Pages

April 13, 2020

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு

இன்று மாலை ஐரோப்பிய நேரம் 15.56க்கும் இலங்கை இந்திய நேரம் 19.26க்கும் வீறியெழல் (சார்வரி) ஆண்டு பிறக்கின்றது.

தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லப்படும் இந்த சித்திரைப்புத்தாண்டானது சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது. பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் சித்திரை மாதமே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தமைக்கு பல சான்றுகள்  எச்சங்களாக உள்ளது.

குறிப்பாக 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர் கூட ஏப்ரல் முதலாந் திகதியைதான் புத்தாண்டாகக் கொண்டாடி வந்துள்ளார்கள்.

1562 ம் ஆண்டளவில் அன்றைய போப்பாண்டவர் கிரகரி  பழைய ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகரியன் முறையை நடைமுறைப்படுத்தினார். அதன் படி ஜனவரி 1 புத்தாண்டு நாளாக மாற்றம் பெற்றது.

எனினும் இந்தப் புதிய புத்தாண்டு நாளை ஐரோப்பிய தேயங்களும், அவற்றின் மக்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் பல காலம் ஆனது. பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு நாளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

இந்த புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதலாந்திகதி புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முதலாந்திகதி முட்டாள்கள் நாள் என மாற்றம்பெற்றதாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

முட்டாள்கள் என்ற பழிப்புக்கு ஆளாகாமல் இருக்க உலக மக்கள் ஜனவரி முதலாந்திகதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டார்கள்.

இன்றும் இலங்கை, தமிழ்நாடு, மலேசிய தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள், மொறீசியஸ் தமிழர்கள். கம்போடியர்கள், தாய்லாந்து நாட்டவர்கள், பர்மா, வியட்நாமியர்கள் சித்திரை முதல்நாளைதான் தமது புத்தாண்டுநாளாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நாடுகள் பல்லவ/சோழ அரசுகளின் ஆளுகைக்குள்ளோ ஆட்சிக்குள்ளோ உட்பட்டிருந்த தேயங்களாகும்.

புத்தாண்டு பற்றிய கதைகள் பல இடைச்செருகல்களாக வந்து போனாலும் தமிழர்களும் ஏன் உலகமக்களும் பன்னெடுங்காலமாக சித்திரை/ஏப்ரல் முதல்நாளையே தமது புத்தாண்டாக கொண்டாடி வந்துள்ளார்கள்.

கடிகாரத்தின் இரண்டு முட்களும் இணையும் நள்ளிரவு 12 மணியை நாளின் துவக்கமாகக் கொள்வதுபோல் 5122 ஆண்டுகளுக்கு முன் சூரியனும் பிற கிரகங்களும் நேர்கோட்டில் வந்த காலத்தில் துவங்கியது மேட ராசி வரும் சித்திரை ஆண்டுக்கணக்கு.

சூரியனின் சுழற்சியை (360 பாகை) ஆட்டை வட்டம் என்பார்கள். இந்த வட்டம் எந்த இடத்தில் எந்த மாதத்தில் ஆரம்பிக்கிறது என்பதுதான் இங்கு முக்கியம்.

சூரியனின் சுழற்சியில் முதலில் வருவது மேட ராசி வரும் சித்திரை என்கிறது தமிழ் இலக்கியம்.

இந்த மேட வருடை என்பது ஒரு மலை ஆட்டின் பெயர்.

பரிபாடல் 11-
 ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்கிறது.

இதன் பொருள்: வருடை என்னும் மேட ராசியில் சூரியன் நுழைகிறது.

மேட ராசி என்பது சித்திரை மாதத்தில் வரும் ராசி.

இதனை நெடுநல்வாடை வரி 160-161 மேலும் தெளிவாக சொல்கிறது:  

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து “

இதன் பொருள். ஆட்டினைத் தலைமையாகக்கொண்டு சூரியன் விண்ணைச்சுற்றி வருகிறான் என்று.

இந்த வருடை ஆடு என்பது மலை ஆடு.

இதையொட்டியே  ஆண்டின் காலம் வருடம் என அழைக்கப்படுகிறது.

தமிழக அரசின் மாநில விலங்கு வருடை ஆடு, அந்த ஆடு இதனைத்தான் குறிக்கின்றது.

பண்டைய நாகரீகங்களையும் வரலாற்று தொன்மங்களையும் காவி வருபவர்கள் தமிழர்களே ஆதலால் தமிழர் புத்தாண்டு சித்திரை ஒன்றுதான்.

கொண்டாட்டங்கள் மனதுக்கு மகிழ்வை தருபவை. இந்த இடர்காலத்தில் கொண்டாடி மகிழ்ந்து மனம் கனக்கும் துன்பங்களுக்கு விடை கொடுப்போம்.

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு  (நல்வாழ்த்துகள்.  (5122 ம் ஆண்டு)

தொகுப்பு
#இணுவையூர்_மயூரன்

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.