Pages

December 10, 2025

எயார் சிலோன் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரை

 எயார் சிலோன் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரை – 78 ஆண்டுகளாக நீளும் இலங்கைத் தீவின் வான்வழிப் பயண வரலாறு



இன்று 78 ஆண்டுகளுக்கு முன்பு, 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று, இலங்கையின் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள் எட்டப்பட்டது. அன்றுதான் இலங்கையின் தேசிய விமான சேவையான எயார் சிலோன் (Air Ceylon) தனது முதல் சர்வதேச வணிக விமானப் பயணத்தை மேற்கொண்டது.

சீதா தேவி – இலங்கை வானம் கடந்த முதல் சர்வதேச தூதர்

எயார் சிலோனின் டகோட்டா DC–3 வகை விமானமான “சீதா தேவி” ரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவின் சென்னை (Madras) நோக்கிப் புறப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் 16 பயணிகள் பயணித்தனர்.

விமானத்தை இயக்கியவர் கப்டன் பீட்டர் பெர்னாண்டோ இலங்கை விமானப் பண்பாட்டின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவர்.

1947 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா அரசு மூன்று DC-3 விமானங்களைப் பெற்றது. அவற்றுக்கு சீதா தேவி, விகாரமஹாதேவி, சுனேத்ராதேவி என வரலாற்று சிறப்புமிக்க பெயர்கள் சூட்டப்பட்டன. இவை இலங்கையின் முதல் சிவில் விமானப்படையின் அடித்தளத்தை அமைத்தன.

எயார் சிலோனில் இருந்து ஏர்லங்கா வரை

எயார் சிலோன் பல ஆண்டுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளை வழங்கியபோதிலும், 1978–79 காலத்தில் அதன் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு, புதிய தேசிய விமான சேவையாக Airlanka (ஏர்லங்கா) நிறுவப்பட்டது. இது இலங்கையின் வான்வழி தொடர்புகளை சர்வதேச அளவில் மறுபடியும் எழுச்சி பெறச் செய்தது.

ஏர்லங்காவிலிருந்து இன்றைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

1998 ஆம் ஆண்டு, ஏர்லங்கா நிறுவனம் Emirates உடன் இணைந்து, அதன் பெயரை “SriLankan Airlines” என மாற்றிக் கொண்டது.

புதிய பெயர், புதிய அடையாளம், மேம்பட்ட விமானப் படை, வலுவான சர்வதேச நெட்வொர்க்—all contributed to making SriLankan Airlines the national carrier recognized across the globe.

வானில் எழுந்து 78 ஆண்டுகள் – ஒரு வாழும் வரலாறு

1947 இல் “சீதா தேவி” ஆக ஆரம்பித்த பயணம், இன்று நவீன ஏர்பஸ் விமானங்களுடன் உலகம் முழுவதும் பறக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரை வளர்ந்து வந்துள்ளது.

ஒரு சிறிய தீவின் வான்வழிப் பயணக் கனவு, பல தலைமுறைகளின் உழைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இலங்கையின் அடையாளப் பெருமையுடன் இன்றும் தொடர்கிறது.



#AirCeylon #Airlanka #SriLankanAirlines #AviationHistory #SriLankaAviation #SeethaDevi #DC3 #SriLanka #OnThisDay #AviationHeritage #CeylonHistory #தமிழ்

December 9, 2025

“பூங்கோதை”



பூங்கோதை என அறியப்படும் கலா சிறீரஞ்சன் பேஸ்புக் மூலம்தான் அறிமுகமாகினார். பிரித்தானிய வாசியான ஒரு சிறுவர் பள்ளியின் ஆசிரியராக தன்னம்பிக்கையுள்ள துணிவான பெண்மணி இப்படித்தான் அவரை அவரது பதிவுகள் எனக்கு இனங்காட்டியது. 

இலண்டனில் இலக்கியச் செயற்பாடுகளில் தன்னார்வத்தோடு செயற்திறன் மிக்கவராக செயற்பட்ட இவர் ஊர் மீதும் சமூகம் மீதும் இயற்கை மீதும் அழகியல் மீதும் பற்றும் ஈர்ப்பும் கொண்டவர்.

ஊர் பற்றிய வேரைத் தேடும் பதிவுகள் அவரையும் என்னையும் ஒரு கோட்டில் இணைத்தன. 

ஒரு நாள் தான் தீராத நோயில் இருந்து மீண்டு வந்தது பற்றி ஒரு பதிவு அந்தப் பதிவு அனுதாபம் தேடியதாக இல்லாமல் தற்துணிவைத் தருவதாக ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கையை தருவதாக இருந்தது.

