Pages

July 2, 2025

செம்மணியில் கண்மணிகள்

 “என்ரை ஐயோ”

என்று கத்திக் குழறவேண்டும் 

என்ற மன நிலை

என் இதயத்தின் தொலைவான மூலைவெளிகளில்

ஒரு கனமான மழையைப் போல் கொட்டிக்கொள்கிறது.


செய்ய ஒன்றுமில்லாத

கையறு நிலையிலிருப்பதற்கான உணர்வு,

தீண்ட முடியாத வெப்பமாக

வெதும்பி எழுகிறது 

வெறுமையான ஒரு மூச்சாகவே.


இயலாமையின் கடைசி எல்லையில்,

ஒரு விழிவிட்டு வரும் கண்ணீர் கூட

வழி தெரியாமல் தேங்கி

இதயத்தின் ஓரத்தில் தங்கிக்கொள்கிறது.


பிஞ்சு குழந்தைகள்,

பிணந்தின்னிகளின் வாய்களில் சிக்கி,

சிதறி சிதைந்தனர் –

மீதமிருப்பது

சில எலும்புகள் மட்டுமே – சாட்சிகளாக.


அந்த இறுதி நொடியிலே –

அவர்கள் சிந்தையில் என்ன இருந்திருக்கக்கூடும்?


ஒரு சிறுமி,

அம்மாவின் குரலைத் தேடி,

தன்னை அடித்தவனின் காலையே

ஆதரவெனப் பற்றியிருப்பாளா?


இன்னொரு சிறுவன்,

நிலவைக் கண்டபோது,

“என் வீடு எங்கே?” என

மனதுள் கேட்டுக்கொண்டிருப்பானா?


அல்லது 

அவனே அறியாமல்,

ஒரே ஒரு கணத்தில் உணர்ந்திருப்பானா

இது தான்

தன் வாழ்வின் கடைசி வலி என்று?


#ஈழத்துப்பித்தன்

02.07.2025

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.