Pages

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

December 10, 2020

காரிய விசருகள்...

 


இங்கு காரிய விசருகள் 
கனக்க உலாவுது
எட்டியும் உதைக்கேலாது
கட்டியும் பிடிக்கேலாது
கவனமாகத்தான் கையாள வேணும்.

காரிய விசருகள் 
கனவேலை செய்யுங்கள் 
கூரிய கத்திபோல் அதுகளை
கையாள வேணும்
நேரிய பார்வையோடு
இதுகளை நெருங்கவும் முடியாது

நாகு கண்ட காளைபோல் 
தலையாட்டியாட்டி நின்றே
காரியம் பார்த்திடுங்கள்
காரியம் முடிந்ததும்
கூரிய கத்தி கொண்டு
நெஞ்சினில் பாய்ச்சிடுங்கள்

நம்பினால் நட்டாற்றில்
விட்டிடுங்கள் 
எதிர்பாரா வேளையில் 
மாடியிலிருந்து பிடித்துத் 
தள்ளுவது போல்
பொறுத்த நேரத்திலே
மனத்தை உடைத்திடும்
வேலையும் பார்த்திடுவார்

இங்கு
காரிய விசருகள் இங்க 
கனக்க உலாவுது...
கவனமாகத்தான்
கையாளவேணும்...

#ஈழத்துப்பித்தன்
16.07.2020


February 8, 2017

பாதைகள் மாறாது

பாதைகள் வளைந்தாலும்
இலக்கில் மாற்றமில்லை
தேவைகள் ஆயிரம்
திடம் தனை குலைத்தாலும்
ஆவி அடங்கும் வரை
அவள் நினைப்பே

தீயிட்டு எரித்து
சிறு சாம்பல் துகளாய்
சிதறிப் பறக்கையிலும்
சீமாட்டி உன் நினைப்பே
சிந்தை எங்கும்
சீராக நிறைந்திருக்கும்

பக்கம் வந்து
பாசத்தோடு ஆசை தீர
அள்ளி முத்தமிட்டு
அழுது தீர்த்துவிட
பத்திரம் இல்லாததால்
பரி தவித்து நிற்கின்றேன் நான்.

#ஈழத்துப்பித்தன்
08.02.2017

படம்: யாழ் - கொழும்பு பயணத்தடம், டிசம்பர் 2015

கானா பிரபா அண்ணா யாழ் பயணத்தடத்தின் படம் போட்டு கடுப்பேத்தியதன் விளைவு. Kana Praba :)

July 25, 2016

மண்ணகத்தில் உள்ள மட்டும் மறந்திடுமோ....



பச்சை பசுமை தனைக் காணுகையில் - என்
தாய்நாட்டு நினைவு வந்து
தாலாட்டிச் செல்லுதம்மா
மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி
மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம்
மனத்திரையில் வந்து
மதி மயக்கி நிற்குதம்மா
வேப்ப மர நிழலிலே
பாய் விரித்துப் படுத்த நாட்கள்
பசு மரத்து ஆணி போல
பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா
பள்ளிப் பருவமதில்
பகிடியாய் கடந்த நாட்கள்
பாலர் வகுப்பினிலே
பாட்டி வடை சுட்ட கதை
படித்து பகுத்தறிய மறந்த நாட்கள்
பக்கம் வந்து சீண்டுதம்மா
புளியடிப் பள்ளியிலே
புழுகத்தோடு பயின்ற நாட்கள்
புட்டும் முட்டைப்பொரியலும்
பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள்
புரையேறி நெஞ்சமெங்கும்
புத்துணர்வாய் கிடக்குதம்மா
அம்மன் கோவிலிலே
அழகான விழாநாளில்
ஊர் கூடி இழுத்த தேர் இன்று
ஊர் காவல் படை இழுக்க
உள்ளமெல்லாம் உருக்குலைந்து
உணர்வற்று தவிக்குதம்மா
புலம் பெயர்ந்தோர் வாழ்வு
புகழ் மிக்க வாழ்வு என்று
புகழ்ந்து பேசுவோர் பலரும்
புண்பட்டும் கிடக்கும் எம்
உணர்வுகளை அறிவாரோ?

