Pages

November 20, 2025

பிராம்ப்டன் நகரம் தமிழ் ஈழ தேசியக் கொடியை அங்கீகரிப்பு



பிராம்ப்டன் நகரம் தமிழ் ஈழ தேசியக் கொடியை அங்கீகரிப்பு: தமிழர்களுக்கு ஒரு சிறு ஒத்தடம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரம், தமிழ் ஈழ தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. கலாச்சார மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, உள்ளூர் தமிழ் சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம், அரசியல் ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு தீர்மானமாக இல்லையெனினும், நீண்ட காலமாக துன்பங்களையும் துயரங்களையும் மனச்சோர்வையும் இயலாமையையும் அனுபவித்த தமிழர்களுக்கு ஒரு மனப்பூர்வமான ஆதரவாகக் கருதப்படுகிறது. உலகத் தமிழரின் சமூக, பண்பாட்டு அடையாளத்துக்கு மதிப்பளிக்கப்படும் ஒரு சிறிய படியாக பலர் இதைப் பார்க்கின்றனர்.

உள்ளூர் தமிழ் சமூகங்கள், தங்கள் வரலாற்று நினைவுகளும் துயர அனுபவங்களும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தங்கள் சமூகத்தின் குரல் கேட்கப்படுகிறதென்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.

பிராம்ப்டனில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு இது ஒரு முக்கியமான குறியீட்டு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இணுவையூர் மயூரன் 
20.11.2025

#தமிழ் #தமிழீழம் #தமிழர்கள்அடையாளம் #TamilEelam #Brampton #TamilCommunity #CulturalRecognition
#தமிழர்பெருமை #தமிழ்புலம்பெயர் #EelamTamils #news #செய்தி #Canada #Brampton #BramptonCity
#CanadaTamils #TamilDiaspora்#TamilCommunity
#TamilEelam #தமிழீழம் #தமிழர்கள் #EelamTamils
#TamilIdentity #CulturalRecognition #TamilPride #TamilHistory #TamilRights #TamilInCanada

November 16, 2025

புத்தனின் ஆசை


 அசைவற்ற ஆசையை சொல்லி

அவா நீக்கப் போதித்தவர் - அவர் வழி

அந்த மார்க்கம் ஏந்தியவர்கள் இன்று

மண் ஆசை மாயையில் மிதக்கின்றனர்.


துறவின் தொண்டை தாங்கி வந்த கைகள்

தரையைத் தழுவி எதற்கோ ஏங்க,

அதே புத்தனின் பெயரைச் கொண்டு

ஆக்கிரமிப்பின் வழி அடியெடுத்து நிற்கின்றனர்


தியாகத்தின் தீபம் ஏற்ற வேண்டியோர்

தம் கொள்கைக்கே தீ வைத்ததுபோல்,

போதனையின் புனிதத்தை மறந்து

பொய்யான பேராசையில் கலந்து போகின்றனர்.


#ஈழத்துப்பித்தன்

16.11.2025


படம்: எங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள புத்தரின் ஓவியம்.

“புத்தரைத் தமிழர்கள் யாரும் வெறுப்பதில்லை;

புத்தரின் பெயரும் சின்னமும் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தப்படும்போதே அதற்கு எதிர்ப்புத் தோன்றுகிறது.”


#புத்தர்சிலை #திருகோணமலை #buddha #BreakingNews

November 15, 2025

சுவிஸ்ஸில் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்படும் வாடகை குடைகள் இருப்பது தெரியுமா?

 

நான் இன்று Kiosk-ல் பார்த்த ஒரு விடயம் எனக்கு பிடித்தது…” 

சுவிஸ் நாட்டில் உள்ள பல “Kiosk” கடைகளில் இத்தகைய வாடகைக் குடைகளை காணலாம்.

இவை வாடகைக்கு வழங்கப்படும் குடைகள்.

