Pages

April 11, 2016

சத்திய சோதனை



மிகச் சிறு வயது முதல் நான் வாசிக்க விரும்பிய நூல் சத்திய சோதனை.

சிறு வயது முதல் எங்கள் ஊரின் அண்ணா கோப்பி அல்லது  மில்க்வைற்றினதோ கலண்டரில் சரியாக நினைவில்லை, அதில்தான் முதன் முதலாக காந்தியின் படத்தைப் பார்த்து மனதுக்குள் பதிந்தார் காந்தி. அதே காந்தி பள்ளிக் காலத்தில் வில்லனானார் கட்டுரைப் போட்டிகளுக்காய் அவர் பற்றிய விபரங்களை மனனம் செய்ய வேண்டி வந்த போது.

அதுக்கு பின் தியாகி. திலீபன் உண்ணா நோன்பிருந்த போது "காந்தியத்தின் சிகாமே உனது இரத்த வேள்விக்கு நன்றி"  அப்படியென எழுதப்பட்ட பிரசுரங்களினூடாகவும் காந்தி கூட ஆட்டுப்பால் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்தார் திலீபா நீ நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கிறாயே என்ற கோசங்களூடாகவும் காந்தி மீண்டும் அறிமுகமானார்.

இந்தியா எம் தேசம் மீது தொடுத்த போரின் வலியையும் வடுக்களையும் நினைவு தெரிய ஆரம்பித்த அந்த வயதிலேயே கண்ணால் காண நேர்ந்ததாலும் ராஜீவின் பேருக்குப் பின்னால் காந்தியிருந்ததால் இவையெல்லாம் கூட்டுக் களவாணியள் என்ற கருத்தியல் மனதில் ஆழமாய் வேரூன்றிப் போய்விட்டது.

அதன் பின் இந்திய விடுதலைப் போர் சுபாஸ் சந்திரபோஸ் பற்றி அறிந்தபோது விடுதலைக்காய் நாமும் போராடும் இனமானதால் சுபாஸ் சந்திரபோஸ் மீது இனம்புரியாத பிடிப்பு ஏற்பட்டுப்போனது.

இருந்தபோதும் காந்தியின் சத்திய சோதனையை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை அதற்கு எனது சுவிற்சர்லாந்திலான கல்விக்காலத்தில் பிரபலங்களின் சுயசரிதைகள் எனும் பாடமூடாக உலகில் உண்மையை மறைக்காமல் தனது சுயசரிதையை எழுதியவர் காந்தி என்ற கூடுதல் தகவல் கிடைத்ததாலும் அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிவதில் ஆர்வம்கொண்ட தமிழருக்கே உரிய தனித்துவமும் காரணமாகிப் போனது.

பல தடவைகள் எனது புத்தகக் கொள்வனவுகளின் போதும் சத்திய சோதனை நூலை பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது அது எனக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது. அனைத்துப் புத்தகசாலைகளிலும் விற்றுத்தீர்ந்துவிட்டது என்ற ஒரே பதிலே கிடைத்தது.

சரி கிடைக்கும் போது வாசிப்போம் என விட்டாச்சு. கடந்த தமிழகப் பயணத்தின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற புத்தக்க்கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கிடந்த போதும் சத்திய சோதனை சோதனையாகவே இருந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இறுதிக்கட்டக் கொள்வனவுக்காக தி.நகர் போயிருந்தேன். அங்கேயுள்ள ஒரு இசைப்பேழை விற்பனை நிலையத்தில் ஒலித்துக்கொண்டிருந்த மகாநதி சோபனாவின் குரல் உள்ளே இழுத்தது.

 சில இசைப்பேழைகளை கொள்வனவு செய்துகொண்டு நிமிர்ந்தபோது மகாத்மா காந்தி பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார். எட்டித் தூக்கிய போது மகிழ்வும் ஒரு வித ஏமாற்றமும் மிஞ்சியது. நீண்ட பல காலமாக தேடிய நூல் எதேட்சையாக கிடைத்த போதும் அதுவும் முதல் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் வடுச் சுமந்து நின்றது. ஆம் நூல் சற்று தண்ணீரில் நனைந்திருந்தது ஆனாலும் உருக்குலையவில்லை. வேறு பிரதி உள்ளதா எனக் கேட்ட போது இப் பதிப்பு விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும் இதுவே இறுதி நூல் எனும் பதிலை கிடைத்தது. விலையை விசாரித்தேன் வெறும் நாற்பது ரூபாய் சரி என்று வாங்கி வந்தாச்சு. பயண வழியில் காந்தியும் கூட வருவார் என எண்ணியிருந்தேன். ஆனால் அதுவும் திசை மாறியது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் அந்த நூல் இருந்த கைபையை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டியதாய்ப் போய்விட்டது. மீண்டும் சத்திய சோதனை சோதனை ஆனது.

இப்படி இடையூறுகளுக்கு உள்ளாக்கி கண்கட்டி வித்தை காட்டிய சத்திய சோதனை ஒருவாறு பொதியூடாக கரம் வந்து சேர்ந்தடைந்துள்ளது.

காந்தி உண்மை சொல்லித்தான் இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு பிரித்து மேயத் தொடங்குகிறேன்....

1 comment:

தனிமரம் said...

வாசித்த பின் இவர் இப்படியா என்று காலம் தாழ்த்தி மனதை தேற்றினால் நீங்களும் சாமானியன் சார்! வாசியுங்க .விரும்பினால் இன்னும் வாசிக்க நூல்பட்டியல் தர ஆசையுடன் சாமானியன்[[[

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.