#ஈழத்துப்பித்தன்
2003 - 2016

படம்: சுவிற்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள பிரெஞ்சு தேசத்துக் கிராமமொன்றில் அதிகாலைப்புலர்வு.

May 31, 2016

அறிவுத் தேடல் அழிக்க முடியாததே



ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலே
உள்ளம் பதை பதைக்கும்
எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்
அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்
ஓலைச்சுவடி முதல்
ஊர்களின் வரலாறும் தொன்மையும்
சொல்லும் அத்தனை நூலும்...
குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரை
எண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்
தென்னாசியாவிலை பெரிய நூலகம்
இதுவெண்டு  எல்லாரும்
புழுகமாச் சொல்லிச் சொல்லி
செருக்குப் படுறவையாம்
கல்வி அறிவிலை உலக அறிவிலை
தமிழன் கொடி கட்டிப் பறக்க
இதுதான் காரணமெண்டதை
எல்லாரும் அறிஞ்சதாலை
எப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்
கல்வி அறிவைச் சிதைச்சால்
கண்டபடி தமிழனாலை வளரேலாது
எண்டு கற்பனை கட்டின சிங்களம்
இரவோடு இரவா வந்து உயிரோடை
கொள்ளி வைச்சுப் போனதாம்
அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தை
அழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரை
அறிவுத் தேடலை அழிக்க முடியாமல்
தோத்தது சிங்களம் எண்டது உண்மையே
எரிஞ்ச அந்தச் சாம்பல் மேட்டிலை இருந்து
இண்டைக்கு உலகமெங்கும்
தமிழன் வாழுற நாடுகளிலை எல்லாம்
புத்தக வெளியீடும் நூலகமும்
வீட்டுக்கு வீடு புத்தக்க் களஞ்சியமுமா
உருவங்கொண்டு எழும்பி நிக்குது
ஆயிரந்தான் கிடந்தாலும்
தமிழன்ரை அறிவுத்தேடல் அழிக்க முடியாததே.

#ஈழத்துப்பித்தன்
31.05.2016

May 23, 2016

விதம் விதமா வாழைமரம்


அழகழகா வாழைமரம்
அடுத்தடுத்து குலை சாய்சிருக்கு
விதம் விதமாய் உருவம் கொண்டு
விரும்பும் சுவையில் பழுத்திருக்கு
மாப் பிடிப்பாய் கப்பல்
மனம் பிடித்த இதரை
தேன் இனிக்கும் கதலி - தின்னத்
தெகிட்டாத செவ்வாழை
வெட்டிப் பொரித்துண்ண
விருந்து சிறக்கும் மொந்தனதால்
இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்
அத்தனையும் தொலைத்தோம்
அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்து
அன்னியமண் வாசம் நுகர்வதனால்...

#ஈழத்துப்பித்தன்
22.05.2016

May 20, 2016

பொய்த்துத்தான் போகாயோ..

பொய்த்துத்தான் போகாயோ
*******************************
சத்தம் இன்றி - பெரும்
யுத்தம் இன்றி
சலசலப்பு ஏதுமின்றி
சிணுங்கி வழிகிறாள்
சிலநாளாய் வானமகள்
முன்பெல்லாம்
அவள் வரவு கண்டு
ஆனந்தித்த பொழுதுகள்
அளவுக்குள் அடக்க முடியாதவை
மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
மமதையிலே திழைத்திருக்கும்
மண் மணம் நாசி ஊடு புகுந்து
மண்ணில் வாழ்ந்த நாளை
மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்

ஊர் போய் வந்த பின்னர்
உறவுகள் நிலை கண்ட பின்னர்
பெய்யெனப் பெய்யும் மழை
பிய்ந்த கூரை வழி வழிந்து
நிறைவில்லா வீடுகளை
நிறைத்து நின்றதனை கண்டதனால்
நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
பொய்த்துத்தான் போகாயோ எனும்
பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...

