Pages

December 4, 2024

பாலசிங்கம் வாத்தியார்


நான் சமைக்கிறது நல்லா இருக்கெண்டு சாப்பிட்டுப் பார்த்தவை சொல்லினமெண்டா அதுக்கு காரணமும், விருப்பமே இல்லாமல் ஆண்டு 3 இல் சித்திரத்துக்கு பதிலா நான் சங்கீதத்த தெரிவு செய்ததுக்கும் காரணம் இவர்தான். 

அதுக்காக இவர் சமையல் வாத்தியோ சங்கீத வாத்தியோ இல்லை. 

நாங்கள் படிக்கிற காலத்திலைதான் வாத்தியார்மாரை மாஸ்ரர், சேர் என்று கூப்பிடுற நாகரீகம் ஆரம்பமான காலம். ஆனாலும் அங்கு படிப்பித்த சிலர் வாத்தியார் என அழைக்கப்பட்டார்கள் கணபதிப்பிள்ளை வாத்தியார், குணரத்தினம் வாத்தியார், தட்சணாமூர்த்தி வாத்தியார் அந்த வரிசையிலை இவர் பாலசிங்கம் வாத்தியார். 

பாலசிங்கம் வாத்தியார் கண்டிப்பான பேர் வழி. எங்கள் பள்ளிக்கூடத்திலை சித்திரம், விவசாயம், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பாடங்கள் இவரது படிப்பிக்கிற பிரதான பாடங்களாஇருந்தது. 

பாலசிங்கம் வாத்தியார் வெளுத்துப்போடுவார் என்ற பாடசாலையின் பொதுவான கருத்து எங்களை அவர் பக்கம் அண்ட விடவில்லை. ஆண்டு மூண்டில் சித்திரபாடம்  அவர்தான் படிப்பித்ததால் அவரின்ர அடிக்குப் பயந்து நானும் விஸ்வமூர்த்தியும் குணமலர் ரீச்சரிடம் சங்கீதம் படிக்கப் போயிட்டம். பிறகு ஆண்டு அஞ்சில கோம்சயன்ஸ் அதுதான் சமையல் பாடமோ விவசாயமோ எண்டு வர விவசாய பாடத்துக்கு வாத்தியாரா இருந்த பாலசி்ங்கத்தாருக்குப் பயந்து நானும் விஸ்வமூர்த்தியும் சமையல் பாடத்தை தெரிவு செய்தம்.

ஆண்டு அஞ்சு வரையும் வகுப்புகள் இருந்த எங்கட பள்ளிக்கூடத்திலை சண்டை காலம் என்றதாலை வெளியூர் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்ப தாய் தகப்பன் பயப்பிட்டதாலை ஆறாம் வகுப்பு புதுசா தொடங்கப்பட்டுது. இணுவில் அமெரிக்கன் மிசனிலை ஆண்டு ஆறு தொடங்கப்பட்டு முதன் முதலாக படிச்ச பெருமை எங்கட பிரிவைத்தான் சேரும். ஆனா பகிடி என்னெண்டா இவ்வளவு காலமும் பாலசிங்கம் வாத்தியாரிட்ட தப்பின எங்களுக்கு ஆண்டு ஆறில் நூலகமும் உடற்பயிற்சியும் பாலசிங்கத்தார்தான். அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. அப்ப எங்கட பள்ளிக்கூடத்திலை தனியான நூலகம் இல்லாத்தாலை அவர் எங்களுக்கு நல்ல வர்ணனையோட கதை சொல்லுவார். அதுக்கு பிறகு எங்களுக்கு அவரை நல்லாப் பிடிச்சுப் போச்சு. எங்களோட பம்பலடிச்சு பகிடியாய் கதைப்பார்.

அவரைப்பற்றி எனது ஊசியிலையும் உன்னதம் பெறும் காலம் நூலில் எங்கள் ஊரின் அடையாளம் சீனிப்புளிய மரம் என்ற கவிதையில் எழுதியிருப்பேன்.

“பாலசிங்கம் வாத்தியார் தான் படித்த கதைகளை எல்லாம் சுவை கலந்து சொல்ல நாம் வாய் பிளந்து கேட்டிருந்ததும் இந்த மரநிழலில்தான்” 

இனி அவர் நினைவுகளில் மட்டுமே வாழ்வார் என்ற செய்தியை இந்த வார இறுதியில் சமூக வலைத்தளம் காவி வந்தது. 

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


இணுவையூர் மயூரன்

04.12.2024

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.