2022 ஏப்ரல் மாதம் நான் ஊர் போயிருந்த வேளையில் அவரும் ஊர் வந்திருந்தார். கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற அவரது “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்து சிறப்புப் பிரதியை பெறுமாறு அழைத்திருந்தார். சுவிசுக்கு மீண்டும் திரும்பும் நாளில் அவரது நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. எனது விமானப்பயணத்துக்கு சிலமணிநேரத்துக்கு முன்னதாக அந்த நிகழ்வு, அவரது அன்பான அழைப்பை ஏற்று நிகழ்வுக்கு சென்று சிறப்புப் பிரதியை பெற்று நிகழ்வு முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்பியிருந்தேன்.

பின்னர் தொடர்புகொண்டு தன் அன்பையும் நன்றியையும் தெரிவித்து படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

தங்கள் ஊர் மாம்பழம் பற்றி அதனை இயற்கை முறையில் பழுக்க வைத்து உண்பதைப் பற்றி பதிவிட்டிருந்தார்.

2023 இல் நாம் ஊர்போயிருந்த போது தென்மராட்சியில் நின்றிருந்தா, முன்னர் ஒரு தடவை அவரது பதிவொன்றில் நான் சொன்னதை நினைவில் வைத்து, பிள்ளைகளையும் அழைத்து வாங்கோ மாம்பழம் இயற்கை முறையில் பழுக்க வைத்துள்ளேன் என்று படமும் அனுப்பியிருந்தார். தொடர் பயணங்களால் அந்தப் பயணத்தில் அவரை திட்டமிட்டு சந்திக்க முடியாது போய்விட்டது.

இன்று மதியம் வந்த செய்தி இயற்கையை நேசித்த பூங்கோதை அவருக்கு மிகவும் பிடித்த இயற்கையுடன் இரண்டறக் கலந்தார் என்ற செய்தி!

தனக்காக யாரும் அனுதாபப் படக்கூடாது என்று விரும்புவர்.

அவர் அவரது எண்ணப்படி பூக்களின் உலகில் பூங்கோதையாய் என்றும் அழகிய தேவதையாய் உலாவரட்டும்.


நினைவுகளுடன் 

இணுவையூர் மயூரன்

November 26, 2025

மண் காத்த பெருமானை கண்ணெதிரே கண்டேன்

அது 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் காலை. வன்னி மண்டலத்தின் விசுமடு கிராமம் வழமைபோல இயங்கிக்கொண்டிருந்து. மார்கழி மாத குளிரையும் பனித்துகிலையும் கிழித்துக்கொண்டு என்றும் இல்லாதளவு பிரகாசத்தோடு கதிரவன் அந்த நாளின் அதிகாலையிலேயே ஒளிபரப்பத் தொடங்கிவிட்டான். விசுவமடுவில் உள்ள கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி அந்த அதிகாலை வேளையிலும் என்றுமில்லாதவாறு மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வழமையாக அங்கு உள்ளவர்களை விடவும் புதிதாகச் சிலர் வந்திருந்தனர். ஊடுருவி அனைத்தையும் ஆராய்ந்து கண்காணிக்கும் வல்லமை கொண்டவர்களாக அவர்களது தோற்றம் இருந்தது. அந்தப் பகுதி அந்தக் கணம் முதல் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் உள்ளது என்பதை தொடர்ந்த நடைமுறைகள் காட்டி நின்றன. நடைபெறுகின்ற செயற்பாடுகள் மனதுள் ஒருவித இனம் புரியாத மகிழ்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. என் மனதில் இருந்த உட்சபட்ச ஆசை இன்று எப்படியும் நிறைவேறும் என்ற நம்பிக்கை மனவெளியை நிறைத்து மகிழ்வைத் தந்தது.

அறியல் கல்லூரியின் அந்த கொட்டில் அறையில் அனைவரும் எங்கள் எங்கள் இருக்கைகளில் இருக்கின்றோம். காலை 9:00 மணி இருக்கலாம். கொட்டிலின் பின்புறத்தால் நுழைகின்றது அந்த உருவம். சாதாரண மனிதர்களைவிடவும் சற்று உயரம் குறைவு, உருண்ட கண்களில் பேரொளி கொண்ட பார்வை, உதடு பிரியாமல் மலர்ந்த மந்திரப் புன்னகை, ஒளி படர்ந்த பரந்த முகம் பின்னே ஒளி வட்டம் போன்ற பிம்பம் என் கண்களையே என்னால் நம்பமுடியாது விழிகளை அகல விரித்துப் பார்க்கின்றேன். ஓம்! அவரேதான். உலகத்தமிழர்கள் ஒருமுறையேனும் எட்ட நின்றேனும் கண்டு விட வேண்டும் என துடிக்கும் அவர் என் விழி வீச்சுக்குள் இதோ என் அருகே எனக்கும் அவருக்கும் இடையே ஒரு அடிக்கும் குறைவான இடைவெளி. விழிகளை மூடாது வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தன் இருக்கையில் வந்து இருக்கின்றார். ஒவ்வொருவராக அறிமுகமாகி உரையாடுகின்றோம். என் முறை வழமையாக இத்தகைய சந்திப்புக்களில் தத்தளிக்கும் என் தமிழ் அருவி ஊற்றாய் தங்கு தடையின்றி வருகின்றது. “வணக்கம் அண்ணா” என்று அழைத்து அறிமுகமாகி உரையாடுகின்றேன். 

