14.09.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் (IITA)வின் வெள்ளி விழா நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்.
த.தே. தலைவரின் தொலை நோக்குச் சிந்தனையில் பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் சுவிற்சர்லாந்தி்ல் கடந்த 2000மாம் ஆண்டு ஐரோப்பா வாழ் கலையாசிரியர்களை ஒருங்கிணைத்து பயிற்சிப்பட்டறையும் கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது. அதன் இறுதி இலக்காக “அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம்” தோற்றம் பெற்றது.
2000மாம் ஆண்டு “பூபாளம்” எனும் கலை நிகழ்வினூடாக “அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம்” மக்கள் மத்தியில் அறிமுகமானது.
இந்த அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகமானது நுண் கலை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை நடாத்தி 2012 இல் முதலாவது மதிப்பளிப்பு நிகழ்வை சூரிச் மாநிலத்தில் நடாத்தியது.
முதலாவது பட்டமளிப்பில் நடன மற்றும் வாய்ப்பாட்டுத்துறையில் தரம் ஏழு வரை தோற்றிச் சித்தியடைந்தோருக்கான “கலை வித்தகர்” என்ற பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்படார்கள்.
பின்னைய காலங்களில் நுண்கலைகளான மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்தியங்களை பயிலும் மாணவர்கள் தொகை அதிகரிக்க அத் துறைகளுக்கான தேர்வுகளும் நடைபெறத் தொடங்கின.
இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பிலே பரதம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகிய பாடங்களில் தங்கள் கற்கையை நிறைவு செய்த மாணவர்கள் “கலைமாமணி” என்ற பட்டயத்தை உரித்தாக்கியுள்ளார்கள்.
படத்தில் மிருதங்கக் கற்கையை நிறைவு செய்த ஆசிரியர் ருக்ஷனின் மாணவர்கள் “கலைமாமணி” விருதப் பட்டயத்தை பெற்ற மகிழ்வில்.
ருக்சனைப் பற்றி ஏற்கனவே பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ருக்ஷன் ஶ்ரீரங்கநாதனும் சுவிற்சர்லாந்தின் இரண்டாந்தலைமுறைக் கலைஞன். இங்கே கற்று நாடளாவியரீதியில் பல மாணவர்களை உருவாக்கி இன்று அவர்களையும் ஆசிரியர் தரத்துக்கு உயர்த்தி நிற்கும் ஒரு திறன் மிகு ஆசிரியர்.
ஜரோப்பாவில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் மிருதங்கத்தில் முதன் முதலாக பட்டயச் சான்றிதழ் பெறும் பெண்ணாக செல்வி ஹர்ஷா பாலகுமரன் விளங்குகின்றார்.
பட்டயம் பெற்ற அனைத்து கலைஞர்களைக்களும் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.
இணுவையூர் மயூரன்
15.09.2025