி எனக்கு தமிழ்மொழி மீது பற்றுதலை ஏற்படுத்திய எனது அன்புக்குரிய ஆசான் தனது சுயவிருப்பில் பாடசாலை நிர்வாகத்திலிருந்து வெளியேறிக் கொண்டார்.
பின்னர் அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு குறைந்து போயிற்று. எங்காவது அவரை காண்கின்ற போதினில் தாய்ப்பசுவைக் கண்ட கன்று போல் என் மனம் மகிழந்து .துள்ளும் பதிலுக்கு அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் அவரின் நிரந்தர அடையாளமான உதடு விரியாத புன்னகையும் அன்பான பேச்சும். என்றும் அவர் அதிர்ந்து பேசி நான் அறிந்;ததில்லை.
கடந்த பல மாதங்களாக என் அன்புக்கினிய ஆசானை நான் காணவில்லை. கடந்த சில நாட்களாக ஏதோ இனம்புரியாமல் என் ஆழ் மனம் என் ஆசானை தேடியது. தற்போது நான் பணியாற்றம் வானொலியினால் நடாத்தப்படுகின்ற ஆண்டு விழாவின் வேலைத் திட்டங்களை என் தலையில் சுமந்திருப்பதால் நிகழ்வு முடிவடைந்ததும் என் ஆசானை சந்திக்க வேண்டும் என்ற பேரவாவோடு உறங்கப் போயிருந்தேன.; மறுநாள் காலை என்றும் போல் புலரவில்லை. என்னை துயிலெழுப்பிய தொலைபேசி அழைப்பு எனக்காய் காவி வந்த சேதி என் அன்புக்கினிய என் ஆசான் நல்லதம்பி தயாபரன் தன் 45ம் வயதில் மாரடைப்பால் மாண்ட சேதி. உண்மையில் விக்கித்துப் போனேன்.
மனித வாழ்வில் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது நித்தமும் நிகழ்கின்றது. எம்மோடு நெருங்கிய பழகிய பலரது மரணம் உடன் எமக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் பின்னர் இயற்கையின் நியதியென்று எம்மை நாமே தேற்றிக் கொள்ளும் மனத் தைரியத்தை எமக்கு வழங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்துவிடும்.
October 27, 2010
இலையுதிர்காலத் திருவிழா