போரைப் பற்றி போர் வெற்றிகளைப் பற்றி வீரப் பிரதாபங்களைப் பற்றி அவர் பேசவில்லை. புலம்பெயர்ந்து போய் திரும்பி வந்த இளைஞர் கூட்டத்தோடு ஒரு இயல்பான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார். நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல் சாதாரணமாக பதில் சொல்லிக் கதைக்கிறார். 

அவருடனான காலை உணவுப் பொழுது. மிகவும் நிசப்தமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அங்கு இருந்த ஒரு சிறுவன் மைலோவின் கடைசிச் சொட்டை ஊன்றி உள் இழுத்து உறுஞ்சுகின்றான். நிசப்தமாய் இருந்த அந்த இடத்தை அந்தச் சத்தம் நிறைக்கின்றது. அந்தத் தம்பியை திரும்பிப் பார்த்து இந்தத் தம்பி போலத்தான் எனக்கும் அந்த அடிச் சொட்டை உறுஞ்சிக் குடிக்க விருப்பம் சபை நாகரீகம் கருதி இருக்கிறேன் என்றார். சபை கலகலத்துச் சிரித்தது.

நிறைய விடயங்கள் உரையாடினோம். அவர் ஆசானாகவும் நாங்கள் மாணவர்களாவும் இருந்து கற்கும்

பலருக்கும் கிடைக்காத பேறு எனக்கு கிடைத்தது. 


“மண் காத்த பெருமானின் கண் எதிரே கண்டேன்

மாசற்ற திருவுருவின் முன் அமர்ந்து இருந்தேன்”

#ஈழத்துப்பித்தன்

November 20, 2025

பிராம்ப்டன் நகரம் தமிழ் ஈழ தேசியக் கொடியை அங்கீகரிப்பு



பிராம்ப்டன் நகரம் தமிழ் ஈழ தேசியக் கொடியை அங்கீகரிப்பு: தமிழர்களுக்கு ஒரு சிறு ஒத்தடம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரம், தமிழ் ஈழ தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. கலாச்சார மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, உள்ளூர் தமிழ் சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம், அரசியல் ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு தீர்மானமாக இல்லையெனினும், நீண்ட காலமாக துன்பங்களையும் துயரங்களையும் மனச்சோர்வையும் இயலாமையையும் அனுபவித்த தமிழர்களுக்கு ஒரு மனப்பூர்வமான ஆதரவாகக் கருதப்படுகிறது. உலகத் தமிழரின் சமூக, பண்பாட்டு அடையாளத்துக்கு மதிப்பளிக்கப்படும் ஒரு சிறிய படியாக பலர் இதைப் பார்க்கின்றனர்.

உள்ளூர் தமிழ் சமூகங்கள், தங்கள் வரலாற்று நினைவுகளும் துயர அனுபவங்களும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தங்கள் சமூகத்தின் குரல் கேட்கப்படுகிறதென்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.

பிராம்ப்டனில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு இது ஒரு முக்கியமான குறியீட்டு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இணுவையூர் மயூரன் 
20.11.2025

#தமிழ் #தமிழீழம் #தமிழர்கள்அடையாளம் #TamilEelam #Brampton #TamilCommunity #CulturalRecognition
#தமிழர்பெருமை #தமிழ்புலம்பெயர் #EelamTamils #news #செய்தி #Canada #Brampton #BramptonCity
#CanadaTamils #TamilDiaspora்#TamilCommunity
#TamilEelam #தமிழீழம் #தமிழர்கள் #EelamTamils
#TamilIdentity #CulturalRecognition #TamilPride #TamilHistory #TamilRights #TamilInCanada

November 16, 2025

புத்தனின் ஆசை


 அசைவற்ற ஆசையை சொல்லி

அவா நீக்கப் போதித்தவர் - அவர் வழி

அந்த மார்க்கம் ஏந்தியவர்கள் இன்று

மண் ஆசை மாயையில் மிதக்கின்றனர்.


