Pages

July 7, 2025

திருச்செந்தூர்

இன்று திருச்செந்தூர் முருகனுக்கு குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா.

திருச்செந்தூர் முருகன் தமிழ் நாட்டு எல்லைக்குள் இருந்தாலும். ஈழத்தமிழருடன்தான் நெருக்கம் அதிகமானவர். 

ஈழத்தில்தான் செந்தூரன், திருச்செந்தூர்நாதன், செந்தூர் என்ற பெயர்களை அதிகம் காணமுடியும். 

சிறுவயதில் இருந்து கடலோரம் குடிகொண்ட திருச்செந்தூர் மீது ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு. முதலாவது இந்தியப் பயணத்தின்போது திருச்செந்தூர் பயணம் திட்டமிட்டும் செல்ல முடியவில்லை. இரண்டாவது தடவை குடும்பமாகச் சென்று ஆறுபடை வீடுகளின் தரிசனத்துக்கு திட்டமிட்டிருந்தேன். அந்தப் பயணத்தில் ஆறு படைவீடுகளின் தரிசனமும் சாத்தியமானது. எட்டு ஆண்டுகளுக்கு முன் அதுவும் இதே வாரத்தில்.

ஒரு மாலை வேளை திருச் செந்தூர் கோவிலைச் சென்றடைகின்றோம். சுற்றி வந்து கோவிலுக்குள் உள் நுழைய வழி தெரியாது நிற்கின்றோம். மஞ்சள் வேட்டி, இடுப்பில் பச்சை சால்வை கழுத்தில் ஒற்றை உருத்திராட்ச கயிறு பூநூல் அணிந்த ஒருவர் தன் பெயர் மயூரன் என்று சொல்லி அறிமுகமாகின்றார். ஆச்சரியமாக இருந்தது. தமிழ்நாட்டில் மயூரன் என்ற பெயர் இருப்பதில்லை.

அவராகவே வந்து் கோவிலின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிக்காட்டினார். கிடைத்தற்கரிய பஞ்சலிங்க தரிசனம் உட்பட, செந்தில் ஆண்டவரை அருகில் அழைத்துச் சென்று தரிசிக்கவைத்ததோடு, செந்தில் ஆண்டவருக்கு சந்தனக்காப்புச் செய்யப்பட்ட சந்தனத்தையும் கை நிறைய அள்ளித்தந்து வழியனுப்பி வைத்தார். இவ்வளவு தூரம் எங்களோடு தன்பொழுதைச் செலவு செய்தவருக்கு சிறுதொகைப் பணத்தை கொடுக்க கரங்களை நீட்ட உண்டியலைக்காட்டி அங்கே போட்டுச் செல்லுமாறு கூறிச் சென்றுவிட்டார். எனக்கென்னவோ அந்த திருச்செந்தூரானே நேரில் வந்து வரவேற்று தன் கோவிலைச் சுற்றிக் காட்டி அனுப்பிய உணர்வு. 

அதே போல் கடந்த ஆண்டும் இதே மாதம் திருச்செந்தூர் செல்லும் வரம் கிட்டியது. மாலையிலே சென்று கடலில் நீராடி இரவு அங்கேயே தங்கி அதிகாலைத் தரிசனம் செய்து வரும் வாய்புக்கிடைத்தது.

அதிகாலை 6:00 மணித் தரிசனத்துக்காக காலை 4:30 மணியளவில்  சென்றுவிட்டோம். சிறப்புத்தரிசன வழியைத் தெரிவு செய்யாமல் சாதாரண வழியை தெரிவு செய்திருந்தோம். கருவறையை நாம் எட்டும்போது திரைச் சீலை மூடப்பட்டு வழிபாட்டு நேரம் முடிவடைகின்றது. காத்திருக்கும் அனைவரையும் அங்கிருக்கும் காவலாளிகள் விரட்டுகின்றார்கள். என் முன் காத்திருந்த எல்லோரும் சென்றுவிட்டார்கள். இவ்வளவு தூரம் இருந்து வந்த என்னை உன்னை பார்க்கவிடாது தடுக்கிறாயே முருகா என நினைத்துக்கொண்டு, நான் தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டேன் என்றேன். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் காவலாளிகள் நிற்க அனுமதி தந்தார்கள்.

சிறுது நேரத்தில் மீண்டும் திரை விலகி தீபாராதனையுடன் முன் நின்று முருகனை தரிசிக்கும் வரம் கிடைத்தது. சாதாரணமாக கடந்திருக்க வேண்டிய எனக்கு தீபாராதடையுடன் காட்சி தர முருகன் நினைத்தானோ என எண்ணிக்கொண்டு வெளியே வர காலை உணவுக்கான அன்னதானத்துக்கு வருமாறு ஒருவர் அழைக்கின்றார். அமைதியாக அமர்ந்து அந்த காலைப்பொழுதில் வழங்கப்பட்ட தமிழ்நாட்டுப் பொங்கலையும் சாம்பாரையும் சுவைத்தபொழுது “என் வீட்டுக்கு வந்த உனக்கு விருந்தளித்து அனுப்புகிறேன்” என்று முருகன் சொன்னது போன்ற உணர்வு மனம் முழுதும் நிறைந்தது. 

#இணுவையூர்_மயூரன் 

#திருச்செந்தூர் #தமிழ்நாடு #india #viralchallenge


No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.