ஈழத்தின் போர்க்காலத்தில் இடைக்காட்டிலிருந்து பல குடும்பங்கள் எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்து வந்தார்கள். அப்படி வந்த குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பலர் எங்களுடன் எங்கள் பள்ளிகளில் இணைந்து படிக்கத் தொடங்கினார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவன்தான் கங்கா.
அமைதியான சுபாவமும், அதிர்வில்லா பேச்சும், புதிய முகமும் ஆரம்பத்தில் அவனை எங்களிடமிருந்து சற்றுத் தள்ளியே வைத்திருந்தன.
பழகப் பழக எங்களில் ஒருவனாக மாறிப் போனான். சாரணியம் பற்றி நாங்கள் அறிந்திருந்தாலும், யுத்தகாலம் என்பதால் அது வடக்கின் அனைத்துப் பாடசாலைகளையும் சரியாக வந்தடையவில்லை. எங்கள் பாடசாலையில் ஒருமுறை சாரண இயக்கம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது; ஆனால் அது ஏனோ பின்னர் தொடரவில்லை.
கங்கா ஏற்கனவே தனது பழைய பாடசாலையில் தன்னைச் சாரணியத்தில் இணைத்திருந்தான். அதைப்பற்றி அறிய எங்களுக்கு ஆர்வம் அதிகம். கதை கதையாகச் சொல்லுவான். சில நேரங்களில் மதில் பாய்ந்து, மரமேறி பயிற்சிகள் செய்ததாகக் கதைகளும் விடுவான். மற்றவர்களைப் பொறுத்தவரை அமைதியானவன் என்ற கங்கா, எங்கள் வட்டத்தில் கலகலப்பான பெடியனாக இருந்தான்.
தொடர்ந்த யுத்தகாலம் என்னை சுவிட்சர்லாந்துக்கும், அவனைப் போராட்டக் களத்துக்கும் அனுப்பியது. ஊருக்குச் சென்றபோது அவனைப்பற்றி ஏனைய நண்பர்களிடம் விசாரித்தேன். “அவன் வன்னியில்” என்ற பதிலே கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன் ஒரு பேஸ்புக் பதிவின் கருத்துப் பகுதியில், ஒரு போராளி “கங்கா” என்ற பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவன் நினைவு வர, அந்தப் போராளியிடம் “யார் அந்த கங்கா?” என்று விசாரித்தேன். அவர் ஒரு படத்தை அனுப்பி வைத்தார். என் கண்கள் பனித்துப் போனது.
ஆம்… அதே கங்காதான்.
5.1.2008 அன்று, மன்னார் பள்ளமடுவில், சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில்,
“காவலன்” என்ற பெயரில்
வீரகாவியமானான்
என்ற செய்தியோடு…
#இணுவையூர்_மயூரன்

No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.