துறவின் தொண்டை தாங்கி வந்த கைகள்

தரையைத் தழுவி எதற்கோ ஏங்க,

அதே புத்தனின் பெயரைச் கொண்டு

ஆக்கிரமிப்பின் வழி அடியெடுத்து நிற்கின்றனர்


தியாகத்தின் தீபம் ஏற்ற வேண்டியோர்

தம் கொள்கைக்கே தீ வைத்ததுபோல்,

போதனையின் புனிதத்தை மறந்து

பொய்யான பேராசையில் கலந்து போகின்றனர்.


#ஈழத்துப்பித்தன்

16.11.2025


படம்: எங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள புத்தரின் ஓவியம்.

“புத்தரைத் தமிழர்கள் யாரும் வெறுப்பதில்லை;

புத்தரின் பெயரும் சின்னமும் நிலப்பரப்பு ஆக்கிரமிப்புக்காக பயன்படுத்தப்படும்போதே அதற்கு எதிர்ப்புத் தோன்றுகிறது.”


#புத்தர்சிலை #திருகோணமலை #buddha #BreakingNews

November 15, 2025

சுவிஸ்ஸில் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்படும் வாடகை குடைகள் இருப்பது தெரியுமா?

 

நான் இன்று Kiosk-ல் பார்த்த ஒரு விடயம் எனக்கு பிடித்தது…” 

சுவிஸ் நாட்டில் உள்ள பல “Kiosk” கடைகளில் இத்தகைய வாடகைக் குடைகளை காணலாம்.

இவை வாடகைக்கு வழங்கப்படும் குடைகள்.

ஒரு சிறிய முற்பணமும் வாடகைக் கட்டணமும் செலுத்தி குடையை எடுத்துச் செல்லலாம். பின்னர், இதே முறையில் வாடகை வழங்கும் எந்தக் கடையிலும் குடையை திருப்பிக் கொடுத்து, நீங்கள் செலுத்திய முற்பணத்தை மீண்டும் பெறலாம்.

இந்தக் குடையின் சிறப்பு என்னவென்றால், இது மீள்சுழற்சி செய்யப்பட்ட நெகிழி போத்தல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடை தயாரிக்க நான்கு PET போத்தல்கள் பயன்படுத்தப்படுகிறதாம். பிளாஸ்டிக் பயன்பாடு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் இயங்குகிறது.

இந்த மாதிரி வாடகை முறை வேறு நாட்டிலும் உள்ளதா ?


— இணுவையூர் மயூரன்

#plastik #schirm #umbrella #recycling #followersreelsfypシ゚viralシ #viralシalシ  #Switzerland #Recycling #EcoFriendly #Umbrella #PlasticFree #Sustainability #தமிழ் #Environment #GreenLiving #Kiosk #PET #Reelsதமிழர் #TamilBlog

November 11, 2025

தேநீர்

தேநீர் பிரியனான எனக்கு “நாட்டில் இருந்து கொண்டு வந்தேன் குடித்துப்பார்” என எத்தியோப்பிய நாட்டுத் தோழி கடந்த கோடை விடுமுறையின் பின் ஒரு வகையான தேயிலையை கொண்டு வந்து தந்திருந்தாள்.

அதை மறந்தே போனேன். இன்றுதான் அதனை சுவைத்துப் பார்க்க நாள் கூடியது.

பொதியை திறந்தபோதே கதம்பமான வாசனை நாசியை நிறைத்தது. சுடுநீரில் ஏழு முதல் பத்து நிமிடம் வரை ஊற வைத்து அருந்துமாறு வழிகாட்டி சொன்னது. அதன் படி தேநீரை தயாரித்தேன். 

அந்தத் தேயிலை செந்நாரைக்கனிகள் (Rosehip), செவ்வரத்தம்பூ, அப்பிள், தோடம்பழத்தோல், இளஞ்சிப்பூண்டு (லெமன் கிறஸ்), பீற்றூட், சூரியகாந்தி இதழ்கள், செம்புற்றுச்செடியின்இலை, பூனைக்கால்மலர், கருந்தேணி/செந்தேணி இலைகள், புதினா இலைகள், நீலத்தாமரை மலர்கள் போன்ற பல விதமான பொருட்களை உலர்த்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனீ சேர்க்காது கண்ணாடிக் கோப்பையில் தேநீரின் வாசனையை நுகர்ந்து வர்ணத்தை ரசித்து சுவைக்கவே எனக்குப் பிடிக்கும். 

இந்தத் தேநீரையும் அப்படித்தான் சுவைத்தேன். மிதமில்லாத புளிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு வித சுவை. குடித்து முடித்த பொழுது ஒரு புத்துணர்சசி ஒட்டிக்கொண்டது.

#இணுவையூர்_மயூரன்

11.11.2025


#tea #நேநீர் #tee #followersreelsfypシ゚viralシfypシ゚viralシalシ #evning