#ஈழத்துப்பித்தன்
01.02.2016

May 13, 2016

முள்ளிவாய்க்கால் பேரவலம்


முள்ளிவாய்க்கால் பேராவலம்
முடிவில்லா ஓர் அவலம்
பன் நாட்டுப்படை புகுந்து
பல்லாயிரம் உயிர் தின்று
சொல்லாத கதை கோடி
சுமந்து கிடக்கும் மண்ணது
வில்லாண்ட இனம் ஒன்று
வீறுகொண்டு போர் கண்டு
விடுதலைக்காய் வேள்வியொன்றை
விருப்புடனே நடத்தியதையை
கண் காணச் சகிக்காத
காடையர்கள் கூட்டிணைவில்
இனம் ஒன்று அழிந்ததுவே
ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
பலனேதும் கிடைக்காமல்
பரிதவித்து பைத்தியமானோம்
இனப்படுகொலை ஒன்றை
இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
இமை மூட மறந்தோமே
ஆண்டுகள் ஏழு
அனல் இடை கரைந்து
அரவணைக்க ஆரும் இன்றி
அரற்றிக் கிடக்கிறோம் நாம்

எங்கள் இரத்த உறவுகளே!
ஆறாக உங்கள் இரத்தம்
அலை புரண்டு ஓடி
ந்ந்திக் கடல்
செங்கடல் ஆனபோதும்
அகிலம் முழுதும்
பரந்து கிடந்த எம்மால்
எதுவுமே செய்ய
முடியவில்லையே
என்ற குற்ற உணர்வும்
இயலாமையும்
கண்களைக்குளமாக்க
உங்களை இழந்த நினைவுகளோடு....
எங்கள் உரிமையை வென்று
உலக அரங்கில்
எமக்கான நீதியைப்பெற
அணிதிரள்வோம்
அலை அலையாய்....
ஓரணியில்..

#ஈழத்துப்பித்தன்
02.05.2016

May 11, 2016

சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்


மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல் 
உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே
அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு
இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு
கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்
மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று
இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம்.
(படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.)

May 6, 2016

செவ்வண்ணமேனியாள்.


நெஞ்சம் எங்கும்
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில்
நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும்
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும்
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின்
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ
நாதியற்று நிற்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
06.05.2016

April 19, 2016

ஒருநாள் யுத்த நிறுத்தமாம்...

அருவி ஊற்றென
அழுது வடித்தவள்
அடங்கிக் கிடக்கிறாள்
பொருமி வெடித்திட
புழுங்கித் தவிக்கிறாள்
தழுவித் தகித்தவள்
தயங்கி நிற்கிறாள்

ஒற்றைநாள்
ஒருதலைப்பட்ச
யுத்த நிறுத்தமாம்
சத்தம்  இன்றி
சலனம் இன்றி
இப்போதான்
சற்று சிரித்துச்
சிவக்கிறாள்

சிவக்கிறாள்
சிரிக்கிறாள் இவளென
சிந்தை தெளிந்து
சிரிக்க முடியவில்லை
ஒருதலைப்பட்ச
ஒருநாள்
யுத்த நிறுத்தம் தானாம்

யுத்தம் எப்பவும்
சத்தத்தோடு வெடிக்கலாம்
பாதிப்பு முன்னதை விட
பலமாயும் இருக்கலாம்
யுத்த நிறுத்தம்
காலவரையற்று
நீடிக்கவும் படலாம்
எதற்கும் தயாராய்த்தான்
இருப்பை நிலை நிறுத்த
எடுத்தடி வைக்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
19.04.2016

April 1, 2016

உழைப்பு ஒன்றே உயர்வு


குடந்தை நகர வீதியிலே
குளு குளு மார்கழி காலையிலே
குடித்தேன் ஒரு தேநீரை
குடிசை போன்ற கடையினிலே
அமிர்தம் போல இனித்ததுவே
ஆசையோடு பருகினேனே
கறந்த உடன் பசும் பாலும் - என் போல்
கறுத்த நிறத்து தேநீரும்
சமனாய் கலந்து தரும் போதே - சுவை
சம்மணமிட்டு அமர்ந்ததுவே
பழகத் தாய்போல் இருந்தவளின்
பாசம் கலந்து இனித்ததுவே
மீதிப்பணத்தை வைத்திரென
மனம் நிறைந்து நானும் சொல்கையிலே
உழைப்பு ஒன்றே உயர்வென்று - என்
உள்ளங் கையில் வைத்தனளே
மண்ணில் இப்படி சிலர் இருப்பதாலே
மாதமும் மும்மாரி பொழிகிறதே...

