Pages

December 29, 2020

இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் பகுதி 2



பேஸ்புக்கை திறந்தபோது பேரதிர்ச்சி காத்துக் கிடந்தது. சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்ற செய்தியும் படங்களும் குறிப்பாய் விமான நிலையத்தினுள் புகுந்த வெள்ளக்காட்சிகளும் எங்கும் விரிந்து கிடந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக பேஸ்புக் ஆய்வாளர்களின் சென்னை நகரை கடல் காவுகொள்ளப் போகின்றது என்ற ஆய்வுக்கட்டுரைகளும் பயங்காட்டிக்


பயணத்தை நிறுத்திவிடலாம் என்றாலும் பயணச்சீட்டுக்கு செலுத்திய பணமும் திரும்பாதே என்ற யோசனையாக இருந்தது. 

இரண்டு கிழமை இருக்கு, சரி ஊருக்குதானே; முதலில் அங்கு போவம் பிறகு நிலமையைப் பொறுத்து இந்தியப் பயணத்தை திட்டமிடுவோம் என முடிவெடுத்தாச்சு. 

இரண்டு வாரத்தில் சென்னையில் வெள்ளம் வடிந்து இயல்புக்குத் திரும்பியிருந்தது. நானும் திட்டமிட்டபடி கத்தார் வழியாக கொழும்பு நோக்கி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். 



பாபநாசம் திரைப்படத்தோடு கத்தார் விமானச்சேவையின் பயணம் தொடர்ந்தது. காலை ஐந்து மணிக்கு வேலை முடிய அப்படியே வந்து 6.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சூரிச் விமான நிலையம் சென்று அங்கிருந்து காலை 10.00 மணிக்கு கத்தார் நாட்டின் டோகா நோக்கிப் பயணம் பின் அங்கிருந்து கொழும்பு இதுதான் பயணவழி. ஊர்போகின்றேன் என்ற நினைப்பு முதல் நாள் நித்திரை இல்லாத களைப்பும் தெரியாதளவு உற்சாகமாயிருந்தது. 


விமானப் பயணமும், மருத்துவமனையில் இருப்பதுவும் ஒரேமாதியான சிந்தனையோட்டமாக இருக்கும் எப்ப சாப்பாடு வரும்? என்ன சாப்பாடு வரும்? 

கத்தார் விமானச்சேவையில் தரமான சுவையான உணவுகள் தரப்பட்டன. அதுவும் டோகாவில் இருந்து கொழும்பு பயணிக்கும் விமானத்தில் தரப்பட்ட சிவப்புப் பச்சை அரிசியிலான பாற் சோறும், கோழிக்கறியும், கட்ட சம்பலும் மிகச் சுவையாக இருந்தது. 




விமானத்தையும் விட வேகமாக மனம் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அதிகாலையில் கொழும்பு விமான நிலையத்தைச் சென்றடைந்தேன். தம்பி (சித்தியின் மகன்) அழைத்துச் செல்ல வந்திருந்தான். அன்றே இந்திய விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு ஊருக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது...

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.