ஒரு சிறிய முற்பணமும் வாடகைக் கட்டணமும் செலுத்தி குடையை எடுத்துச் செல்லலாம். பின்னர், இதே முறையில் வாடகை வழங்கும் எந்தக் கடையிலும் குடையை திருப்பிக் கொடுத்து, நீங்கள் செலுத்திய முற்பணத்தை மீண்டும் பெறலாம்.

இந்தக் குடையின் சிறப்பு என்னவென்றால், இது மீள்சுழற்சி செய்யப்பட்ட நெகிழி போத்தல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடை தயாரிக்க நான்கு PET போத்தல்கள் பயன்படுத்தப்படுகிறதாம். பிளாஸ்டிக் பயன்பாடு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் இயங்குகிறது.

இந்த மாதிரி வாடகை முறை வேறு நாட்டிலும் உள்ளதா ?


— இணுவையூர் மயூரன்

#plastik #schirm #umbrella #recycling #followersreelsfypシ゚viralシ #viralシalシ  #Switzerland #Recycling #EcoFriendly #Umbrella #PlasticFree #Sustainability #தமிழ் #Environment #GreenLiving #Kiosk #PET #Reelsதமிழர் #TamilBlog

November 11, 2025

தேநீர்

தேநீர் பிரியனான எனக்கு “நாட்டில் இருந்து கொண்டு வந்தேன் குடித்துப்பார்” என எத்தியோப்பிய நாட்டுத் தோழி கடந்த கோடை விடுமுறையின் பின் ஒரு வகையான தேயிலையை கொண்டு வந்து தந்திருந்தாள்.

அதை மறந்தே போனேன். இன்றுதான் அதனை சுவைத்துப் பார்க்க நாள் கூடியது.

பொதியை திறந்தபோதே கதம்பமான வாசனை நாசியை நிறைத்தது. சுடுநீரில் ஏழு முதல் பத்து நிமிடம் வரை ஊற வைத்து அருந்துமாறு வழிகாட்டி சொன்னது. அதன் படி தேநீரை தயாரித்தேன். 

அந்தத் தேயிலை செந்நாரைக்கனிகள் (Rosehip), செவ்வரத்தம்பூ, அப்பிள், தோடம்பழத்தோல், இளஞ்சிப்பூண்டு (லெமன் கிறஸ்), பீற்றூட், சூரியகாந்தி இதழ்கள், செம்புற்றுச்செடியின்இலை, பூனைக்கால்மலர், கருந்தேணி/செந்தேணி இலைகள், புதினா இலைகள், நீலத்தாமரை மலர்கள் போன்ற பல விதமான பொருட்களை உலர்த்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனீ சேர்க்காது கண்ணாடிக் கோப்பையில் தேநீரின் வாசனையை நுகர்ந்து வர்ணத்தை ரசித்து சுவைக்கவே எனக்குப் பிடிக்கும். 

இந்தத் தேநீரையும் அப்படித்தான் சுவைத்தேன். மிதமில்லாத புளிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு வித சுவை. குடித்து முடித்த பொழுது ஒரு புத்துணர்சசி ஒட்டிக்கொண்டது.

#இணுவையூர்_மயூரன்

11.11.2025


#tea #நேநீர் #tee #followersreelsfypシ゚viralシfypシ゚viralシalシ #evning

November 8, 2025

மாற்றுத்திறன்

 

2003ம் ஆண்டு வன்னியை மையமாக கொண்டு தமிழர்களுக்கான ஒரு நிழல் அரசு நடந்துகொண்டிருந்த காலம்.

அந்த மண்ணிலே பல இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தாய் தந்தையை இழந்த பிள்ளைகள், விழிக்கட்புலன், செவிக்கட்புலன், பேச்சுத்திறன், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான இல்லங்கள் இருந்தன. இதில் பெரும்பாண்மையான இல்லங்களுக்கு நான் நேரடியாகவே சென்றிருந்தேன்.