#ஈழத்துப்பித்தன்
01.04.2016

குடந்தை = கும்பகோணம்

March 9, 2016

வற்றாப்பளையில் வாழ்கிறாளாம் கண்ணகி...


ஆழிப் பெருந் தாண்டவம்
அயலில் நடந்தேகிய போதும்
ஊழிப் பெருந் தாண்டவம்
உன் முற்றத்திலே நடந்த போதும்
கண் திறந்து பாராமல் 
கண் மூடி கண்ணகியே! 
கண் துயின்று கிடந்தாயே?

பார் ஆண்ட தமிழினம்
பாழ்பட்டு அழிந்தொழிய
பார்த்திருந்து நீயும்
பதிலுக்கு ஏதும் செய்யாமல்
பல்லாயிரம் உயிர் தின்று - உன்
பசி தீர்த்துக் கொண்டாயோ?

நந்திக் கடல் நீரால்
நாளும் உன் விளக்கெரியும்
விளக்கெரியும் தண்ணீரில்
வித்தாக தமிழர் உயிர்
விதைத்தேதான் போனாராம்
வீறுகொண்டு காக்காமல் - உன்
வீதிக்கு காவலுக்கு எம்
கண்ணகியரை கசக்கியெறிந்த
காமுகரை நிறுத்தி வைக்க நினைத்தாயோ?

அள்ளி முடிந்த கொண்டை
அவிழ்த்தெறிந்து - உன்
பிள்ளைக்கறி திண்டோரை
பலியெடுக்க வாராமல்
பட்டுடுத்தி நீ மட்டும்
பத்திரமாய் இருந்தாயோ?

கருணையின் வடிவென்றும் - எமை
காத்திருக்கும் தாய் என்றும்
கண் கலங்கித் தொழுதோரை
கடைசி வரை காத்தருள வாராமல்
கயவர்க்கு அருள் சொரிந்து எமை
காணாது கிடந்தாயோ?

வரலாற்றில் துடைத்தழிக்க முடியா
வடுச்சுமந்து
வற்றாப்பளையில் இன்னமும்
வாழ்கிறாளாம் கண்ணகி...

#ஈழத்துப்பித்தன்
09.03.2016

February 25, 2016

வெள்ளிப்பனி சொரியுது இங்கே

இலவு தெறிச்சு வெடிச்சது போல்
ஈரப் பனி பறக்குது இங்கு
சாளரம் எல்லாம் சாத்திவிட்டு
சாய்ந்திருந்து ரசிக்கையிலே
இன்னல் உற்ற மனசினிலே
இறுகிக் கிடக்கும் சுமைகளெல்லாம்
பட்டுப் பட்டாம் பூச்சிபோல
பறந்தடிச்சு ஓடுது எங்கோ

கிட்டப் போய் தொட்டுப் பாக்க
கெலி கொள்ளும் மனசை
கிலி கொள்ள வைக்குதிங்கு
கிளர்ந்தெளும்பும் குளிரின் குணம்
கொள்ளை அழகுதான் பனி
கொட்டிக் கிடக்கும் அழகு
கொடுமையாய் இருக்குது
கொடுங் குளிரை நினைக்கையிலே

வந்து இங்கு வாழத் தொடங்கி
வருசம் இருபத்தி அஞ்சு
வரலாற்றில் பதிந்த போதும்
இந்த மண்ணில் ஒட்டாப் பனிபோல
இங்கு எங்கள் வாழ்வும் நகருதென்றும்
பிள்ளை பருவ வாழ்வின் சுவட்டை
பிரித்துப் பிரித்து மேய்ந்து பார்த்து
பின்னை காலமும் நகரும் இங்கே...

#ஈழத்துப்பித்தன்
25.02.2016

(எங்கள் வீட்டுச்சாளரமூடாய் தினமும் காணும் காட்சியின் இன்றைய தோற்றமும் சிலமாதங்களுக்கு முன்னைய தோற்றமும், இன்று வெள்ளிப்பனி சொரிகின்றது)

February 18, 2016

போர் கண்ட வம்சமெடி!!!