இந்த இல்லங்கள் எவற்றிலுமே சாதாரணமாக அன்று எம்மிடம் பேச்சு வழக்கில் இருந்த அனாதை, ஊமை, செவிடன், குருடன், வலதுகுறைந்தோர் என்ற சொற்பதங்களை பேச்சிலும் எழுத்திலும் நான் காணவில்லை. ஏன் அங்கு வாழ்ந்த மக்களிடமே அது பெருமாற்றத்தை கொண்டுவந்திருந்தது.

இவை அனைத்திலும் மனிதர்களை அவர்களின் குறைவால் அல்ல, அவர்களின் மனிதப்பண்பால் அடையாளப்படுத்தும் மொழி மாற்றம் ஏற்பட்டது.

அது ஒரு சாதாரண மாற்றமல்ல மரியாதை, கண்ணியம், மனித நிலையுணர்வு, மொழி விழிப்புணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடு.

தமிழ்நாட்டில் கூட இன்றுவரை அனாதை இல்லங்கள் என்றே இருக்கின்றன. அங்கு அன்றேஆதரவற்றோர், வலது குறைந்தோர் என்ற சொல்லுக்கு பதிலாக அவர்களின்்விழிக்கட்புலன், செவிக்கட்புலன், பேச்சுத்திறன், வலுவிழந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற சொற்பதங்களே சாதாரண மக்கள் வரை பயன்பாட்டில் இருந்து. 

ஒருவரின் குறை அவரின் அடையாளம் அல்ல என்று கற்றுக்கொடுக்கப்பட்டது. மொழி என்பது நெறி என்பதை அவர்கள் நடைமுறையாகச் செய்தனர்.

“மாற்றுத்திறன்” என்ற சொல் அங்கிருந்தே பொதுவாகப் பரவியது.

அந்த பகுதிக்குள் வாழ்ந்ததாக கூறும், இன்று இடதுசாரிய அரசியலின் ஆட்சியில் ஒரு அங்கமாக தன்னை நிலைநிறுத்தி்நிற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பள்ளி ஆசிரியராக பாடசாலை அதிபராக பல ஆண்டுகள் கடமையாற்றியவர், மொழிப்பயன்பாட்டில் நிச்சயம் முன்னோடியாக இருக்க வேண்டியவர். இருக்க வேண்டும்.


இணுவையூர் மயூரன்

08.11.2025

November 7, 2025

“ரீவிக்காரன் நல்ல யாவாரிதான்! -விடுப்பு_சுப்பர்

ரீவிக்காரன் -விடுப்பு சுப்பர்

சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் தமிழகத்தின் முன்னணித் தொலைக்காட்சியொன்று நவம்பர் 27 ந் திகதி ஒரு பிரமாண்ட நிகழ்வை சிங்கப்பூரில் செய்யவுள்ளதாக அறிவித்தல்விடுத்தது.  அறிவித்தல் வந்த நொடி முதல் சமூகவலைத்தலங்களில் அந்த அறிவித்தலை பகிர்ந்து எதிர்ப்பலை பெருமளவில் கிழம்பியது. கிட்டத்தட்ட இரண்டு வாரம் அந்த எதிர்ப்பு தொடர்ந்துகொண்டிருந்தது.

இரண்டு வாரங்களுக்கு பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நிகழ்வை டிசம்பர் மாதத்துக்கு  பின்நகர்த்துவதாக அறிக்கையொன்றை வெளியிட்டது.

அறிக்கை வந்த மறுநொடியே எதிர்த்தவர்கள் எதிர்காதவர்கள் இரண்டு தரப்பையும் பார்வையாளர்களாக பார்த்தவர்கள் எல்லாம் அந்த அறிக்கையை பகிர்ந்தபடி “தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்த” தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

“ரீவிக்காரன் நல்ல யாவாரிதான்! விமர்சிச்சவையை வைச்சே விளம்பரப்படுத்துறான்” 