போர் கண்ட வம்சமெடி!!!
○●○●○●○●○●○●○●○●○●○

நிலமிடை தமிழ் வீரம்
நாட்டிப் பெண்டிர் நின்று
நீண்ட எல்லைகளின் சாமிகளாய்
நிலம் காத்த மண்ணிலிருந்து
நித்தம் வரும் சேதி கேட்க
நீறு பூத்த நெருப்புபோல்
நெஞ்சம் எல்லாம் கனல்கிறது

அங்கையற் கண்ணிகளாய்
அகிலம் முழுதும் அறிய
ஆயுதம் ஏந்தி நின்று
அசர வைத்த எம் குலப்பெண்கள்
அடி ஒற்றி வந்த பிஞ்சுகள்
அநீதியாய் அற்ப சுகத்துக்காய்
அரக்கர்கள் கரங்களில் மாள்வதோ?

பொறுத்தார் பூமி ஆழ்வாராம்
பொங்கினால் பயனேதும் இல்லையாம்
போங்கடா போங்கடா உங்கள்
பொறுப்பற்ற பதில்களைக் கொண்டு
பொங்கி எழும் தருணம் இது
பெண்டிரே குழல் கொண்டு
போர் கண்ட வம்சமெடி நீங்கள்

போகம் நீ என்று வன் புணர வரும்
பேயர் தனை துவம்சம் செய்ய
போர்க் கலை யாவும் கற்று
பெரும் புயலாக நின்றிறெடி
பேதை அல்ல ஈழம் தந்த
பெண்ணவள் என்றுணர்ந்து
பெருமையோடு வாழ்ந்திடெடி.

#ஈழத்துப்பித்தன்
18.02.2016

February 12, 2016

வாழுகின்ற வல்லமையை வரமாகத் தந்தவர்கள்.

வாழுகின்ற வல்லமையை
வரமாகத் தந்தவர்கள்
மனம் அழும் கணங்களில்
மருந்தாக இருப்பவர்கள்
நோய் பிடித்த உடலம்போல்
நொய்ந்து போகும் தருணங்களில்
நாம் இருக்கிறோம் என
நலம் பாடும் நெஞ்சங்கள்
வாழ்வு இனிக்க வைப்பவர்கள்
வரமாக வந்தவர்கள்
தேன் தந்த சொந்தங்கள்
தெகிட்டாத இன்பங்கள்

#ஈழத்துப்பித்தன்
02.06.2014 - 11.02.2016

February 7, 2016

எதிர்பாராப் பயணம் அது எதிர்கொண்டு வந்துவிட்டேன்


முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த
முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன்
இறங்கி நின்று படமெடுக்க - என்
இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை

விசுமடு தாண்டிப் போக நான் தொழுத
வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்
வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க
விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்

ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே
அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட
ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை
ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்

வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச
மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட
வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து
வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் - தமிழ்
வரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்
எதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்
இனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது

வீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாறை
விடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த
வித்துக்களின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

#ஈழத்துப்பித்தன்
07.02.2016

(படம்: வட்டு வாக்கால் பாலம். யுத்தத்தின் இறுதி மையப்புள்ளியாகச் சொல்லப்படும் இடம். இந்த நீரேரி இறுதி நேரத்தில் உடலங்கள் நிறைந்து செந்திறத்தில் ஓடியதாம். இறங்கி நின்று பார்க்க மனத்துணிவு இல்லாத்தால் வாகனத்தினுள் இருந்து எடுத்த படம்)

February 6, 2016

இளைஞர்களின் கனவே!!!

இளைஞர்களின் கனவே!!!
****************************
விடிகாலை சூரியனின்
விழி தெறித்த மலர் இதுவோ?
செங்காந்தள் மலர் போல
சிறகடிக்கும் விரல் இதுவோ?
சொக்கத்தான் வைத்திடும்
சொர்ப்பனம்தான் இதுவோ?
குலையாத அழகொழிரும்
குமர் இதுவோ?
கலையாத கூந்தலின்
கயல் இதுவோ?
தலை காட்டி நமை ஈர்க்கும்
தளிர் இதுவோ?
நிலை இல்லா வாழ்வினில்
நிலவு இதுவோ?
மலை போல மறைத்து நிற்கும்
மயில் இதுவோ?
பட்டாடை கட்டி வந்த
பவித்திரமும் இதுவோ?
பாரினில் எனை ஈர்த்த
பாவையும் இதுவோ?