இந்த ரீவிக்காரனுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் எண்டதும் அது தமிழரின் உணர்வோட ரண்டறக் கலந்தது எண்டும் அதே நாளில் நிகழ்வை வைச்சால் பெரும் எதிர்ப்பு வரும் எண்டதும் முதலே தெரியாததே? அப்பிடித் தெரிஞ்சும் அந்தநாளை ஏன் தெரிவு செய்து எண்டத கதைக்க வேணும். இந்த தெளிவு வந்து அந்த யுக்தியைதான் எதிர்க்க வேணும். இல்லாட்டிப் போனால் இப்படியே எதிர்த்தும் அதுக்கு பிறகு ஆதரிச்சும் அதுக்கு நாங்களே விளம்பரம் செய்யிற நிலமைக்கு தள்ளப்படுவம். “விமர்சனத்தை உருவாக்கி அதை வைத்தே விளம்பரம் செய்யும் வியாபார யுக்தி” இது. என்றவாறு சுப்பர் இலையுதிர்கால மரங்கள் போல் இருந்த தன் மண்டையை குல்லாத் தொப்பியால் மறைத்தபடி நடக்கத் தொடங்கினார்.

#விடுப்பு #விடுப்பு_சுப்பர் #tvshow #hilights #followersreelsfypシ゚viralシfypシ゚viralシalシ

விடுப்பு_சுப்பர் ரசிகர்களும் உங்கள் போலதானே


 “ஈழத்துப் படைப்பு” என்று கூறிக்கொண்டு, அதன் தொடக்க நிகழ்வில் படக்குழுவே இந்தியக் கலைஞர்களை மட்டுமே சிறப்பு பிரதிநிதிகளாக நிறுத்தி, பார்வையாளர்கள் மட்டும் ஈழக் கலைஞர்களின் படைப்பை கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவில் நியாயம்?

ரசிகர்களும், உங்களைப் போலவே, ஈழக் கலைஞர்களை புறக்கணித்து இந்தியக் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பிழையில்லைத்தானே? என்று கேட்டவாறு சுப்பர் குல்லாத் தொப்பியை இழுத்து காதை மூடியவாறு நடையைக் கட்டினார்.

#விடுப்பு_சுப்பர்

November 5, 2025

நினைவில் கொள்வோம்


சுவிற்சர்லாந்தில் சட்டரீதியாக தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான தமிழ்ப்பாடசாலை பாசல் தமிழ்ப்பாடசாலை ஆகும். 1992 ஆம் ஆண்டு Freiplatzaktion (FPA) உதவி அமைப்பினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் FPA அமைப்பு ஆதரவளித்த போதிலும், பாசல் தமிழ்ப்பாடசாலை சுயாதீனமாகத் தனது கல்வித்தொழிலை மேற்கொண்டு வந்தது.

காலந்தோறும் FPA அமைப்பிற்கும் தமிழ்ப்பாடசாலைக்கும் இடையில் தொடர்பாளர் நியமிக்கப்பட்டு, அந்த ஒத்துழைப்பும் பணித் தொடர்ச்சியும் பேணப்பட்டன.

அத்தகைய தொடர்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டு, தமிழ்மாணவர்கள் தமது மொழிக் கல்வியை தொடர அரசமைப்பு, கல்வி மற்றும் சமூக மட்டங்களில் பல்வேறு உதவிகளை செய்து வந்தவர் திருமதி மீரியாம் (Miriam Solveig Forrer-Clauberg) ஆவார். 

இவர் தமிழ் மக்களின் இருப்பிற்கும் இளைய தலைமுறையினரின் வளர்ச்சியிலும் ஆழமான அக்கறையும் மேம்பாட்டிற்கும் உதவியுள்ளார். தனது இளமைக் காலத்திலேயே புலம்பெயர் சமூகம் தொடர்பாகவும் அகதிகளுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பல தளங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ்மொழி கல்விக்கான அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அவர், தமது 46 ஆவது வயதில் 22.10.2025 அன்று இயற்கை எய்தினார்.

தமிழர் கல்வி வளர்ச்சிக்கு அவர் வழங்கிய அருமையான பங்களிப்புகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவரின் சேவையை நெஞ்சில் நிறுத்தி மனமார்ந்த வணக்கத்துடன் நினைவு கூறுகின்றோம்.

நினைவுகளுடன்
இணுவையூர் மயூரன்