இனி வரும் நாளில்
இளைஞர்களின்
கனவு இதுவே!!!

#ஈழத்துப்பித்தன்
03.02.2016

பட உபயம்: Kailase Kanagaratnam
எழுத தூண்டியவர்: Jeyarajan Rajan

February 4, 2016

(சு)தந்திர நாள்

(சு)தந்திரநாள்
*****************
இன்று சுதந்திர நாளாம்
சொல்லவும் கேட்கவும்
எவ்வளவு இனிக்கிறது

ஒரே நாடு
ஒரே தேசம்
கேட்க கேட்க
காதினிக்கிறது.

இந்தச் சுதந்திர
ஒரே தேசத்தின்
ஒரு தாய் மக்கள்தானாம்
நாம் எல்லாம்
எவ்வளவு இதமாயிருக்கிறது

என் தாத்தன் முதுகில்
சிங்களச் சிறி
சீராய் பதிந்ததும்
என் தந்தையின் கல்வி
தரப்படுத்தலுக்குள்
தாழ்ந்து போனதும்
நான்
புலம் பெயர்ந்து
புலன் இழந்ததும்
என் பிள்ளை
இன்னோர் நாட்டின்
சுதந்திர அடிமையாய் ஆனதும்
அவன் பிள்ளை
தான் யாரென்றே தெரியாத
இனமொன்றின் வாரிசு ஆவதும்

இந்தச்
(சு)தந்திர நாட்டின்
மக்களாய் பிறந்ததால்தானாம்

சுதந்திரம்
கேட்கவே காதினிக்கிறது.

சுதந்திரம்
சொல்லச் சொல்ல
நா இனிக்கிறது

#ஈழத்துப்பித்தன்
04.02.2016


July 3, 2015

 பெரு மஞ்சம் ஏறி வரும் நாயகனே


அற்புதங்கள் இலங்குகின்ற இணுவையிலே
அருளாட்சி செய்கின்ற அரும்பொருளே!
பொற்பதம் தேடி வரும் அடியவரை - உன்
புன்னகையால் கட்டி வைக்கும் பேரரசே!
பெரு மஞ்சம் ஏறி வரும் நாயகனே - உன்
பெயர் சொல்லும் உலகெங்கும் தமிழினமே
வரலாறாய் வாழ்கின்ற வல்லமையே! - எம்
வாழ்விற்கு வழியான வடிவேலவனே!
ஊர் துறந்து வாழுகின்றோம்
உனை காணாது ஏங்குகின்றோம்.
பேர் அருள் புரியும் பெருமகனே!
ஊர் காணும் உன் விழாக் காண
அருள் தாரும் ஐயா!

July 3, 2014

என்ன தவறு நான் இழைத்தேன்
























குடமுழுக்கு காணுகின்ற இணுவைக் கந்தா
மனம் முழுக்க உன் நினைப்பில் தவிக்கிறேன் நான்
காட்சிகள் ஒவ்வொன்றும் கணனித் திரை முன்னே
சாட்சியாய் விரிகையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு
மஞ்சமதில் ஏறிவரும் மால் மருகா
நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கும் பேரழகா
என்ன தவறு நான் இழைத்தேன்;
எழிலோடு உருவான உன் கோவில் படி ஏறி
கும்ப நீரில் நீ குளிக்கும் கோலம்
கண்ணாரக் காணுகின்ற பேறிழந்து
கண்ணீர் மல்கி நிற்கின்றேன் நாம்.
தொலை தூரம் வாழ்வதனால்
தொலைந்ததுவே எல்லாம்
கடல் கடந்து வாழ்ந்தாலும்
கந்தா உனை மறவேன் - உங்கு
வந்து விடும் வரம் எனக்களித்தால்
வாசல் தேடி வந்து கும்ப விழா கண்டிடுவேன்.